அதிருப்தியில் ஓ பன்னீர்செல்வம்.. திமுகவிலிருந்து விலகி த.வெ.கவில் இணைய திட்டமா?
திமுக சார்பில் அவருக்கு போடிநாயக்கனூர் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது. அந்தத் தொகுதியில் வெற்றி பெற்று சட்டப்பேரவை உறுப்பினராக தேர்வானாலும், இதுவரை அவருக்கு திமுகவில் முக்கியப் பொறுப்பு எதுவும் வழங்கப்படவில்லை. திமுகவில் இணைந்தபோது அவருக்கு உயர்மட்ட பொறுப்பு வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவியிருந்தாலும், அது நிறைவேறவில்லை எனக் கூறப்படுகிறது.
ஜூலை 30, 2026: தமிழக முன்னாள் முதலமைச்சரும், முன்னாள் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ. பன்னீர்செல்வம், திமுகவிலிருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருவது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எடப்பாடி கே. பழனிசாமியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அதிமுகவிலிருந்து வெளியேற்றப்பட்ட ஓ. பன்னீர்செல்வம், பலமுறை முயற்சி செய்தபோதும் மீண்டும் கட்சியில் சேர்க்கப்படவில்லை.
இதையடுத்து, 2026-ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் எந்தக் கட்சியுடன் இணைந்து போட்டியிடுவது என்பது குறித்து நீண்ட ஆலோசனைக்குப் பிறகு அவர் திமுகவில் இணைந்தார்.
திமுகவில் இணைந்த ஓ பன்னீர்செல்வம்:
திமுக சார்பில் அவருக்கு போடிநாயக்கனூர் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது. அந்தத் தொகுதியில் வெற்றி பெற்று சட்டப்பேரவை உறுப்பினராக தேர்வானாலும், இதுவரை அவருக்கு திமுகவில் முக்கியப் பொறுப்பு எதுவும் வழங்கப்படவில்லை. திமுகவில் இணைந்தபோது அவருக்கு உயர்மட்ட பொறுப்பு வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவியிருந்தாலும், அது நிறைவேறவில்லை எனக் கூறப்படுகிறது.
இதற்கிடையில், 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக தோல்வியடைந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியை அமைத்துள்ளது. இந்த அரசியல் மாற்றத்தையடுத்து, அடுத்தகட்ட அரசியல் பயணம் குறித்து ஓ. பன்னீர்செல்வமும், அவரது மகன் ரவீந்திரநாத்தும் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
த.வெ.கவில் இணைய திட்டமா?
தற்போதைய அரசியல் சூழலில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைவதே சரியான முடிவாக இருக்கும் என்று ரவீந்திரநாத் கருத்து தெரிவித்ததாகவும், அதற்கு ஓ. பன்னீர்செல்வமும் சம்மதம் தெரிவித்ததாகவும் அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
மேலும், தமிழக வெற்றிக் கழகத்தில் இணைவது தொடர்பாக அக்கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான ஆனந்தன் மற்றும் அமைச்சர் ஆதி அர்ஜுனா ஆகியோருடன் ரவீந்திரநாத் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேபோல், ஓ. பன்னீர்செல்வம் மற்றும் ரவீந்திரநாத் ஆகியோர் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைவதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் விஜயும் சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேலும் படிக்க: நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10வது தளத்திற்கு மாறும் முதல்வர் அலுவலகம்.. கிளம்பியது எதிர்ப்பு!!
தென் மாவட்டங்களில் கட்சியின் அமைப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் ஓ. பன்னீர்செல்வத்தின் வருகையை தமிழக வெற்றிக் கழகம் அரசியல் ரீதியாக பயன்படுத்த திட்டமிட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அடுத்தக்கட்ட நடவடிக்கை என்ன?
இதனிடையே, ஓ. பன்னீர்செல்வம் திமுகவிலிருந்து விலகும் பட்சத்தில், தனது சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்யக்கூடும் என்றும், அதனைத் தொடர்ந்து நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் மீண்டும் அவருக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. மேலும், கட்சியில் அவருக்கு முக்கியப் பொறுப்பு வழங்கப்பட வாய்ப்புள்ளதாகவும் அரசியல் வட்டாரங்களில் யூகங்கள் நிலவுகின்றன.
அதேபோல், 2029-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் தேனி தொகுதியில் ரவீந்திரநாத்தை தமிழக வெற்றிக் கழக வேட்பாளராக களமிறக்கவும் கட்சி ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும் படிக்க: குடும்பத் தகராறில் மனைவி, மாமியார் வெட்டிப் படுகொலை.. நடுநடுங்க வைக்கும் கொடூரம்!!
எனினும், ஓ. பன்னீர்செல்வம் திமுகவிலிருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் இணையவுள்ளதாக வெளியாகியுள்ள தகவல்கள் குறித்து இதுவரை சம்பந்தப்பட்ட தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. இருப்பினும், இந்த தகவல்கள் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.