கோவையில் அதிர்ச்சி.. ஆள் அரவம் இல்லாத இடத்தில் இளைஞரின் நிர்வாண சடலம்.. கொலை குறித்து போலீசார் விசாரணை!
Sulur Youth Murder : கோயம்புத்தூர் மாவட்டத்தில் இளைஞர் மர்மமான முறையில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து சூலூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த கொலை சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டம், சூலூர் அருகே இளைஞர் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோவை மாவட்டம், சூலூர் அருகே உள்ள பாப்பம்பட்டி பகுதியில் நந்தினி நகர் அமைந்துள்ளது. இந்த பகுதியில் வீட்டுமனைகள் பிரிக்கப்பட்டுள்ள நிலையில், இங்கு எந்தவிதமான கட்டடங்களும் கட்டப்படாமல் செடி, கொடிகள் வளர்ந்த காடுகளாக இருந்து வருகிறது. இந்த இடத்தில் சிங்காநல்லூர் பகுதியை சேர்ந்த குருநாதன் என்பவர் புதிதாக தகர கொட்டகை அமைக்கும் பணிகளை மேற்கொண்டு வருகிறார். தற்போது, அங்கு ஆரம்ப கட்டப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், குருநாதன் வாரத்துக்கு ஒரு முறை வந்து பணிகளை பார்த்துவிட்டு செல்வது வழக்கமாகும். அதன்படி, இன்று திங்கள் கிழமை ( செப்டம்பர் 7- ஆம் தேதி) அந்த பகுதிக்கு குருநாதன் வந்திருந்தார்.
நிர்வாண நிலையில் இளைஞர் கொடூர கொலை
அப்போது, அவர் அமைத்து வரும் தகரக் கொட்டகைக்குள் இளைஞர் ஒருவர் நிர்வாண நிலையில் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த குருநாதன் சத்தம் போட்டார். உடனே, அந்த வழியாக சென்றவர்கள் இந்த பகுதியில் கூட தொடங்கினர். தொடர்ந்து, இந்த கொலை சம்பவம் தொடர்பாக சூலூர் காவல் நிலையத்திற்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். அதன் அடிப்படையில், போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று இளைஞரின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனை மேற்கொள்வதற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் படிக்க: இன்று முதல் சென்னையில் இரவு நேர மின்சார ரயில்கள் வழக்கம்போல இயங்கும்!
கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை
தொடர்ந்து, அந்த பகுதியில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். இதில், கொலை நடந்ததற்கான தடயங்கள் எதுவும் கிடைத்தது போல தெரியவில்லை. மேலும், இந்த கொலை சம்பவம் தொடர்பாக சூலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர். அத்துடன், கொலை செய்யப்பட்ட இளைஞர் யார். அவர் எதற்காக கொலை செய்யப்பட்டார். அவரை கொலை செய்த நபர்கள் யார் என்பது குறித்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கண்காணிப்பு கேமராவில் சிக்கிய கொலையாளி உருவம்?
இதனிடையே, போலீசார் கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்ததில் கொலை கும்பலின் உருவம் பதிவாகி இருப்பதாக கூறப்படுகிறது. அதன் அடிப்படையில் போலீசார் கொலையாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர். சூலூர் பகுதியில் ஆள் அரவம் இல்லாத இடத்தில் இளைஞர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்தப் பகுதி முழுவதும் பெரும் அச்சத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
மேலும் படிக்க: அமைச்சர் ஜெகதீஸ்வரியின் சொந்த கார் மோதி விபத்து.. பைக் ஓட்டி வந்த இளைஞர் துடிதுடித்து பலி.. பரபரப்பு!!