கன்னத்தில் கை வைத்தது குற்றமா? எஸ்பிஐ வங்கி மேலாளருக்கு பளார்.. மு. க. அழகிரி மகள் மீது வழக்கு பதிவு!
MK Alagiri Daughter Kayalvizhi : சென்னையில் எஸ். பி. ஐ. வங்கி மேலாளரை தாக்கியதாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், மு.க. அழகிரி மகள் கயல் விழி மீது அடையாறு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .
தமிழகத்தின் முன்னாள் முதல் அமைச்சரும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவருமான மு. க. ஸ்டாலின் சகோதரரான மு.க. அழகிரியின் மகள் கயல்விழி. இவருக்கு அடையாறில் சொந்தமாக கட்டிடம் மற்றும் வளாகம் அமைந்துள்ளது. இதில், பாரத ஸ்டேட் வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியின் மேலாளராக ஹர்ஷீன் சிங் பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில், இந்த கட்டிடத்தில் இயங்கி வந்த லிஃப்ட் செயல்படவில்லை என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக, கட்டிடத்தின் உரிமையாளரான கயல்விழியிடம், வங்கியின் மேலாளர் ஹரஷீன் சிங் புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கயல்விழி தெரிவித்துள்ளார். மேலும், இது தொடர்பாக பேசுவதற்காக வங்கியின் மேலாளர் அறைக்கு கயல்விழி உள்ளிட்ட இருவர் சென்றனர். அங்கு, மேலாளரிடம், கயல்விழி கோபமாக பேசியதாக தெரிகிறது.
வங்கி மேலாளர் கன்னத்தில் அறைந்த கயல்விழி
இதனை, வங்கியின் மேலாளர் ஹர்ஷீன் சிங் கன்னத்தில் கை வைத்தவாறு ஆசுவாசமாக கேட்டுக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இதை பார்த்து கோபமடைந்த மு. க. அழகிரியின் மகள் கயல்விழி நான் பேசும்போது கன்னத்தில் கையை வைத்துக்கொண்டு உட்கார்ந்து இருப்பாயா என கேட்டு ஆவேசமாக வங்கி மேலாளரின் கன்னத்தில் அடித்தார். இதனை சற்றும் எதிர்பாராத வங்கியின் மேலாளர் சிறிது நேரம் அதிர்ச்சியில் உறைந்து போனார்.
மேலும் படிக்க: “அரசு முகாமில் அமைச்சரின் சகோதரர் அதிரடி ஆய்வு!”.. மாநகராட்சி ஆணையருடன் ஆலோசித்ததால் புதுக்கோட்டையில் சர்ச்சை!




மு.க. அழகிரி மகள் மீது போலீசார் வழக்குப்பதிவு
உடனே, கயல்விழியுடன் வந்திருந்த ஆண் நபர் ஒருவர் அவரை சமாதானம் செய்து அங்கிருந்து அழைத்துச் சென்றார். இது தொடர்பாக, பாரத ஸ்டேட் வங்கியின் மேலாளர் ஹர்ஷீன் சிங் அடையாறு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரியின் அடிப்படையில், மு.க. அழகிரியின் மகள் கயல்விழி மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், மேலாளரின் அறையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் கயல்விழி தாக்குதல் நடத்திய சம்பவம் பதிவாகி இருந்தது.
மேலாளரை தாக்கிய வீடியோ காட்சிகள் வைரல்
அந்த காட்சிகளை போலீசார் கைப்பற்றி ஆதாரத்தின் அடிப்படையில் அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலாளர் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பான சிசிடிவி கேமரா காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. வங்கியில் மேலாளரை கன்னத்தில் அறைந்த சம்பவம் வங்கி ஊழியர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மேலும் படிக்க: MLA-க்களிடம் பேரம்?.. செந்தில் பாலாஜி, அசோக் குமாரிடம் தனித்தனியாக போலீஸ் கிடுக்கிப்பிடி.. !