மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்.. இன்று தொடங்கும் வேட்புமனு தாக்கல்..
அக்டோபர் 6ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், அக்டோபர் 9ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் இன்று முதல் தொடங்குகிறது. இரு தொகுதிகளிலும் வேட்புமனு படிவங்கள் தயாராக வைக்கப்பட்டுள்ளதுடன், பாதுகாப்பு பணிகளுக்காக கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளன.
செப்டம்பர் 9, 2026: வரும் அக்டோபர் 6ஆம் தேதி மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரண்டு சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியான நிலையில், இரு தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல் இன்று, செப்டம்பர் 9ஆம் தேதி தொடங்குகிறது.
2026 சட்டப்பேரவைத் தேர்தலில் நான்குமுனைப் போட்டி நிலவிய சூழலில், தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. இதனிடையே, தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் போட்டியிட்டு வெற்றி பெற்ற திருச்சி கிழக்கு தொகுதியை ராஜினாமா செய்தார். மேலும், அதிமுகவில் ஏற்பட்ட உட்கட்சிப் பிரச்சினைகளுக்கு மத்தியில் சில சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர்.
தமிழகத்தில் காலியாக இருக்கும் 7 தொகுதிகள்:
இதையடுத்து, தமிழகத்தில் மதுராந்தகம், தாராபுரம், பெருந்துறை, கரூர், திருச்சி கிழக்கு, விராலிமலை உள்ளிட்ட 7 சட்டமன்றத் தொகுதிகள் காலியாக அறிவிக்கப்பட்டன. இதில், மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளுக்கு மட்டும் தற்போது இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
மீதமுள்ள 5 தொகுதிகளில் தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் தொடர்பான வழக்குகள் நிலுவையில் இருப்பதால், அந்த தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: மதுரையை அதிரவைத்த 16 வயது சிறுவனின் மரணம்.. ஆணவக் கொலையா?.. உடலை வாங்க மறுத்து தாய் கொந்தளிப்பு!!
இன்று முதல் வேட்புமனு தாக்கல்:
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, அங்கு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. இதன் காரணமாக அரசு மற்றும் பொது இடங்களில் உள்ள அரசியல் கட்சிகளின் சுவரொட்டிகள், கட்சி அடையாளங்கள், விளம்பரப் பலகைகள் உள்ளிட்டவற்றை அகற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், இன்று தொடங்கும் வேட்புமனு தாக்கல் செப்டம்பர் 16ஆம் தேதி வரை நடைபெறும். செப்டம்பர் 17ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற உள்ளது. வேட்புமனுக்களைத் திரும்பப் பெறுவதற்கான கடைசி நாள் செப்டம்பர் 19ஆம் தேதி என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: “28 நாட்கள்.. 170 மணி நேரம்!”.. சட்டப்பேரவை கூட்டத்தொடர் வெற்றிகரமாக நிறைவு.. முக்கிய அம்சங்கள், புள்ளிவிவரங்கள்!
அக்டோபர் 6ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், அக்டோபர் 10ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இந்த இடைத்தேர்தலில் நான்குமுனைப் போட்டி நிலவுமா என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது. தமிழக வெற்றிக் கழகம், திமுக மற்றும் அதிமுக போட்டியிடும் சூழலில், நாம் தமிழர் கட்சி வழக்கம்போல் தனித்துப் போட்டியிடுமா அல்லது பிற கட்சிகளின் ஆதரவை கோருமா என்பது தேர்தல் நெருங்கும் நிலையில் தெரியவரும்.