தமிழக சட்டப்பேரவையை சினிமா கொட்டகையாக மாறியுள்ளனர்.. முன்னாள் அமைச்சர் ரகுபதி கடும் தாக்கு!
Former Minister Raghupathy Criticized CM Vijay : தமிழக சட்டப்பேரவை தற்போது திரைப்பட கொட்டகையாக மாறி உள்ளதாக திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னாள் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்தார். அவர் கூறியவற்றை இந்தப் பதிவில் சற்று விரிவாக பார்க்கலாம் .
தமிழக முதல்வர் விஜய்யை மிரட்டும் வகையில் பேசியதாக விளாத்திகுளம் திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவரை பார்ப்பதற்காக முன்னாள் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி வந்திருந்தார். இந்த சந்திப்பு முடிவடைந்த நிலையில், அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: திமுக பொதுக்கூட்டத்தில் எலும்பை முறித்து விடுவேன் என்று கூறியது பேச்சுவாக்கில் வந்த வார்த்தையாகும். டிஎஸ்பி மூலமாக நீதித்துறைக்கு அழுத்தம் கொடுத்து இந்த சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கரூர் சம்பவத்தில் யாருக்கும் வராத கண்ணீர், ஜனநாயகன் படத்தை பார்த்து வந்துள்ளது. தமிழக சட்டப்பேரவை தற்போது ஒரு திரைப்பட கொட்டகையாக மாறி உள்ளது. இது தமிழக மக்களை காப்பாற்றும் அரசு மாதிரி தெரியவில்லை. சினிமா பார்க்கும் அரசாகவே உள்ளது. முதல்வர் பேரவையில் பேசும்போது சட்டப்பேரவை கதவுகளை மூட வேண்டும் என்று கூறியது உரிமை மீறல் இல்லையா.
பேரவை கதவை மூடுவதற்கு என்ன உரிமை உள்ளது
கதவை மூடுவதற்கு யாருக்கு என்ன உரிமை உள்ளது என்பதை விளக்க வேண்டும். எலும்பை முறிப்பேன் என்று சொன்னது மட்டும் குற்றம் ஆகுமா. முதல்வர் கதவை மூட சொல்வது நியாயமா என்றும் கேள்வி எழுப்பினார். மேலும் சட்டப்பேரவையில் சில குற்றச்சாட்டுகள் வைக்கப்படும் போது வெளிநடப்பு செய்வதற்கான உரிமை சட்டமன்ற உறுப்பினர்களுக்கு உள்ளது. இந்த விவகாரத்தில் பேரவை தலைவர் ஒரு தலைப்பட்சமாக செயல்பட்டு வருகிறார். தனது கடைசி காலத்தில் கிடைத்திருக்கும் வாய்ப்பை சட்டப்பேரவை தலைவர் ஜே. சி. டி. பிரபாகர் இவ்வாறு பயன்படுத்தி வருகிறார்.
மேலும் படிக்க: பழனி கோயில் நிலம் ரூ.100 கோடி என்பதே தெரியாது.. அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் அதிரடி விளக்கம்!




தவெக ஆட்சியில் பேசுவதற்கு கூட உரிமையில்லை
ஆங்கிலேயர் ஆட்சியில் கூட மக்களுக்கு பேச உரிமை இருந்தது. ஆனால், தற்போதைய தமிழக வெற்றிக் கழக ஆட்சியில் பேசுவதற்கு உரிமை இல்லாமல் உள்ளது. தற்போது, அரசை விமர்சித்தாலே வழக்கு போடும் நிலை தான் உள்ளது. தமிழக கோவில்களின் நிலங்களை சூறையாடி வரும் ஆட்சியாக தவெக ஆட்சி உள்ளது. மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து 3- ஆவது இடத்துக்கு தள்ளப்பட உள்ளதற்கு காரணம் பாரதிய ஜனதா கட்சியின் ஸ்லீப்பர் செல்லாக ஆட்சியாளர்கள் செயல்படுவது தான் காரணமாகும்.
பாஜகவை எதிர்த்து அரசியல் செய்யும் இயக்கம் திமுக மட்டுமே
தமிழக மக்களை பற்றி சிந்திப்பதற்கு யாருக்கும் நேரமில்லை. பாஜகவை எதிர்த்து உண்மையான அரசியல் செய்யும் ஒரே கட்சி திமுக மட்டுமே. நாங்கள் ஒருபோதும் பின் வாசல் வழியாக ஆட்சியைப் பிடிக்க மாட்டோம் என்று தெரிவித்தார்.
மேலும் படிக்க: விஷப் பரீட்சையில் இறங்க வேண்டாம்.. முதல்வர் விஜய்யின் கர்நாடக பயணத்துக்கு மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!