“முதல்வர் விஜய் காலடியில் வைகோ!”.. திமுகவிடம் குத்தகைக்கு போன தேமுதிக.. வெளுத்து வாங்கிய நாஞ்சில் சம்பத்!!
Nanjil Sampath Brutal Speech: தமிழக வெற்றி கழக மேடையில் பேசிய இலக்கியப் பேச்சாளர் நாஞ்சில் சம்பத், தமிழகத்தில் மாற்று அரசியல் பேச வந்த மூத்த தலைவர்களை மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார். மாற்று அரசியலைத் தொடங்கிய வைகோ தற்போது தவெக தலைவர் விஜய்யின் காலடியில் விழுந்து கிடப்பதாகவும், கேப்டன் விஜயகாந்தின் தேமுதிகவை பிரேமலதா 5 ஆண்டுகளுக்கு திமுகவிடம் குத்தகைக்கு விட்டுள்ளதாகவும் சாடியுள்ளார்.
சென்னை, ஜூலை 20: தமிழகத்தில் ஆட்சி மாற்றமும், அரசியல் மாற்றமும் வேண்டும் என்பது தமிழ்நாட்டு மக்களின் நீண்ட கால கனவு; ஆனால் மாற்று அரசியல் பேச வந்த வைகோ எங்கள் தலைவர் விஜய்யின் காலடியில் விழுந்து கிடக்கிறார், தேமுதிகவை பிரேமலதா 5 ஆண்டுகளுக்கு திமுகவிடம் குத்தகைக்கு விட்டுள்ளார் என தவெக பரப்புரைச் செயலாளர் நாஞ்சில் சம்பத் அதிரடியாகப் பேசியுள்ளார். அதோடு, தமிழகத்தில் உண்மையான அரசியல் மாற்றத்தைக் கொண்டு வருவதற்காகப் பல்வேறு தலைவர்கள் மேற்கொண்ட முயற்சிகள் மற்றும் அவர்களின் தற்போதைய அரசியல் நிலைப்பாடு குறித்து நாஞ்சில் சம்பத் மேடையில் கடுமையாக விமர்சித்துப் பேசினார்.
இதையும் படிக்க: “தளபதி விஜய் சும்மா விடமாட்டார்!”.. ஊழல் புகார்களுக்கு முற்றுப்புள்ளி வைத்த அமைச்சர் ஆனந்தின் பரபர பேச்சு!
“வைகோவால் முடியாத அரசியல் மாற்றம்”
இதுகுறித்து அவர் பேசுகையில், “கடந்த 1994-ஆம் ஆண்டு மே திங்கள் 6-ஆம் தேதி, தமிழகத்தில் ஒரு மாற்று அரசியல் மாற்றத்திற்கான அகரத்தை முதன்முதலில் எழுதியவர் அண்ணன் வைகோ. ஆனால், அவராலேயே அந்த அரசியல் மாற்றத்தைச் செய்ய முடியவில்லை. அன்று மாற்று அரசியல் பேசிய அண்ணன் வைகோ, இன்றைக்கு எங்கள் தலைவர் விஜய்யின் காலடியில் வந்து விழுந்து கிடக்கிறார்” என்று சாடினார்.
தமாகா, தேமுதிக மீதான சாடல்:
தொடர்ந்து பேசிய நாஞ்சில் சம்பத், தமிழ் மாநில காங்கிரஸ் (தமாகா) மற்றும் தேசிய முற்போக்கு திராவிடர் கழகம் (தேமுதிக) ஆகிய கட்சிகளின் வீழ்ச்சி குறித்தும் தனது விமர்சனங்களை முன்வைத்தார். “ஒரு புதிய அரசியல் மாற்றத்தை உருவாக்குவதற்காகத்தான் ஜி.கே. மூப்பனார் தமிழ் மாநில காங்கிரஸைத் தொடங்கினார். ஆனால், அந்தக் கட்சி ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியாமல் போனதுடன், இன்றைக்கு பாஜகவுடன் கைகோர்த்ததன் விளைவாக ஒட்டுமொத்தமாகக் கல்லறைக்குள் போய்விட்டது” என்று விமர்சித்தார்.
விளிம்பு நிலை மக்களின் நம்பிக்கை பெற்ற மகத்தான தலைவராக விளங்கிய கேப்டன் விஜயகாந்த், மாற்று அரசியலுக்காகத் தேசிய முற்போக்கு திராவிடர் கழகத்தைத் தொடங்கினார். ஆனால், தற்பொழுது கேப்டனின் மறைவுக்குப் பிறகு அவரது மனைவி பிரேமலதா விஜயகாந்த், தேமுதிகவை அடுத்த ஐந்து ஆண்டு காலத்திற்கு அப்படியே திமுகவிடம் குத்தகைக்கு விட்டுவிட்டார்” எனத் தற்போதைய கூட்டணி அரசியலைக் கடுமையாகக் குற்றஞ்சாட்டினார்.
டார்ச் லைட்டை தேடும் கமல்:
மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமலஹாசன் குறித்தும் நாஞ்சில் சம்பத் தனது பாணியில் காரசாரமான விமர்சனத்தை வைத்தார். “உலக சினிமா அரங்கில் தமிழ் சினிமாவிற்கு ஒருநாள் உலக அங்கீகாரம் கிடைக்குமானால், அதை வாங்கித் தருகிற மாபெரும் கலைஞன் கமலஹாசன் என்று நான் நம்பியிருந்தேன். ஆனால், அவரோ தமிழகத்தில் அரசியல் மாற்றம் வேண்டும் என்று கூறி, திமுகவின் மீது தீவிரமான வெறுப்பைக் கக்கி, தொலைக்காட்சி பெட்டியை உடைத்து மக்கள் நீதி மய்யத்தைத் தொடங்கினார்.
ஆனால், இன்றைக்கு ஒரு சட்டமன்ற உறுப்பினர் கூட இல்லாமல், கமலஹாசன் கையில் வைத்திருந்த தனது கட்சியின் சின்னமான டார்ச் லைட்டை அறிவாலயத்தின் திண்ணையில் தேடிக் கொண்டிருக்கிறார்” என்று எள்ளி நகையாடினார்.
இதையும் படிக்க: இந்தியா கூட்டணி கூட்டத்தைப் புறக்கணித்த திமுக.. நாடாளுமன்றத்தில் எம்பிக்களின் இருக்கைகள் அதிரடி மாற்றம்!!
மாற்று அரசியல் பேச வந்த மூத்த தலைவர்கள் அனைவரும் தங்களது கொள்கைகளை இழந்துவிட்ட நிலையில், தமிழக மக்கள் எதிர்பார்த்த உண்மையான அரசியல் மாற்றத்தைத் தவெக தலைவர் விஜய் மட்டுமே வழங்க முடியும் என்ற தொனியில் நாஞ்சில் சம்பத்தின் இந்தப் பேச்சு தவெக தொண்டர்களிடையே வைரலாகி வருகிறது.