நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10வது தளத்திற்கு மாறும் முதல்வர் அலுவலகம்.. கிளம்பியது எதிர்ப்பு!!
CM Vijay Office Shifting: தலைமைச் செயலகத்திலுள்ள முதலமைச்சர் அலுவலகம் விரைவில் நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10-வது தளத்திற்கு மாற்றப்பட உள்ளது. கடற்கரையைப் பார்க்கும் வகையில் தயாராகும் இந்த புதிய அலுவலக இடமாற்றத்திற்குத் தலைமைச் செயலகச் சங்கம் சில நடைமுறை ஆட்சேபனைகளை எழுப்பியுள்ளது.
சென்னை, ஜூலை 30: தமிழ்நாடு தலைமைச் செயலகத்தின் மையப் பகுதியான புனித ஜார்ஜ் கோட்டை பழமையான முதன்மைக் கட்டிடத்தில் பல தசாப்தங்களாக இயங்கி வந்த முதலமைச்சர் அலுவலகம், விரைவில் அருகில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10-வது தளத்திற்கு இடமாற்றம் செய்யப்பட உள்ளது. இதற்கான புதுப்பித்தல் மற்றும் நவீன மறுசீரமைப்புப் பணிகள் தற்போது மிக வேகமாகக் கட்டமைப்புத் துறையினரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதையும் படிக்க: டாஸ்மாக் முறைகேடு விவகாரம்.. முக்கிய ஆவணங்கள் டிஜிட்டல் ஆதாரங்கள் பறிமுதல்..
இடமாற்றத்திற்கான காரணம்:
முன்னாள் முதலமைச்சர் பெருந்தலைவர் காமராஜர் காலம் தொடங்கி, அண்ணா, கலைஞர் கருணாநிதி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா வரை பெரும்பாலான முதலமைச்சர்கள் புனித ஜார்ஜ் கோட்டையின் பாரம்பரியமிக்க முதன்மைக் கட்டிடத்தில் இருந்தே ஆட்சிப் பணிகளை மேற்கொண்டு வந்தனர். தற்போதைய சூழலில் முதலமைச்சரின் முதன்மைச் செயலாளர்கள், தனிச் செயலாளர்கள் மற்றும் துறைச் செயலாளர்கள் வெவ்வேறு தளங்களிலும் கட்டிடங்களிலும் பிரிந்து இயங்கி வருகின்றனர். இதனால் கோப்புகள் பரிமாற்றம் மற்றும் அவசர ஆலோசனைகளில் சிறிய காலதாமதம் ஏற்படுகிறது.
ஒரே கூரையின் கீழ் அனைத்து அதிகாரிகள்:
இந்த நிர்வாகச் சிக்கலைத் தீர்க்கவே, 10-வது தளத்தில் பிரம்மாண்டமாக அமைக்கப்படும் புதிய அலுவலகத்தில், முதலமைச்சரின் செயலாளர்களான செந்தில்குமார், லட்சுமி பிரியா, அண்ணாதுரை, விஷ்ணு ஆகிய 4 மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகளின் அறைகளும், உள்துறைச் செயலாளரின் அலுவலகமும் ஒரே தளத்தில் ஒன்றாகச் செயல்படும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.
நவீன தொழில்முறை வசதிகள்:
10-வது தளத்தின் கிழக்குப் பகுதியில் அமையவிருக்கும் முதலமைச்சரின் முதன்மை அறை, வங்கக் கடலின் அழகிய தோற்றத்தை நேராகப் பார்க்கும் வகையில் கண்ணாடியிலான நவீன அமைப்புகளுடன் பிரத்யேகமாக வடிவமைக்கப்படுகிறது. ஏற்கனவே 10-வது தளத்தில் அமைந்திருந்த பெரிய கலந்தாய்வுக் கூடம் இடிக்கப்பட்டு, அங்கிருந்த செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறை அலுவலகங்கள் கலைவாணர் அரங்கத்திற்கு முழுமையாக இடமாற்றம் செய்யப்படுகின்றன.
முதலமைச்சர் வருகை தரும் போது, அவருடைய வாகனங்கள் நேரடியாக வந்து நிற்கும் வகையில் தனியாக ‘போர்டிகோ’ வசதியும், 10-வது தளத்திற்கு விரைவாகச் செல்ல ‘A’ மற்றும் ‘B’ ஆகிய இரண்டு பிரத்யேக அதிவேக மின்தூக்கி வசதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன.
ஊழியர்கள் சங்கத்தின் ஆட்சேபனைகள்:
முதலமைச்சர் அலுவலகம் மாற்றப்படுவதை ஒட்டி, தலைமைச் செயலகச் சங்கம் சில முக்கிய நடைமுறைச் சிக்கல்களை அரசின் கவனத்திற்குக் கொண்டு சென்றுள்ளது. நாமக்கல் கவிஞர் மாளிகை 1975-ஆம் ஆண்டு கட்டப்பட்டது. அன்றைய காலகட்டத்துடன் ஒப்பிடுகையில், தற்போது அரசுப் பணியாளர்களின் எண்ணிக்கையும், தினசரி தலைமைச் செயலகத்திற்கு வரும் பொதுமக்களின் எண்ணிக்கையும் பலமடங்கு உயர்ந்துள்ளது. கவிஞர் மாளிகையில் உள்ள குறிப்பிட்ட ‘A’ மற்றும் ‘B’ லிஃப்ட்கள் முதலமைச்சரின் பாதுகாப்பு மற்றும் பயன்பாட்டிற்காக முற்றிலும் ஒதுக்கப்பட்டால், எஞ்சியுள்ள 1 முதல் 9 தளங்களில் பணியாற்றும் ஆயிரக்கணக்கான ஊழியர்களும், பார்வையாளர்களும் தினமும் மேலேறிச் செல்ல நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய சூழல் உருவாகும்.
மேலும் படிக்க: கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கான பணி ஆணை ரத்து.. உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு!
எனவே, தற்போதைய வரலாற்றுச் சிறப்புமிக்க புனித ஜார்ஜ் கோட்டை கட்டிடத்திலேயே முதலமைச்சர் அலுவலகம் தொடர்ந்து இயங்க வேண்டும்; அல்லது புதிய இடத்திற்கு மாற்றப்பட்டால், ஊழியர்கள் மற்றும் பார்வையாளர்களின் பயன்பாட்டிற்காக கூடுதலாகப் புதிய நவீன லிஃப்ட்களை உடனடியாக நிறுவ வேண்டும் எனக் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.