காவிரி விவகாரம்: முதல்வர் விஜய்க்காக ஹெலிகாப்டர் தயார் நிலையில் உள்ளது – முதல்வர் டி.கே சிவகுமார்..
தற்போதைய சூழலில் காவிரி ஆற்றிலிருந்து தமிழ்நாட்டுக்கு கூடுதல் தண்ணீர் வழங்குவது சாத்தியமற்ற நிலை இருப்பதாகவும், கர்நாடகாவின் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளின் உண்மை நிலையை நேரில் பார்வையிட்டு அறிந்துகொள்ள தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் வருமாறு அழைப்பு விடுத்துள்ளதாகவும் டி.கே. சிவக்குமார் தெரிவித்தார்.
ஜூலை 30, 2026: மேகதாது அணை விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜயை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த கர்நாடக முதல்வர் டி.கே. சிவக்குமார் அழைப்பு விடுத்துள்ளார். காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டும் திட்டம் தற்போது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. மேகதாது அணை கட்டப்பட்டால் தமிழக விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்ற காரணத்தால், தமிழ்நாடு அரசும், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
ஆகஸ்ட் 3ஆம் தேதி இரு மாநில முதல்வர்கள் பேச்சுவார்த்தை:
இந்த நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய், கர்நாடக முதல்வர் டி.கே. சிவக்குமாரை நேரில் சந்தித்து இந்த விவகாரம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக ஆகஸ்ட் 3-ஆம் தேதி கர்நாடகா செல்ல உள்ள அவர், டி.கே. சிவக்குமாருடன் காவிரி மற்றும் மேகதாது அணை தொடர்பான விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்துவார் எனக் கூறப்படுகிறது.
முதல்வர் விஜய்க்கு ஹெலிகாப்டர் தயாராக உள்ளது:
இதுதொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த கர்நாடக முதல்வர் டி.கே. சிவக்குமார், “காவிரி விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் என்னிடம் தொலைபேசி மூலம் பேசியுள்ளார். மேகதாது பகுதி உள்ளிட்ட கர்நாடகாவின் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளின் தற்போதைய நிலையை நேரில் பார்வையிடுவதற்காக முதல்வர் விஜய்க்கு ஹெலிகாப்டர் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: மின் கட்டணக் குளறுபடி விவகாரம்.. 3.7 லட்சம் வீடுகளில் நேரடியாக ஆய்வு செய்ய மின்வாரியம் உத்தரவு!!
நீர் பாசன விவகாரம் தொடர்பாக நேற்று சிறிதளவு நீரை திறந்துவிடுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அந்த உத்தரவு குறித்த முழுமையான விவரங்கள் இன்னும் எங்களுக்குக் கிடைக்கவில்லை. அந்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்வது குறித்து அமைச்சர் எம்.பி. பாட்டில் உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்தி உள்ளேன். நாங்கள் மேல்முறையீடு செய்ய இருக்கிறோம்” என்று தெரிவித்தார்.
நீர் திறப்பு – மேல்முறையீடு செய்யும் கர்நாடகா அரசு:
மேலும், காவிரி நீர் ஒழுங்குமுறை குழு (CWRC) தமிழ்நாட்டுக்கு காவிரி நீரை திறந்துவிட உத்தரவிட்டதை எதிர்த்து, காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தில் (CWMA) மேல்முறையீடு செய்ய கர்நாடக அரசு முடிவு செய்துள்ளதாகவும் அவர் கூறினார்.
மேலும் படிக்க: “அதிமுக, பாஜக தயவில் 4 எம்எல்ஏ-க்கள்!”.. அன்புமணி ராமதாஸுக்கு மாணிக்கம் தாகூர் கடும் கண்டனம்!
அத்துடன், தற்போதைய சூழலில் தமிழ்நாட்டுக்கு கூடுதல் தண்ணீர் வழங்குவது சாத்தியமற்ற நிலை இருப்பதாகவும், கர்நாடகாவின் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளின் உண்மை நிலையை நேரில் பார்வையிட்டு அறிந்துகொள்ள தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் வருமாறு அழைப்பு விடுத்துள்ளதாகவும் டி.கே. சிவக்குமார் தெரிவித்தார்.