கோவையில் அதிர்ச்சி.. வீட்டின் முன் விளையாடிய குழந்தை தண்ணீர் தொட்டியில் விழுந்து பலி.. பெற்றோர் அலச்சியத்தால் நேர்ந்த பெருஞ்சோகம்!
Coimbatore Crime : கோயம்புத்தூர் மாவட்டத்தில் வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்த 1.5 வயது ஆண் குழந்தை எதிர்பாராதவிதமாக தரை தள தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தது. இது தொடர்பாக ரத்தினகிரி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
கோயம்புத்தூரில் வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்த 1.5 வயது ஆண் குழந்தை சரியாக மூடப்படாத நிலத்தடி தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கோயம்புத்தூர் மாவட்டம், ரத்தினகிரி அருகே உள்ள வஉசி நகர் பகுதியை சேர்ந்தவர் வேணுகோபால். இவரது மனைவி கலைவாணி. தம்பதிக்கு 1.5 வயதில் தன்வந்த் என்ற ஆண் குழந்தை இருந்தது. இந்த நிலையில், நேற்று திங்கள்கிழமை தன்வந்த் வழக்கம் போல தனது வீட்டின் முன் பகுதியில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது, எதிர்பாராத விதமாக அந்த பகுதியில் உள்ள நிலத்தடி தண்ணீர் தொட்டிக்குள் விழுந்தார். இந்த தொட்டியின் மேல் பகுதியில் வைக்கப்பட்டிருந்த தகர பலகை சரியாக மூடப்படாமல் இருந்ததால் குழந்தை உள்ளே விழுந்ததாக கூறப்படுகிறது.
தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்த குழந்தை
வெகு நேரமாகியும் குழந்தையின் சத்தம் கேட்காததால் சந்தேகம் அடைந்த பெற்றோர் வெளியே வந்து தேடினர். அப்போது, வீட்டின் முன் பகுதியில் குழந்தை இல்லாததால் அக்கம் பக்கத்தில் தேடத் தொடங்கினர். அங்கும் குழந்தை கிடைக்காததால் பெற்றோர் சத்தமிட்டு அழ தொடங்கினர். இதனால், அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் திரண்டு வந்து குழந்தையை தேடும் முயற்சியில் ஈடுபட்டனர். சிறிது நேர தேடலுக்கு பின்னர் சந்தேகம் அடைந்த பெற்றோர் வீட்டின் தரை தளத்தில் இருந்த தண்ணீர் தொட்டியை பார்த்தபோது குழந்தையை உள்ளே மயங்கி கிடந்தது தெரிய வந்தது.
மேலும் படிக்க: பிளஸ் 2 மாணவி கூட்டு வன்கொடுமை… ஒருவருக்கு மரண தண்டனை.. நெல்லை போக்சோ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட குழந்தை உடல்
உடனே, குழந்தையை மீட்ட பெற்றோர் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு, குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே குழந்தை இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த ரத்தினபுரி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று குழந்தையின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனை மேற்கொள்வதற்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, இது தொடர்பாக குழந்தையின் தந்தை வேணுகோபால் ரத்தினபுரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
போலீசார் விசாரணையில் அதிர்ச்சி தகவல்
அந்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதில், தண்ணீர் தொட்டியின் மேல் வைக்கப்பட்டிருந்த தகரப் பலகை சரிவர மூடாமல் இருந்த நிலையில், அதன் மீது குழந்தை ஏறிய போது எதிர்பாராத விதமாக தொட்டியில் விழுந்து மூச்சு திணறி உயிரிழந்திருக்கலாம் என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வீட்டில் இருந்த தண்ணீர் தொட்டியில் 1.5 வயது ஆண் குழந்தை தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் அந்த பகுதி முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க: பூட்டிய வீட்டை நோட்டமிட்டு கைவரிசை.. சொகுசு காரில் வந்து நகை திருடிய தம்பதி கைது.. வேலூரில் அதிர்ச்சி பின்னணி!