தமிழக பாஜக மீது அதிருப்தி? அண்ணாமலை ராஜினாமாவும், மேலிட இழுபறியும்.. தீவிர ஆலோசனையில் தலைமை!
BJP Former Leader Annamalai Resignation: தமிழக பாரதீய ஜனதா கட்சி குறித்து அண்ணாமலை அதிருப்தி தெரிவித்திருந்த நிலையில், அவரது ராஜினாமா குறித்து பாஜக தலைமை தீவிர ஆலோசனை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால், அவரது ராஜினாமா கடிதத்தை பாஜக ஏற்கவில்லையாம்.
கரூர் மாவட்டத்தை சேர்ந்த அண்ணாமலை ஐபிஎஸ் அதிகாரியாக கர்நாடக மாநிலத்தில் பணிபுரிந்து வந்தார். பின்னர், தனது பதவியை ராஜினாமா செய்த அவர் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார். இதை தொடர்ந்து, தமிழகத்தின் பாஜக மாநில தலைவராக நியமனம் செய்யப்பட்டார். அந்த பதவியில் சிறப்பாக செயல்பட்டு தமிழகத்தில் பாஜகவின் செல்வாக்கை உயர்த்தி காண்பித்தார். பின்னர், திடீரென அந்த பதவியில் இருந்து அண்ணாமலை விடுவிக்கப்பட்டு, நயினார் நாகேந்திரன் தமிழக பாஜக மாநில தலைவராக நியமனம் செய்யப்பட்டார். இதை தொடர்ந்து, அண்ணாமலைக்கு பாஜகவில் வேறு எந்த பொறுப்பு மற்றும் பதவி ஆகியவை வழங்கப்படாமல் இருந்து வருகிறது. இதனால், கட்சியில் பெரிதளவில் ஈடுபாடு காட்டாமல் இருந்து வந்தார். இந்த நிலையில், நேற்று முன்தினம் திடீரென டெல்லி புறப்பட்டு சென்ற அண்ணாமலை அங்கு பாஜக தேசிய தலைவர் நிதின் நபீனை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டு இருந்தார்.
அண்ணாமலையிடம் சமாதான பேச்சுவார்த்தை
அப்போது, அவரிடம் 5 பக்க ராஜினாமா கடிதத்தை அளித்ததாகவும், தமிழக பாஜக நிலவரம் தொடர்பாக பேசியதாகவும், இதில், தனக்கு கட்சியில் எந்த விதமான அங்கீகாரமும், பதவியும் அளிக்காமல் இருப்பதை அண்ணாமலை சுட்டிக்காட்டியதாக தகவல்கள் வெளியாகின. இதைத் தொடர்ந்து, நேற்று மாலை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அண்ணாமலை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தி இருந்தார். இதில், அண்ணாமலையின் ராஜினாமா கடிதத்தை பாஜக தலைமை ஏற்கவில்லை எனவும், அவரை சமாதானம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகின.
மேலும் படிக்க : தனிப்பட்ட குற்றங்களுக்கு தமிழக அரசை எப்படி குறை சொல்ல முடியும்? அமைச்சர் நிர்மல் குமார் கேள்வி




தமிழக பாஜக குறித்த அண்ணாமலை அதிருப்தி
இந்த நிலையில், அண்ணாமலை தரப்பில் ராஜினாமா கடிதம் கொடுக்கப்பட்டிருந்தாலும், அதனை பாஜக தலைமை முறைப்படியாக ஏற்கவில்லை. அத்துடன் தமிழக பாஜக தலைவர்கள் மீதான அதிருப்தியை அண்ணாமலை வெளிக்காட்டி இருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன. எனவே, இது தொடர்பாக பாஜக தலைமை அண்ணாமலையுடன் தொடர்ந்து சமரச பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இதில், ஏதேனும் முடிவு எட்டப்படவில்லை எனில் அண்ணாமலையின் ராஜினாமா கடிதத்தை முறைப்படி ஏற்றதாக, பாஜக தலைமையில் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என்று கூறப்படுகிறது.
தீவிர ஆலோசனையில் பாஜக தலைமை
இதனிடையே, அண்ணாமலை பல்வேறு குற்றச்சாட்டை முன்வைத்த நிலையில், தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனை உடனடியாக டெல்லிக்கு வருமாறு பாஜக தலைமை உத்தரவிட்டிருந்தது. அதன்படி, அவரும் டெல்லியில் முகாமிட்டுள்ளார். இதன் மூலம், தமிழக பாஜக நிலவரம் மற்றும் அண்ணாமலையின் நிலைப்பாடு உள்ளிட்டவை குறித்து பாஜக தலைமை ஆலோசனை மேற்கொண்டு முடிவு எடுக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இதில், பாஜகவில் இருந்து அண்ணாமலை வெளியேறும் திட்டத்தில் இருப்பதாகவும், புதிய கட்சி தொடங்குவது தொடர்பாக நாளை அவருடைய பிறந்தநாள் விழாவில் அறிவிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
மேலும் படிக்க: “நெஞ்சில் குடியிருக்கும் தளபதிக்கு” வீட்டு பூஜை அறையில் சிலை.. தினமும் கற்பூரம் காட்டி உருகும் தவெக நிர்வாகி.. எங்கு தெரியுமா..!