பழனி தண்டாயுதபாணி முருகன் கோயில் நில முறைகேடு பத்திரம் வெளியீடு.. பெரும் அதிர்ச்சி.. நடந்தது என்ன?
Palani Land Registered Deed : பழனி தண்டாயுதபாணி முருகன் கோயிலுக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்பிலான நிலம் முறைகேடாக பதிவு செய்யப்பட்ட பத்திரம் வெளியாகி உள்ளது. அதில், பத்திரப்பதிவு நடைபெற்றது என்பன உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் தெரிவிக்கப்பட்டு உள்ளன .
திண்டுக்கல் மாவட்டத்தில் பழனி முருகன் கோவிலுக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்பிலான 1.40 ஏக்கர் நிலம் முறைகேடாக பத்திர பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்த விவகாரத்தில், 4 பேர் மீது சிபிசிஐடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், பழனி கோயில் நிலம் முறைகேடாக பத்திரப்பதிவு செய்யப்பட்ட பத்திரம் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதில், ரூ.100 கோடி மதிப்பிலான நிலம் பதிவு செய்யப்பட்ட பத்திரத்தில் தண்டபாணி மடம் தனியார் அறக்கட்டளை என தெரிவிக்கப்பட்டுள்ளது. தண்டபாணி மடத்துக்கு சொந்தமான நிலங்கள் மூலமாக வருவாய் ஈட்டி தர்ம காரியங்கள் செய்வது வழக்கம் என அந்த பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ரூ.100 கோடி மதிப்பிலான நிலம் வாயிலாக எதிர்பார்த்த வருவாய் கிடைக்காத காரணத்தால் அந்த நிலம் விற்பனை செய்யப்படுவதாக சொல்லப்பட்டுள்ளது.
ரூ.100 கோடி நிலம் ரூ.2 கோடிக்கு பத்திரப்பதிவு
ரூ.100 கோடி மதிப்பிலான நிலத்தை ரூ.2 கோடிக்கு கேட்டுள்ளதே அதிக விலை எனவும் அந்த பத்திரத்தில் தெளிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் 27- ஆம் தேதி கையெழுத்திடப்பட்ட விற்பனை பத்திரம் கடந்த ஜூன் 6-ம் தேதி பழனி சார் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிலத்தை பழனி கோயில் அறக்கட்டளை உறுப்பினரும், அரசு பள்ளி ஆசிரியருமான விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த முருகதாஸ் என்பவர், திருப்பூரை சேர்ந்தவர்களுக்கு பத்திர பதிவு செய்து கொடுத்திருந்தார்.
மேலும் படிக்க: “முதல்வர் விஜய் காலடியில் வைகோ!”.. திமுகவிடம் குத்தகைக்கு போன தேமுதிக.. வெளுத்து வாங்கிய நாஞ்சில் சம்பத்!!




சார் பதிவாளர் மற்றும் பதிவாளர் சஸ்பெண்ட்
இது தொடர்பாக, கோவில் நிர்வாகம் தரப்பில் பழனி அடிவாரம் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், முருகதாஸ், சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் உள்ளிட்ட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. இதில், ஜஸ்டின் மணிகண்டன் மற்றும் மாவட்ட பதிவாளர் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். பத்திரப்பதிவு பின்னணியில் அரசியல்வாதிகளுக்கு நெருக்கமானவர்களின் தலையீடு இருப்பதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்திருந்தார்.

பழனி நில முறைகேடு பத்திரம்

பழனி நில முறைகேடு பத்திரம்
முருகதாஸ் வீட்டுக்கு சிபிசிஐடி போலீசார் சீல் வைப்பு
அதன் அடிப்படையில் இந்த வழக்கை சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றி டிஜிபி மகேஷ்குமார் அகர்வால் உத்தரவிட்டார். அதன்படி, சிபிசிஐடி எஸ்பி தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதில், நிலத்தை விற்ற முருகதாஸ் என்பவரது வீட்டுக்கு போலீசார் சீல் வைத்தனர். முன்னதாக, அவரது வீட்டில் இருந்து சுமார் 50 ஆவணங்களை பறிமுதல் செய்த போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அத்துடன், இந்த வழக்கில் தலைமுறைவாக உள்ளவர்களை தேடி வருகின்றனர்.
மேலும் படிக்க: “நடப்பது சட்டத்தின் ஆட்சியா? சாத்தானின் ஆட்சியா?”.. திமுக எம்.எல்.ஏ கைதுக்கு மு.க.ஸ்டாலின், கனிமொழி கடும் கண்டனம்!!