காலில் இரும்புக் கம்பியுடன் தவித்த பெண் யானை.. ட்ரோன் மூலம் கண்காணித்து சிகிச்சை!
கோவை அருகே சிறுமுகை வனப்பகுதியில் காலில் இரும்புக் கம்பி சிக்கி அவதிப்பட்ட பெண் யானைக்கு வனத்துறையினர் மற்றும் கால்நடை மருத்துவர்கள் சிகிச்சை அளித்து காப்பாற்றினர். சிறுமுகை அடுத்த பெத்திக்குட்டை, உளியூர் காப்புக்காடு பகுதியில் கடந்த 2-ஆம் தேதி ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த வனத்துறையினர், பெண் யானையின் இடது முன்னங்காலில் இரும்புக் கம்பி சிக்கியிருப்பதை கண்டறிந்தனர்.
கோவை, செப். 7: கோவை அருகே சிறுமுகை வனப்பகுதியில் காலில் இரும்புக் கம்பி சிக்கி அவதிப்பட்ட பெண் யானைக்கு வனத்துறையினர் மற்றும் கால்நடை மருத்துவர்கள் சிகிச்சை அளித்து காப்பாற்றினர். சிறுமுகை அடுத்த பெத்திக்குட்டை, உளியூர் காப்புக்காடு பகுதியில் கடந்த 2-ஆம் தேதி ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த வனத்துறையினர், பெண் யானையின் இடது முன்னங்காலில் இரும்புக் கம்பி சிக்கியிருப்பதை கண்டறிந்தனர். இதையடுத்து மாவட்ட வன அலுவலர் தலைமையில் மீட்புக் குழு அமைக்கப்பட்டது.
ஆனைமலை மற்றும் சத்தியமங்கலம் வனப்பகுதிகளைச் சேர்ந்த 5 கால்நடை மருத்துவர்கள், 60 வனப் பணியாளர்கள் மற்றும் யானைப் பாகன்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். ட்ரோன் மூலம் யானையின் நடமாட்டத்தை கண்காணித்த வனத்துறையினர், நேற்று (செப். 6) மயக்க ஊசி செலுத்தி, காலில் சிக்கியிருந்த இரும்புக் கம்பியை அகற்றினர். காயத்துக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு, பின்னர் யானை மீண்டும் வனப்பகுதிக்குள் விடப்பட்டது.
