மதுரையை அதிரவைத்த 16 வயது சிறுவனின் மரணம்.. ஆணவக் கொலையா?.. உடலை வாங்க மறுத்து தாய் கொந்தளிப்பு!!
Madurai 16-Year-Old Boy Death Case: மதுரையில் 16 வயது சிறுவன் தமிழ்செல்வன் சந்தேகத்திற்கு இடமான முறையில் உயிரிழந்த வழக்கில், உண்மையைக் கண்டறியும் வரை உடலை வாங்கப் போவதில்லை என அவரது குடும்பத்தினரும் முற்போக்கு அமைப்பினரும் தெரிவித்துள்ளனர். இது திட்டமிட்ட ஆணவக் கொலையாக இருக்கலாம் என்ற சந்தேகம் இருப்பதாகக் கூறி, காவல்துறையின் மெத்தனப் போக்கைக் கண்டித்துப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மதுரை, செப்டம்பர் 09: மதுரை மாவட்டத்தில் 16 வயதான தமிழ்செல்வன் என்ற சிறுவன் சந்தேகத்திற்கு இடமான முறையில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. சிறுவனின் மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் நிலவி வரும் நிலையில், காவல் துறையின் விசாரணை வெளிப்படையாகவும் முறதியாகவும் இல்லை எனக் குற்றம்சாட்டி சிறுவனின் குடும்பத்தினரும், உறவினர்களும், முற்போக்கு அமைப்பினரும் உடலை வாங்க மறுத்துப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இது வெறும் நீரில் மூழ்கிய விபத்து அல்ல, திட்டமிடப்பட்ட ஆணவக் கொலை அல்லது தூண்டுதலின் பேரில் நடந்த படுகொலையாக இருக்கலாம் என்ற அதிர்ச்சி குற்றச்சாட்டைச் சிறுவனின் தாயார் முன்வைத்துள்ளார்.
இதையும் படிக்க: பிளஸ் 2 மாணவி கூட்டு வன்கொடுமை… ஒருவருக்கு மரண தண்டனை.. நெல்லை போக்சோ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
காவல்துறையின் மெத்தனப் போக்கு:
சிறுவனின் உயிரிழப்பு குறித்துக் காவல்துறையினரிடம் முறையிட்டபோது, அவர்கள் தங்களின் கருத்துக்களுக்குச் சிறிதும் மதிப்பளிக்கவில்லை என்று சிறுவனின் தாய் வேதனையுடன் தெரிவித்தார். சிசிடிவி காட்சி மற்றும் உடன் சென்ற சிறுவர்களின் வாக்குமூலங்களை மட்டுமே வைத்து வழக்கை அவசரகதியில் முடிக்கக் காவல்துறை முனைப்பு காட்டுவதாகவும், துரைபாண்டி என்பவருக்கு இதில் தொடர்பு இருப்பதாகத் தங்களுக்கு ஆழமான சந்தேகம் உள்ளது என்று அதிகாரிகளிடம் கூறியும் அதை அவர்கள் கண்டுகொள்ளவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டினார். மேலும், தாங்கள் உடலை வாங்க மறுத்துத் தொடர்ந்து அழுத்தம் கொடுத்த பின்னரே, காவல்துறை சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்வதும் மோப்ப நாய் சோதனைகளை மேற்கொள்வதுமாக நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியதாகச் சுட்டிக்காட்டினார்.
ஆணவக் கொலை சந்தேகம்:
இறந்துபோன தமிழ்செல்வன் மிகவும் சாதுவான பையன் என்று தெரிவித்த அவரது தாய், இந்தச் சம்பவத்திற்குப் பின்னால் ஒரு பெண் வீட்டாரின் தூண்டுதல் இருக்கலாம் என்ற சந்தேகத்தை வெளிப்படுத்தினார். “நேற்று வரை தொடர்பில் இல்லாத அந்தப் பெண்ணின் தந்தை துரைபாண்டி என்பவரின் எண்ணிலிருந்து எனது கைபேசிக்கு அழைப்பு வந்தது. ஏன் இத்தனை நாட்கள் கழித்து, இச்சம்பவம் நடந்த பிறகு அவர் அழைக்க வேண்டும்?” என கேள்வி எழுப்பினார். மேட்டுத் தெருவைச் சேர்ந்த சில சிறுவர்கள் தமிழ்செல்வனைத் தூக்கிச் சென்று ஆற்றில் போட்டிருக்கலாம் என்றும், உடன் சென்ற மற்ற 5 சிறுவர்களை யாராவது மிரட்டி உண்மை வெளிய வராதபடி மறைத்திருக்கலாம் என்றும் சிறுவனின் தாய் சந்தேகம் தெரிவித்தார்.
இதையும் படிக்க: பூட்டிய வீட்டை நோட்டமிட்டு கைவரிசை.. சொகுசு காரில் வந்து நகை திருடிய தம்பதி கைது.. வேலூரில் அதிர்ச்சி பின்னணி!
நீதி கிடைக்கும் வரை உடலை வாங்க மறுப்பு:
தமிழ்செல்வனின் உடல் மீட்கப்பட்டபோது அவரது உடலில் ஆடை எதுவும் இன்றி, வெறும் டிரவுசருடன் மட்டுமே இருந்ததாகவும், அவர் அணிந்திருந்த சட்டை, பேன்ட் மற்றும் செருப்பு எதுவுமே கிடைக்கவில்லை என்றும் குடும்பத்தினர் தெரிவித்தனர். “சட்ட அறிவும் முற்போக்கு அமைப்புகளின் பின்னணியும் கொண்ட எங்களையே காவல்துறை இந்த அளவுக்கு அலக்கழிக்கிறது என்றால், சாதாரண மக்களுக்கு எப்படி நீதி கிடைக்கும்?” என ஆதங்கப்பட்ட அவர்கள், மீனாட்சி அம்மன் கோவில் குடமுழுக்கு வேலை இருக்கிறது என்று கூறி விசாரணையை ஒத்திப்போட காவல்துறை முயல்வதாகக் சாடினர். தமிழ்செல்வனின் மரணத்தில் உள்ள உண்மை வெளிவந்து, சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்படும் வரை உடலை வாங்கப்போவதில்லை என்பதில் சிறுவனின் குடும்பத்தினர் உறுதியாக உள்ளனர்.