“தளபதி விஜய் சும்மா விடமாட்டார்!”.. ஊழல் புகார்களுக்கு முற்றுப்புள்ளி வைத்த அமைச்சர் ஆனந்தின் பரபர பேச்சு!
TVK Minister Anand Speech: மதுராந்தகம் அருகே நடைபெற்ற முதலமைச்சர் விஜய் பிறந்தநாள் விழாவில் பேசிய அமைச்சர் என். ஆனந்த், தவெக தேர்தல் செலவுகள் குறித்தும் கட்சியின் நேர்மை குறித்தும் பெருமிதம் தெரிவித்தார். வெறும் 1.75 லட்சம் ரூபாய் செலவில் சட்டமன்ற உறுப்பினரான கட்சி தவெக மட்டுமே என்றும் கூறியுள்ளார்.
செங்கல்பட்டு, ஜூலை 20: மக்கள் பணத்தில் ஊழல் செய்வதோ அல்லது முறைகேடுகளில் ஈடுபடுவதோ எக்காரணத்தைக் கொண்டும் தமிழக வெற்றிக் கழக ஆட்சியில் நடக்காது; மீறி நாங்கள் யாராவது தவறு செய்தால், முதலமைச்சர் விஜய் எங்களை உடனடியாகப் பதவியிலிருந்து நீக்கிவிடுவார்” என்று அமைச்சர் என்.ஆனந்த் கூறியுள்ளார். செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த நல்லாமூர் பகுதியில் தமிழக முதலமைச்சரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான சி. ஜோசப் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு பிரம்மாண்ட நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
இந்த விழாவில் தவெக அரசின் முக்கிய அமைச்சர்களான என்.ஆனந்த் மற்றும் ஆர்.சரத்குமார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டு, அப்பகுதி மக்களுக்குப் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கிச் சிறப்பித்தனர். விழா மேடையில் பொதுமக்கள் மத்தியில் உரையாற்றிய அமைச்சர் என்.ஆனந்த், தவெகவின் தேர்தல் அரசியல் மற்றும் கட்சியின் நேர்மை குறித்துப் பெருமிதத்துடன் பேசினார்.
மேலும் படிக்க: கல்வித்துறை அமைச்சரை பதவி நீக்கம் செய்ய வேண்டும்.. இந்திய கம்யூனிஸ்ட் வீரபாண்டியன் வலியுறுத்தல்!
குறைந்த செலவில் வென்ற ஒரே கட்சி:
அவர் பேசுகையில், “பொதுவாகத் தேர்தல்களில் வேட்பாளர்கள் பல கோடி ரூபாய் பணத்தை வாரி இறைத்துச் செலவு செய்வதைத்தான் மக்கள் இதுவரை பார்த்திருப்பார்கள். ஆனால், வெறும் 1,75,000 ரூபாய் மட்டுமே செலவு செய்து, மக்கள் ஆதரவோடு சட்டமன்ற உறுப்பினராக வென்றெடுக்கப்பட்ட ஒரே கட்சித் தொண்டர்கள் இருக்கிறது என்றால், அது தமிழக வெற்றி கழகம் மட்டும்தான்” என்று குறிப்பிட்டார்.
ஊழலுக்கு எதிரான எச்சரிக்கை
தொடர்ந்து பேசிய அவர், நேர்மையான மற்றும் வெளிப்படையான நிர்வாகத்தை மக்களுக்கு வழங்குவதே இந்த அரசின் ஒற்றை இலக்கு என்பதைத் தெளிவுபடுத்தினார். “தேர்தலில் மிகக் குறைந்த செலவில் வென்று மக்கள் சேவையில் ஈடுபட்டுள்ளதால், பொதுமக்களின் வரிப்பணத்தில் முறைகேடு செய்வதோ அல்லது லஞ்ச ஊழல்களில் ஈடுபடுவதோ எக்காரணத்தைக் கொண்டும் தவெக ஆட்சியில் அரங்கேறாது” என்று திட்டவட்டமாகக் கூறினார்.
அமைச்சர் பதவி நீக்கம்:
மேலும், தவறு செய்யும் அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் மீதான தலைமைச் செயல்பாடுகள் குறித்துப் பேசுகையில், “அமைச்சர்களாகிய நாங்களோ அல்லது கட்சியின் மக்கள் பிரதிநிதிகளோ யாராக இருந்தாலும் சரி, மக்கள் பணியில் ஏதேனும் தவறு செய்தாலோ அல்லது ஊழலில் ஈடுபட்டாலோ, எங்களது தலைவர் தளபதி விஜய் எங்களை அடுத்த கணமே அந்த அமைச்சர் பதவியிலிருந்து உடனடியாக நீக்கிவிடுவார் என்பதை இந்த மேடையில் உறுதியாகத் தெரிவித்துக் கொள்கிறேன்” என அதிரடி எச்சரித்தார்.
மேலும் படிக்க: சமணர் படுகை மலையேறி படுத்துப் பார்த்த அமைச்சர் ராஜ்மோகன்.. மதுரையில் நடந்த திடீர் ஆய்வு!!
அமைச்சரின் இந்த வெளிப்படையான பேச்சு அங்கிருந்த தவெக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பலத்த வரவேற்பையும், அரசியல் வட்டாரத்தில் பரவலான விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.