PCB: எனக்கு இன்னும் சம்பள பாக்கியை தரவில்லை.. பாகிஸ்தான் முன்னாள் டெஸ்ட் பயிற்சியாளர் பகீர் குற்றச்சாட்டு!
Jason Gillespie: பாகிஸ்தான் வாரியத்தில் ஏற்பட்ட மாற்றத்திற்குப் பிறகு, தனக்கு அநியாயம் இழைக்கப்பட்டதாகவும், அவமானப்படுத்தப்பட்டதாகவும், அவருக்குச் சேர வேண்டிய நிலுவைத் தொகைகள் வழங்கப்படவில்லை என்றும் பாகிஸ்தான் டெஸ்ட் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைமைப் பயிற்சியாளரான ஜேசன் கில்லெஸ்பி தெரிவித்துள்ளார். இது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தான் டெஸ்ட் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைமைப் பயிற்சியாளரான ஜேசன் கில்லெஸ்பி (Jason Gillespie), பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துடன் தனக்கு ஏற்பட்ட கசப்பான நிகழ்வுகளை வெளிப்படுத்தியுள்ளார். பாகிஸ்தான் வாரியத்தில் ஏற்பட்ட மாற்றத்திற்குப் பிறகு, தனக்கு அநியாயம் இழைக்கப்பட்டதாகவும், அவமானப்படுத்தப்பட்டதாகவும், அவருக்குச் சேர வேண்டிய நிலுவைத் தொகைகள் வழங்கப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் அணியின் (Pakistan Cricket Team) இழந்த கௌரவத்தை மீட்டெடுக்கும் நம்பிக்கையில் கில்லெஸ்பி அணியில் சேர்க்கப்பட்டார். ஆனால் அது கைகூடவில்லை.
ALSO READ: இந்திய பிளேயருக்கு எதிராக செய்கை.. பாகிஸ்தான் கேப்டனுக்கு ஐசிசி வைத்த செக்!
ஆகிப் ஜாவேத்தின் வருகை:
தி டெலிகிராஃப் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், ஆகிப் ஜாவேத் தலைமைத் தேர்வாளராகப் பொறுப்பேற்ற பிறகு எல்லாம் மாறிவிட்டதாக ஜேசன் கில்லெஸ்பி விளக்கினார். அவர் கூறியதாவது, “ஆகிப் ஜாவேத் தலைமைத் தேர்வாளராகப் பொறுப்பேற்ற பிறகு அந்தத் தருணத்திலிருந்து, பாகிஸ்தான் கிரிக்கெட்டுடனான எனது உறவு முற்றிலும் மாறிவிட்டது. ஆகிப் வந்து பொறுப்பேற்றார். எல்லாவற்றிற்கும் அவரே பொறுப்பு என்று நான் உணர்ந்தேன்.




டெஸ்ட் அணியைப் பார்த்துக்கொள்வது, அதை நிர்வகிப்பது, வீரர்களையும் ஊழியர்களையும் கவனித்துக்கொள்வது மற்றும் தேர்வில் பங்கு வகிப்பது என்ற நிலையில் இருந்து, எதிலும் எந்தப் பங்கும் இல்லாத நிலைக்கு நான் தள்ளப்பட்டேன். இந்த அனுபவம் எனது ஆர்வத்தைப் பறித்து, பயிற்சியளிப்பதில் இருந்து என்னை விலகச் செய்தது. அது என் மீது மனரீதியான தாக்கத்தை ஏற்படுத்தி, என்னை நானே சந்தேகிக்கவும், இந்த விளையாட்டில் நான் இன்னும் ஈடுபட விரும்புகிறேனா என்று யோசிக்கவும் வைத்தது.” என்றார்.
நான் அவமானப்படுத்தப்பட்டேன்..
தொடர்ந்து பாகிஸ்தானின் முன்னாள் பயிற்சியாளர் ஜேசன் கில்லெஸ்பி, “நான் அவமானப்படுத்தப்பட்டேன், என் மதிப்பு குறைக்கப்பட்டது. இதற்கு நான் ஆகிப் ஜாவேத்தையே பொறுப்பாக்குகிறேன். அவர்தான் பொறுப்பில் இருக்கிறார் என்பதைக் காட்டிக்கொள்ளும் விதமாக, மிகுந்த ஆணவத்துடனும் பகட்டுடனும் எங்கள் முதல் சந்திப்பிற்கு வந்தார். இதைத்தான் நாம் செய்ய வேண்டும்’ என்று என்னிடம் கூறினார். நான் அவர் சொல்வதைக் கேட்டு, ‘சரி’ என்றேன். இது தொடர்ந்தது, மேலும் அவருடைய சில கருத்துக்களுக்கு நான் எதிர்ப்பு தெரிவித்தேன். அந்த நொடியிலேயே, இது பலனளிக்காது என்று எனக்கு தெரிந்துவிட்டது. ஏனென்றால், அவர் என்ன செய்யப் போகிறார் என்பதை ஏற்கெனவே முடிவு செய்துவிட்டார். எங்களிடையே எந்த ஒருங்கிணைப்பும் இல்லை.” என்றார்.
சம்பளம் பாக்கி:
தனது பயிற்சிக்காக பாகிஸ்தான் வாரியம் தனக்கு இன்னும் பணம் தர வேண்டியுள்ளது என்றும் கில்லெஸ்பி குற்றம் சாட்டினார். அதில், “பாகிஸ்தான் வாரியம் எனக்கு இன்னும் ஆயிரக்கணக்கான டாலர்களைத் தர வேண்டியுள்ளது. ஆனால், நான் ஒருபோதும் அவர்களுக்கு ஆமாம் சாமி போடுபவனாக இருந்ததில்லை. நான் எனது கொள்கைகளில் சமரசம் செய்துகொள்வதில்லை. எனது தொழில் வாழ்க்கை முழுவதும் நான் அப்படிச் செய்ததில்லை, நிச்சயமாக நான் மாறப்போவதும் இல்லை.
ALSO READ: பாகிஸ்தான் பிளேயர் காலில் கோலி பிராண்ட் ஷூ.. இணையத்தில் ட்ரெண்ட் அடிக்கும் புகைப்படங்கள்!
நான் அமைதியாக இருந்து, எல்லாவற்றிற்கும் சம்மதித்து, என் சம்பளத்தை வாங்கியிருக்கலாம். ஆனால் நான் அப்படிப்பட்டவன் அல்ல. எப்படியும் இன்னும் சில மாதங்களில் நான் வேலையிலிருந்து நீக்கப்படுவேன் என்பது எனக்கு எங்கோ தெரிந்திருந்தது.” என்றார்.