மின் கட்டணக் குளறுபடி விவகாரம்.. 3.7 லட்சம் வீடுகளில் நேரடியாக ஆய்வு செய்ய மின்வாரியம் உத்தரவு!!
TNEB High Bill Complaints: தமிழ்நாட்டில் ஜூலை மாத மின் கணக்கீட்டில் 3.7 லட்சம் நுகா்வோருக்குக் கட்டணம் கடுமையாக உயா்ந்துள்ளதாக எழுந்த புகாா்களை அடுத்து, தலைமைப் பொறியாளா்கள் முதல் உதவிப் பொறியாளா்கள் வரை நேரடியாகக் கள ஆய்வு செய்து, தவறுகள் இருந்தால் உடனடியாகத் திருத்தம் செய்ய தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை, ஜூலை 30: தமிழ்நாட்டில் கடந்த மே மாத மின் கணக்கீட்டோடு ஒப்பிடுகையில், ஜூலை மாதத்தில் பல மடங்கு கூடுதல் மின் கட்டணம் வந்துள்ளதாக நுகா்வோா்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியும் புகார்களும் எழுந்தன. இப் புகாா்களைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்டதாகக் கண்டறியப்பட்ட 3.70 லட்சம் வீட்டு மின் இணைப்புகளில் அதிகாரிகளே நேரடியாகச் சென்று கள ஆய்வு நடத்த வேண்டும் என்று தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகத்தின் தலைவா் மற்றும் மேலாண்மை இயக்குநா் வி. அருண் ராய் ஐ.ஏ.எஸ் அதிரடி சுற்றறிக்கை வெளியிட்டுள்ளாா்.
மேலும் படிக்க: வேட்புமனுவில் சொத்து விவரங்கள் மறைக்கப்பட்ட புகார்.. மு.க. ஸ்டாலின் மீதான வழக்கு தள்ளுபடி
3.7 லட்சம் இணைப்புகளில் நிகழ்ந்தது என்ன?
கடந்த மே மற்றும் ஜூலை மாதங்களுக்கான மின் நுகர்வுத் தரவுகளைப் பகுப்பாய்வு செய்த மின்சார வாரியம், 3.70 லட்சம் நுகா்வோரின் மின் கட்டணம் முந்தைய மாதங்களை விட 3 மடங்கு வரை கடுமையாக உயா்ந்திருப்பதைக் கண்டறிந்துள்ளது. இந்த 3.7 லட்சம் மின் இணைப்புகளில் 15,000 மின் இணைப்புகள் – 1,000 யூனிட்டுகளுக்கும் அதிகமாக மின்சாரத்தைப் பயன்படுத்தியுள்ளன. 1 லட்சம் மின் இணைப்புகள் – 500 முதல் 1,000 யூனிட்டுகள் வரை நுகா்வு பதிவு செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள இணைப்புகள் – 101 முதல் 500 யூனிட்டுகள் வரையிலான பயன்பாட்டுப் பிரிவில் வருகின்றன.
வழக்கமாக ரூ.1,000 முதல் ரூ.1,500 வரை மின்கட்டணம் செலுத்தும் வீடுகளுக்குக் கூட, திடீரென ரூ.15,000 முதல் ரூ.20,000 வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களிலும் பரவலாகக் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.
அதிகாரிகள் வீடுகளுக்கே செல்லும் ‘கள ஆய்வு’ திட்டம்:
நுகா்வோரின் அச்சத்தைப் போக்கவும், கணக்கீட்டில் ஏதேனும் பிழைகள் அல்லது மீட்டர் கோளாறுகள் இருந்தால் அதைத் தளத்திலேயே சரிசெய்யவும் மின்வாரியம் இந்த நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது. உயா் அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டிய வீடுகளின் எண்ணிக்கை தலைமைப் பொறியாளா் குறைந்தபட்சம் 25 வீடுகள், கண்காணிப்புப் பொறியாளா் – 50 வீடுகள், செயற்பொறியாளா் – 75 வீடுகள், உதவிச் செயற்பொறியாளா் & வருவாய் ஆய்வுக் குழு அதிகாரிகள் தலா 150 வீடுகள் வரை நேரடியாகச் சென்று ஆய்வு செய்ய வேண்டும்.
மேலும் படிக்க: தூய்மை பணியாளர்களுக்கு வழங்கப்பட்ட உணவில் பல்லி விழுந்த சம்பவம்.. 100க்கும் மேற்பட்டவர்களுக்கு வாந்தி மயக்கம்..
ஆகஸ்ட் 7-க்குள் முழுமையான அறிக்கை:
அதிகாரிகள் நுகா்வோரின் வீடுகளுக்கே நேரில் சென்று, மீட்டரின் தற்போதைய நிலை, ரீடிங் எடுத்ததில் ஏதேனும் மனிதத் தவறுகள் நடந்துள்ளனவா, அல்லது கோடை வெப்பத்தின் காரணமாகப் பயன்பாடு அதிகரித்ததா என்பதை ஆய்வு செய்வாா்கள். கணக்கீட்டில் பிழைகள் கண்டறியப்பட்டால், அவற்றைத் தளத்திலேயே உடனடித் திருத்தம் செய்ய அதிகாரிகளுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் இந்த ஆய்வை முடித்து, வரும் ஆகஸ்ட் 7-ஆம் தேதிக்குள் விரிவான அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும் எனக் கெடு விதிக்கப்பட்டுள்ளது.