அதிமுகவில் மீண்டும் அதிர்ச்சி.. கூட்டணியில் இருந்து மற்றொரு கட்சி அவுட்!
Puratchi Bharatham Party : அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து புரட்சி பாரதம் கட்சி விலகியதாக அந்த கட்சியின் தலைவர் பூவை ஜெகன் மூர்த்தி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் மேலும் கூறிய கருத்துக்ககளை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் புரட்சி பாரதம் கட்சி அங்கம் வகித்து வந்தது. தற்போது, இந்தக் கட்சியானது அதிமுக கூட்டணியில் இருந்து திடீரென விலகி உள்ளது. தமிழக சட்டமன்ற தேர்தலோடு இந்த கூட்டணி முடிந்ததாக புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் பூவை ஜெகன் மூர்த்தி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் பூவை ஜெகன் மூர்த்தி செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு பின்னர் அதிமுகவுடன் நாங்கள் கூட்டணி அமைக்கவில்லை. அவர்களிடம் கூட்டணி தொடர்பாகவும் பேச்சுவார்த்தை நடத்தவில்லை. தமிழக வெற்றிக் கழக அரசு அமைந்து 3 மாதங்களே ஆகிறது. வரும் காலங்களில் தான் அந்த அரசின் செயல்பாடுகள் குறித்து கருத்து தெரிவிக்க முடியும். குறைந்த காலத்தில் யாருடைய செயல்பாடுகளையும் குறைத்து மதிப்பிட முடியாது. அது தொடர்பாக கருத்தும் தெரிவிக்க முடியாது.
தமிழகத்தில் பாரம்பரியமாக அரசு நிகழ்ச்சிகளில் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படுகிறது. நிகழ்ச்சியின் முடிவில் தேசிய கீதம் பாடப்படும். இதனை நடைமுறைப்படுத்த வேண்டும். கடந்த திமுக ஆட்சியில் அனைத்து கட்சி கூட்டம் கூட்டப்பட்டு அதில் காவிரி விவகாரம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டிருந்தது. அத்துடன் சட்டமன்ற உறுப்பினர்களை டெல்லியில் சென்று மத்திய அமைச்சரை சந்தித்து கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்தது.
மேகதாதுவில் தமிழகத்தின் அனுமதி இல்லாமல் அணை கட்ட முடியாது என்று சட்டமாக உள்ளது. எனவே, கர்நாடகா அரசு என்ன கூறினாலும், மேகதாவில் அணை கட்ட முடியாது. தமிழக அரசின் உத்தரவு இன்றி அணை கட்ட முடியாது என்பது உறுதியாகும். இருந்தாலும், அனைவரும் கூறுவது போல, தமிழக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி காவிரி நீர் விவகாரம் தொடர்பாக கருத்துக்களை கேட்டறிய வேண்டும். கர்நாடகா அரசின் ஒட்டுமொத்த பதிலை தமிழக அரசும் அதனை பின்பற்ற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
கர்நாடகாவில் காங்கிரஸ் அரசு இருப்பதால் தமிழக வெற்றிக்கழக அமைச்சரவையில் இரு காங்கிரஸ் அமைச்சர்கள் இடம் பெற்று இருப்பதால், காவிரி நீர் விவகாரம் மற்றும் மேகதாது அணை விவகாரத்தை சமூகமாக பேசி முடிவுக்கு கொண்டு வரலாம். இதையும் மீறி கர்நாடகா அரசு தண்ணீர் தரவில்லை எனில் தமிழகத்தை சேர்ந்த 2 அமைச்சர்களும் தங்களது பதவிகளை ராஜினாமா செய்து எதிர்ப்பு தெரிவிக்கலாம்.