பூட்டிய வீட்டை நோட்டமிட்டு கைவரிசை.. சொகுசு காரில் வந்து நகை திருடிய தம்பதி கைது.. வேலூரில் அதிர்ச்சி பின்னணி!
Katpadi Couple Arrested For Stealing Jewelry : வேலூர் மாவட்டத்தில் சொகுசு காரில் சென்று பூட்டிய வீட்டை நோட்டமிட்டு 36 பவுன் தங்க நகைகளை கொள்ளை அடித்து சென்ற தம்பதியை தனிப்படை போலீசார் அதிரடியாக கைது செய்து சிறையில் அடைத்தனர்.
வேலூர் மாவட்டம், காட்பாடி பகுதியில் உள்ள திருநகரை சேர்ந்தவர் ராஜ்குமார். தனியார் காப்பீட்டு நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் இவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் அருகில் உள்ள தனது மாமியார் வீட்டுக்கு சென்று இருந்தார். அந்த நேரத்தில் மர்ம நபர்கள் அவரது வீட்டின் கூட்டை உடைத்து உள்ளே சென்று பீரோவில் இருந்த சுமார் 36 பவுன் தங்க நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்து விட்டு சென்றனர். சிறிது நேரம் கழித்து வீடு திரும்பிய ராஜ்குமார் குடும்பத்தினர் வீட்டின் கதவு உடைக்கப்பட்டு கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உள்ளே சென்று பார்த்த போது, வீட்டில் பீரோவில் இருந்த துணிகள் மற்றும் பொருள்கள் சிதறி கிடந்தன.
தனிப்படை அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை
அத்துடன், பீரோவில் வைக்கப்பட்டிருந்த நகைகள் திருடு போயிருந்தது தெரியவந்தது. இது தொடர்பாக ராஜ்குமார் காட்பாடி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில், வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் அடிப்படையில், மர்ம நபர்களை கைது செய்வதற்கு தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடந்து வந்தது. மேலும், அந்த பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை தனிப்படை போலீசார் கைப்பற்றிய ஆய்வு செய்தனர்.
மேலும் படிக்க: பிளஸ் 2 மாணவி கூட்டு வன்கொடுமை… ஒருவருக்கு மரண தண்டனை.. நெல்லை போக்சோ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!




சொகுசு காரில் வந்து நகை திருடிச் சென்ற தம்பதி
இதில், மர்ம நபர்கள் சொகுசு காரில் வந்து நகைகளை திருடி சென்றது பதிவாகி இருந்தது. இது தொடர்பாக போலீசார் விசாரணையை தீவிர படுத்திய நிலையில், திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது முத்துவேல் கார்த்திக் மற்றும் அவரது மனைவி பிரபாவதி என்பது உறுதி செய்யப்பட்டது. அதன் அடிப்படையில், அவர்கள் இருப்பிடத்தை அறிந்த அடிப்படை போலீசார் இன்று செவ்வாய்க்கிழமை ( செப்டம்பர் 8- ஆம் தேதி) அவர்களை சுற்றி வளைத்து அதிரடியாக கைது செய்தனர். தொடர்ந்து, அவர்களை காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.
போலீசார் விசாரணையில் அதிர்ச்சி தகவல்
இதில், அவர்கள் பல்வேறு இடங்களில் வீடுகளை வாடகைக்கு எடுத்து தங்கி இருந்து வந்ததும், பூட்டி இருக்கும் வீடுகளை நோட்டமிட்டு கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது. தொடர்ந்து, அவர்களிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட 36 பவுன் தங்க நகைகளை போலீசார் பத்திரமாக மீட்டனர். அத்துடன் அவர்கள் பயன்படுத்தி வந்த சொகுசு காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இதில், வேறு ஏதேனும் தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் படிக்க: புலி பட வருவாயை மறைத்த உத்தமர் ஜோசப் விஜய்… மிசாவை பற்றி பேச என்ன அருகதை உள்ளது… தயாநிதி மாறன் காட்டமான கேள்வி!