தலைமை செயலகத்தில் பெரும் பரபரப்பு.. தாய்-மகள்கள் எடுத்த விபரீத முடிவு.. அலறி அடித்து ஓடிய பாதுகாப்பு படையினர்!
Chennai Secretariat 3 Women Attempt Self Harm : சென்னை தலைமை செயலகத்தில் முதல் அமைச்சரின் தனிப்பிரிவில் மனு அளிக்க வந்த திருச்சியை சேர்ந்த பெண் மற்றும் அவரது இரு மகள் தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றனர் .
தமிழக அரசின் தலைமைச் செயலகம் சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் செயல்பட்டு வருகிறது. இங்கு தினந்தோறும் பல்வேறு கோரிக்கைகள் மற்றும் பிரச்சனைகள் தொடர்பாக பொதுமக்கள் முதல்வர் மற்றும் அமைச்சர்கள், அதிகாரிகள் உள்ளிட்டோரை நேரில் சந்தித்து மனு அளிப்பது வழக்கமாகும். அந்த வகையில், திருச்சி மாவட்டத்தை சேர்ந்த இஸ்லாமிய சமுதாயத்தை சேர்ந்த பெண் ஒருவர் தனது இரு மகள்களுடன் சென்னை தலைமை செயலகத்தில் அமைந்துள்ள முதல் அமைச்சரின் தனிப்பிரிவில் புகார் அளிப்பதற்காக இன்று வியாழக்கிழமை ( ஜூலை 30- ஆம் தேதி) வந்திருந்தனர். இவர்கள், புகார் மனு அளிப்பதற்காக காத்திருந்த நிலையில், திடீரென, மூன்று பெண்களும் மயங்கி விழுந்தனர். இதை பார்த்த தலைமைச் செயலக ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் கடும் அதிர்ச்சிக்குள்ளாகினர். தொடர்ந்து, அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு அவசர ஆம்புலன்ஸ் மூலமாக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
வாடகை வீட்டை காலி செய்யுமாறு மிரட்டல்
இது தொடர்பாக போலீசார் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். இதில், திருச்சியில் தாய் மற்றும் இரு மகள்கள் வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர். இந்த நிலையில், அவர்களை உடனடியாக காலி செய்யுமாறு வீட்டின் உரிமையாளர் மிரட்டல் விடுத்து வருவதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக, அவர்கள் அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்ததாக தெரிகிறது. ஆனால், அந்த புகாரின் மீது போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
மேலும் படிக்க: “அதிமுக, பாஜக தயவில் 4 எம்எல்ஏ-க்கள்!”.. அன்புமணி ராமதாஸுக்கு மாணிக்கம் தாகூர் கடும் கண்டனம்!




தூக்க மாத்திரை உட்கொண்டு தற்கொலை முயற்சி
மேலும், வீட்டின் உரிமையாளரிடம் பேச்சுவார்த்தை மேற்கொண்டும் அவர் இறங்கி வரவில்லை என்று கூறியதாக தெரிகிறது. இதன் காரணமாக, முதல்வரின் தனி பிரிவில் புகார் மனு அளிக்க வந்த தாய் மற்றும் இரு மகள்கள் முன்னதாகவே தூக்க மாத்திரைகளை உட்கொண்டு விட்டு வந்துள்ளனர். இந்த நிலையில் தான் தலைமைச் செயலகத்தில் மூவரும் மயங்கி விழுந்து தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக தலைமைச் செயலக போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தொடர்ந்து நடக்கும் தற்கொலை முயற்சி சம்பவங்கள்
எப்போதும் பரபரப்பாக காணப்படும் தலைமை செயலகத்தில் 3 பெண்கள் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதேபோல, கடந்த சில நாட்களுக்கு முன்பு தலைமைச் செயலகம் முன்னதாக பெண் ஒருவர் திடீரென தான் கொண்டு வந்திருந்த பெட்ரோலை ஊற்றி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் நிகழ்ந்திருந்தது. இதைத் தொடர்ந்து, தற்போது மீண்டும் ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: மின் கட்டணக் குளறுபடி விவகாரம்.. 3.7 லட்சம் வீடுகளில் நேரடியாக ஆய்வு செய்ய மின்வாரியம் உத்தரவு!!