“சினிமா ஷூட்டிங் போல பஞ்ச் டயலாக் பேசும் டம்மி முதல்வர்!”.. உதயநிதி ஸ்டாலின் ஆவேசம்!!
Udhayanidhi Stalin Direct Attack on CM Vijay: "முதலமைச்சரின் சட்டப்பேரவை உரை வெறும் சினிமா ஷூட்டிங் பஞ்ச் டயலாக் போல உள்ளது" எனப் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்த பின் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார். சட்டம் ஒழுங்கு தொடர்பான எங்கள் கேள்விகளுக்குப் பதிலளிக்காமல், சர்க்காரியா கமிஷன் எனப் பழைய பொய்யான குற்றச்சாட்டுகளைப் பேசி திசைதிருப்புவதாக அவர் குற்றஞ்சாட்டினார்.
சென்னை, செப்டம்பர் 07: தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் சட்டம்-ஒழுங்கு மானியக் கோரிக்கை மீதான பதிலுரையை நிகழ்த்தி முடித்ததைத் தொடர்ந்து, எதிர்க்கட்சியான திமுக உறுப்பினர்கள் பேரவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், சட்டப்பேரவையில் சட்டம்-ஒழுங்கு சீர்கேடு மற்றும் போதைப்பொருள் கடத்தல் தொடர்பாகத் தான் எழுப்பிய 15 கேள்விகளுக்குப் பதிலளிக்க முடியாமல் முதலமைச்சர் விஜய் திசைதிருப்பும் அரசியலில் ஈடுபட்டு வருவதாகக் குற்றம் சாட்டினார். மேலும், பேரவையில் எதிர்க்கட்சிக்குப் பதில் அளிக்க வாய்ப்பளிக்காமல் சபாநாயகர் ஒருதலைப்பட்சமாக நடந்துகொள்வதாகவும் அவர் தனது கண்டனத்தைப் பதிவு செய்தார்.
இதையும் படிக்க: “முதல்வர் சொன்னாலும் அனுமதி கிடையாது!”.. திமுக-வுக்கு வாய்ப்பளிக்க சபாநாயகர் மறுப்பு.. பேரவையில் உச்சக்கட்ட பரபரப்பு!
மக்-அப் பண்ணிய சினிமா வசனங்கள்:
செய்தியாளர்களிடம் தொடர்ந்து பேசிய உதயநிதி ஸ்டாலின், “சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஆற்றிய 45 நிமிட பதிலுரையில் முதல் 15 நிமிடங்கள் மட்டுமே காவல்துறை நடவடிக்கைகள் குறித்துப் பேசினார். அதன் பிறகு திமுக மீது எவ்வித ஆதாரமும் இல்லாத பொய்க் குற்றச்சாட்டுகளை அடுக்கத் தொடங்கிவிட்டார். மூன்று நாட்களாக உட்கார்ந்து மனப்பாடம் செய்து வந்து, சினிமா ஷூட்டிங்கில் பேசுவது போலப் பஞ்ச் டயலாக்குகளையும் ரீல்ஸ்க்கான ஆக்டிங்கையும் சட்டசபையில் செய்துள்ளார். நாங்கள் கேட்ட எந்தவொரு சட்டம்-ஒழுங்கு கேள்விக்கோ அல்லது போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கை குறித்தோ எந்தவொரு விளக்கத்தையும் அவர் அளிக்கவில்லை” எனக் கடுமையாகச் சாடினார்.
சர்க்காரியா கமிஷன், மிசா விவகாரத்திற்குப் பதில்:
முதலமைச்சர் விஜய் சர்க்காரியா கமிஷன் மற்றும் மிசா குறித்துப் பேசியதற்குப் பதிலளித்த அவர், “1970-களில் நடந்த சர்க்காரியா கமிஷன் குறித்தும், மிசா குறித்தும் பேசுவதற்கு இந்த முதலமைச்சருக்கு எவ்விதத் தகுதியும் இல்லை. சர்க்காரியா கமிஷன் அறிக்கையில் எந்தத் தவறும் நிரூபிக்கப்படவில்லை என்பதும், அதற்குப் பிறகும் திமுகவை மக்கள் மூன்று முறை ஆட்சியில் அமர்த்தினார்கள் என்பதும் வரலாற்று உண்மை. கொடநாட்டில் தனது திரைப்பட ரிலீஸ்காக வாட்ச்மேன் வேலை பார்த்தவருக்கு மிசாவைப் பற்றி என்ன தெரியும்? இவர் அரசியலுக்கு வந்ததே ஒரு விபத்து, ஆட்சியைப் பிடித்தது அதைவிடப் பெரிய விபத்து” என்று கடுமையாக விமர்சித்தார்.
இதையும் படிக்க: “வாங்கி பழகிய கை.. பேசி பழகிய பை!”.. பேரவையில் சர்க்காரியா கமிஷன் அறிக்கையைத் தோண்டித் துருவிய முதலமைச்சர் விஜய்!
சபாநாயகரின் ஒருதலைப்பட்ச போக்கு:
எதிர்க்கட்சித் தலைவருக்குப் பேச வாய்ப்பளிப்பதாக முதலில் கூறிய சபாநாயகர், பின்னர் யாருடைய நிர்பந்தத்திலோ தனது முடிவை மாற்றி வாய்ப்பு மறுத்துவிட்டதாகக் குற்றம் சாட்டிய உதயநிதி, சபாநாயகர் மன்றம் நடுநிலையோடு செயல்படவில்லை என்றும் சாடினார். மேலும், முதலமைச்சரின் நெருங்கிய நண்பர்களான விஷ்ணு ரெட்டி, சுஜய் ரெட்டி, அணில் ரெட்டி ஆகியோர்தான் மாநிலத்தின் மணல் குவாரிகள் மற்றும் மைனிங் தொழில்களைக் கட்டுப்பாட்டில் வைத்துள்ளதாகப் பகிரங்கக் குற்றச்சாட்டை முன்வைத்த அவர், இதற்கான முறையான ஆதாரங்களை விரைவில் வெளியிடப் போவதாகவும் தெரிவித்தார்.