2 மாத ஆட்சிக்கே இவ்வளவு மமதையா? முதல்வர் விஜய்யை விளாசி தள்ளிய எடப்பாடியார்!
Edappadi Palaniswami Criticizes Joseph Vijay : தமிழகத்தின் முதல்வராக பதவி ஏற்ற 2 மாதங்களில் முதல் அமைச்சருக்கு மமதை எண்ணம் ஏற்பட்டுள்ளதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி கடுமையாக விமர்சனம் செய்தார். இதுகுறித்த முழு விவரத்தை பார்க்கலாம்.
தமிழக முதல் அமைச்சர் விஜய்க்கு மமதை எண்ணம் ஏற்பட்டுள்ளதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது: கடந்த திமுக ஆட்சியில் கோவில் காவலாளி அஜித் குமார் முதல் சென்னை தலைமைச் செயலக காலனி போலீசாரால் விக்னேஷ், தமிழக பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்புடையவர்கள் என்று பல சந்தர்ப்பங்களில் பல்வேறு காவல் நிலையங்களில் அடித்தும், என்கவுண்டர் என்ற பெயரிலும் கொல்லப்பட்டுள்ளனர். தமிழகத்தை தலைகீழாக மாற்றி விடுவோம் என்று கூறி தமிழக வெற்றி கழகம் ஆட்சியைப் பிடித்தது. ஆனால், கடந்த 5 ஆண்டுகள் ஆட்சி நடத்திய நிர்வாக திறன் அற்ற திமுக அரசுக்கு முடிவுரை எழுதப்பட்டு விட்டதாக மக்கள் நினைத்திருந்த நிலையில், அந்த ஆட்சியின் தொடர்ச்சியாக நாங்கள் இருக்கிறோம் என்று தமிழக வெற்றிக்கழக ஆட்சியாளர்கள் செயல்பட்டு வருவது மிகுந்த வேதனை அளிக்கிறது.
துஷ்ட சக்தி ஆட்சியாளர்களின் கையில் தமிழகம்
முக்கிய குற்றம் வழக்குகளில் தொடர்புள்ள சில முக்கிய புள்ளிகளை காப்பாற்றுவதற்காக இது போன்ற நடவடிக்கைகள் கடந்த திமுக அரசால் எடுக்கப்பட்டன என்று பொதுமக்கள் கூட்டம் சாட்டி இருந்தது. மாற்றம் கொண்டு வருவோம் என்று கூறி ஆட்சி அமைத்த தமிழக வெற்றிக் கழக அரசில் அடாவடித்தனங்கள் நிகழாது என்று மக்கள் நம்பினார்கள். ஆனால், மழை நின்றும் தூவானம் விடவில்லை என்பது போல கொடுங்கோல் ஆட்சியாளர்களிடம் இருந்து மக்கள் ஈடுபட்டிருந்தாலும் துஷ்ட சக்தி ஆட்சியாளர்களின் கையில் சிக்கித் தவிக்கிறார்கள்.
மேலும் படிக்க: சிவகங்கையில் தாசில்தார் வீட்டுக்கு குறி.. 50 பவுன் நகையை கொள்ளையடித்த மர்ம கும்பல்.. போலீஸ் வலைவீச்சு!




காவலர்கள் விசாரணையில் இருவர் மரணம்
சமீபத்தில் நாகர்கோவில் சிறையில் மாற்றுத்திறனாளி கைதி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். அவரை சிறை காவலர்கள் கொடுமைப்படுத்தி கொலை செய்தார்கள் என்று அவரது குடும்பத்தினர் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அமைச்சர்கள் தருவதாக சொன்ன நிவாரண நிதியையும், உதவியையும் பெறுவதற்கு பாதிக்கப்பட்ட நபரின் குடும்பத்தினர் மறுத்ததாக செய்திகள் வெளியாகி இருந்தன. புழல் சிறையிலும் விசாரணை கைதி ஒருவர் மர்மமான முறையில் மரணமடைந்ததாக செய்திகள் வெளியாகி வருகின்றன. இதற்கு அவரது உறவினர்களும் நீதி கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
முதல்வர் விஜய்க்கு மமதை எண்ணம்
அவர்களிடம் தமிழக வெற்றிக் கழக ஆட்சியாளர்கள் விலை பேசி வருகின்றனர். விலைமதிப்பு இல்லாத உயிர்களுக்கு உயிரே உன் விலை என்ன என்று கேட்டு பணத்தை வாரி இறைத்து வருகின்றனர். இதன் மூலம் அப்பாவி மக்களின் வாயை அடைத்து விடலாம் என்ற மமதை எண்ணம், ஆட்சிக்கு வந்த 60 நாட்களுக்குள்ளேயே ஒரு முதல்வருக்கு வந்துள்ளது என்பது மக்கள் மனதில் கடும் வேதனையை ஏற்படுத்தி உள்ளது என்று எடப்பாடி பழனிசாமி ஆவேசமாக தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க: லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி.. சிவகங்கையில் கையும் களவுமாக சிக்கிய மின்வாரிய அதிகாரிகள்!