தவெக எம்எல்ஏவிடம் பேர வழக்கு: அடுத்தடுத்து சிக்கிய புள்ளிகள்… ரூ. 2 கோடி பறிமுதல் செய்து அதிரடி!
TVK MLA Bargaining Case: தமிழக வெற்றிக் கழகத்தின் எம்எல்ஏ இளையராஜவிடம் பேரம் பேசிய வழக்கில் 12 பேர் கைதான நிலையில், இதில், 3 பேரிடம் இருந்து ரூ. 2 கோடி ரொக்கத்தை போலீசார் பறிமுதல் செய்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
தமிழக வெற்றி கழக அரசை கவிழ்ப்பதற்காக இந்த கட்சியின் கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை தொகுதி எம்எல்ஏவான இளையராஜாவுடன் ஐபிடிஎஸ் தேர்தல் கணிப்பு நிறுவனத்தை சேர்ந்த திருநாவுக்கரசு உள்ளிட்டோர் பேரம் பேசியதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக இளையராஜா எம்எல்ஏ அளித்த புகாரின் அடிப்படையில், திருவல்லிக்கேணி போலீசார் வழக்கு பதிவு செய்து, திருநாவுக்கரசு உள்ளிட்ட 12 பேரை கைது செய்தனர். மேலும், 3 பேரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதில், சென்னை கொரட்டூரை சேர்ந்த கருணாநிதி, சாலிகிராமத்தை சேர்ந்த சரவணன், பள்ளிக்கரணியை சேர்ந்த வினோத் ஆகிய 3 பேரிடம் இருந்து சுமார் 2 கோடி ரொக்கத்தை போலீசார் பறிமுதல் செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதில், மேலும் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என்று கூறப்படுகிறது.
குதிரை பேர வழக்கில் அமலாக்கத்துறை விசாரணை
இந்த பேரம் விவகாரத்தில் சபாநாயகருக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றவும், அவருக்கு எதிராக வாக்களிக்கவும் கோரி தமிழக வெற்றிக் கழக எம்எல்ஏக்களிடம் பேரம் பேசப்பட்டது. இதில், கைதான நபர்களிடம் சிங்கப்பூரை சேர்ந்த தொழிலதிபரான லட்சுமண பெருமாள் என்பவர் தமிழக வெற்றிக் கழக எம்எல்ஏக்களை இழுப்பதற்காக செல்போன் வாயிலாக ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியில் ஈடுபட்டிருந்தார். இதில், சட்டவிரோத பண பரிமாற்றம் நடந்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகம் அடைந்தனர். இதனிடையே, அமலாக்கத்துறை இந்த வழக்கு தொடர்பாக தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது.
மேலும் படிக்க: சிவகங்கையில் தாசில்தார் வீட்டுக்கு குறி.. 50 பவுன் நகையை கொள்ளையடித்த மர்ம கும்பல்.. போலீஸ் வலைவீச்சு!




ஏற்கெனவே ரூ.50 லட்சம் பறிமுதல்
ஏற்கனவே, கைதான நபர்களிடமிருந்து ரூ.50 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டிருந்தது. இது தொடர்பாகவும் அமலாக்கத்துறை விசாரணை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில், குதிரை பேரம் வழக்கில் மேலும் 3 பேரிடமிருந்து ரூ. 2 கோடி பறிமுதல் செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அத்துடன், இது தொடர்பாகவும் அமலாக்கத்துறை தனியாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளும் என்று தெரிகிறது.
முன்னாள் அமைச்சருக்கு தொடர்பு
குதிரை பேரம் வழக்கில் கைதான திருநாவுக்கரசு உள்ளிட்டோரிடம் திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னாள் அமைச்சர் ஆன செந்தில்பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக் குமார் ஆகியோருக்கும் இதில் தொடர்பு இருப்பதாக போலீசார் தரப்பில் கூறப்பட்டது. மேலும், அவர்களது செல்போனை போலீசார் ஆய்வு செய்வதில், தொடர்ந்து இவர்கள் தொடர்பில் இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதன் அடிப்படையிலும், போலீசார் செந்தில் பாலாஜி, அசோக்குமார் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த வழக்கு தற்போது மேலும் வேகம் எடுத்துள்ளது.
மேலும் படிக்க: வீடியோ மோகம் விபரீதம்… வால்பாறையில் பள்ளத்தில் விழுந்து திருச்சி இளைஞர்கள் பலி!