சிவகங்கையில் தாசில்தார் வீட்டுக்கு குறி.. 50 பவுன் நகையை கொள்ளையடித்த மர்ம கும்பல்.. போலீஸ் வலைவீச்சு!
Sivaganga Gold Theft: சிவகங்கை மாவட்டத்தில் பெண் தனி வட்டாட்சியர் வீட்டில் ஆள்கள் இல்லாததை நோட்டமிட்ட மர்ம கும்பல் கதவை உடைத்து உள்ளே சென்று சுமார் 50 பவுன் தங்க நகைகளை கொள்ளை அடித்து சென்றது. இது தொடர்பாக போலீசார் விசாரிக்கின்றனர்.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி பர்மா காலனி பகுதியை சேர்ந்தவர் சாந்தி ( 56 வயது). இவர், சிவகங்கை தனி வட்டாட்சியராக பணிபுரிந்து வருகிறார். இவரது மகன் காரைக்குடியில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில், சாந்தி மற்றும் அவரது குடும்பத்தினர் வீட்டில் இருந்து வெளியே சென்றிருந்தனர். பிற்பகலில் வட்டாட்சியர் சாந்தியின் மருமகள் மட்டும் வீடு திரும்பி உள்ளார். அப்போது, வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதை பார்த்த அதிர்ச்சி அடைந்த அந்த பெண் உள்ளே சென்று பார்த்த போது, வீட்டினுள் இருந்த பீரோ உடைக்கப்பட்டு பொருள்கள் ஆங்காங்கே சிதறி கிடந்தன. இது தொடர்பாக, வட்டாட்சியர் சாந்திக்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில், வட்டாட்சியர் சாந்தி பதறி அடித்துக் கொண்டு வீட்டிற்கு சென்று பார்த்தார்.
பீரோவில் இருந்த 50 பவுன் நகைகள் கொள்ளை
இதில், வீட்டின் பீரோவில் வைக்கப்பட்டிருந்த சுமார் 50 பவுன் தங்க நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. வீட்டில் யாரும் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீட்டின் பின்பக்க வாயில் கதவை உடைத்து உள்ளே சென்று நகைகளை கொள்ளை அடித்து சென்றது தெரிய வந்தது. இதை தொடர்ந்து, காரைக்குடி வடக்கு காவல் நிலையத்தில் இந்த சம்பவம் தொடர்பாக வட்டாட்சியர் சாந்தி புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.
மேலும் படிக்க: சமூகநீதி விடுதியில் முதல்வர் விஜய் திடீர் விசிட்.. அதிர்ந்துபோன அதிகாரிகள்..!




சிவகங்கை எஸ்.பி.- டி.எஸ்.பி விசாரணை
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவ பிரசாத், காரைக்குடி உதவி காவல் கண்காணிப்பாளர் ஆசிஷ் புனியா ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர். மேலும், விரல் ரேகை நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்தனர். இது தொடர்பாக காரைக்குடி வடக்கு காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர்.
கண்காணிப்பு கேமரா காட்சிகளின்படி தேடுதல் வேட்டை
இந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளில் மர்ம நபர்களின் உருவம் பதிவாகி இருந்ததாக தெரிகிறது. அதன்படி, அந்த மர்ம நபர்கள் பயன்படுத்திய வாகன எண்களை கண்டறிந்து அதன் அடிப்படையில் விசாரணையை தொடங்கி உள்ளனர். வட்டாட்சியர் வீட்டில் புகுந்து 50 பவுன் நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் படிக்க: தமிழக இடைத்தேர்தல் தாமதம் ஏன்? தலைமை தேர்தல் அதிகாரி விளக்கம்!