“அதிமுக, பாஜக தயவில் 4 எம்எல்ஏ-க்கள்!”.. அன்புமணி ராமதாஸுக்கு மாணிக்கம் தாகூர் கடும் கண்டனம்!
Manickam Tagore MP Slams Anbumani Ramadoss: மேகதாட்டு அணை விவகாரத்தில் தமிழகத்திற்கு உரிமை இல்லை என மத்திய அரசு கூறியதை எதிர்த்து ராஜ்யசபாவில் பாஜக அரசுக்கான ஆதரவை பாமக வாபஸ் பெறுமா என காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை, ஜூலை 30: காங்கிரஸ் கட்சி குறித்தும் அதன் அரசியல் நிலைப்பாடு குறித்தும் விமர்சித்துப்பேசிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸுக்கு, காங்கிரஸ் மூத்த தலைவரும் விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினருமான மாணிக்கம் தாகூர் கடும் கண்டனமும் பதிலடியும் கொடுத்துள்ளார். மேகதாது விவகாரத்தில் காங்கிரஸ் இரட்டை வேடம் போடுவதாக அன்புமணி குற்றஞ்சாட்டியிருந்தார். அதோடு, தாங்கள் ராணுவத்தையே பார்த்தவர்கள் என்றும், மாணிக்கம் தாகூர் சட்டையை மடித்துக்கொண்டு ஆவேசமாக பேசுவதாகவும் விமர்சித்திருந்தார்.
மேலும் படிக்க: செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் மீது டாஸ்மாக் முறைகேடு வழக்கு.. தமிழகம் முழுவதும் சோதனை
“அன்புமணி பேச்சு சிரிப்பை வரவழைக்கிறது!”
இதுகுறித்து செய்தியாளர்களைச் சந்தித்த மாணிக்கம் தாகூர் எம்.பி பேசுகையில், “அன்புமணி ராமதாஸின் பேச்சைக் கேட்டேன், எனக்கு மிகவும் சிரிப்பாக இருந்தது. ராணுவத்தைப் பார்த்தேன், அதை பார்த்தேன், இதைப் பார்த்தேன் என்றெல்லாம் அவர் பேசுகிறார். தேசிய அளவில் முதன்மை எதிர்க்கட்சியாக விளங்கும் காங்கிரஸ் கட்சி எத்தனையோ மாநிலங்களில் ஆட்சியில் இருக்கிறது. அப்படிப்பட்ட காங்கிரஸ் கட்சியைப் பற்றிப் பேசுவதை விட்டுவிட்டு, அன்புமணி முதலில் தன் கட்சியின் வேலையைப் பார்க்க வேண்டும்” என்று காட்டமாகக் கூறினார்.
ராஜ்யசபா ஆதரவு வாபஸ் கேள்வி:
தொடர்ந்து மேகதாட்டு அணை விவகாரம் குறித்துப் பேசிய அவர், பாமக-வின் அரசியல் நிலைப்பாட்டை கடுமையாகச் சாடினார். “மேகதாட்டு அணை விவகாரத்தில் தமிழ்நாட்டிற்குப் பேச உரிமை கிடையாது என்று நாடாளுமன்றத்தில் மத்திய பாஜக அரசு நேற்று பதில் அளித்திருக்கிறது. தமிழ்நாட்டின் உரிமையைப் பறிக்கும் வகையில் பேசும் மோடி அரசுக்கு அளித்து வரும் ஆதரவை பாமக வாபஸ் பெறுமா? ராஜ்யசபாவில் உள்ள உங்களின் ஒரே ஒரு எம்பி பதவியைக் கொண்டு அந்த ஆதரவை வாபஸ் பெற அன்புமணிக்கு தைரியம் இருக்கிறதா?” என்று கேள்வி எழுப்பினார். “ஏன் இந்த பதற்றம்? சிபிஐ வழக்குகள் எதுவும் இருக்கிறதா? இது தமிழ்நாட்டு மக்களுக்குத் தெரியாது என்று நினைக்கிறீர்களா?” என்றும் அவர் சாடினார்.
மேலும் படிக்க: வேட்புமனுவில் சொத்து விவரங்கள் மறைக்கப்பட்ட புகார்.. மு.க. ஸ்டாலின் மீதான வழக்கு தள்ளுபடி
அதிமுக, பாஜக தயவில் அரசியல் செய்யும் பாமக:
மேலும் பாமகவின் தேர்தல் அரசியலை விமர்சித்த மாணிக்கம் தாகூர், “அதிமுக மற்றும் பாஜகவிடம் தொங்கிக்கொண்டுதான் பாமக அரசியல் செய்து வருகிறது. அவர்களின் தயவால்தான் பாமக 4 எம்.எல்.ஏ-க்களை வெல்ல முடிந்தது. அதிமுக புண்ணியத்தில்தான் அன்புமணியால் ராஜ்யசபா எம்.பி பதவியையும் பெற முடிந்தது. இப்படி அடுத்தவர் தயவில் அரசியல் செய்யும் அன்புமணி, காங்கிரஸ் கட்சியைப் பற்றிப் பேசுவதற்கு முன், மேகதாட்டு விவகாரத்தில் தமிழக உரிமையைக் காக்க மோடி அரசை எதிர்த்துக் கேள்வி கேட்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.