லாரியிலிருந்து விழுந்த ராட்சத இரும்புப் பொருள்.. பிரபல ஜல்லிக்கட்டு வீரர்கள் இருவர் பரிதாப பலி.. சோழவந்தான் அருகே சோகம்!
Madurai Lorry Accident: மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே தேசிய நெடுஞ்சாலையில் லாரியிலிருந்து கழன்று விழுந்த இரும்புத் துண்டு மோதி, பிரபல ஜல்லிக்கட்டு மாடுபிடி வீரர்கள் இருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இணைபிரியா நண்பர்களான இருவரின் இந்த அகால மரணம் சித்தாளங்குடி கிராம மக்களைப் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
மதுரை, செப்டம்பர் 09: மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே மதுரை – திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் நடைபெற்ற கொடூரமான சாலை விபத்து ஒன்று அப்பகுதி மக்களை உலுக்கியுள்ளது. தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டில் களமிறங்கி பல்வேறு பரிசுகளையும் புகழையும் வென்ற இரண்டு சிறந்த மாடுபிடி வீரர்கள், எதிர்பாராதவிதமாக நடந்த வீதி விபத்தில் தங்களது உயிரை இழந்துள்ளனர். இந்தச் சம்பவம் ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் மத்தியிலும் அப்பகுதி பொதுமக்கள் மத்தியிலும் ஆழமான அதிர்ச்சியையும் துயரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிக்க: புலி பட வருவாயை மறைத்த உத்தமர் ஜோசப் விஜய்… மிசாவை பற்றி பேச என்ன அருகதை உள்ளது… தயாநிதி மாறன் காட்டமான கேள்வி!
சிறுவயது முதலே நெருங்கிய நண்பர்கள்:
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே அமைந்துள்ள சிட்டாளாங்குடி கிராமத்தைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன் மற்றும் ராகுல் ஆகிய இருவரும் சிறுவயது முதலே நெருங்கிய நண்பர்களாக வாழ்ந்து வந்தனர். சிறந்த ஜல்லிக்கட்டு மாடுபிடி வீரர்களான இவர்கள் இருவரும், மதுரையின் அலங்காநல்லூர், பாலமேடு மற்றும் அவனியாபுரம் உள்ளிட்ட பல்வேறு புகழ்பெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் ஒன்றாகக் களம் கண்டு, காளைகளை அடக்கிப் பல தங்கக் காசுகள் மற்றும் பரிசுகளைக் குவித்தவர்கள் ஆவர். களத்திலும் நிஜ வாழ்விலும் இணை பிரியா நண்பர்களாக வலம் வந்த இவர்கள், வழக்கம்போல் தங்களது இருசக்கர வாகனத்தில் பயணித்தபோதே இந்த அகால சம்பவம் நிகழ்ந்துள்ளது.
மோதிய இரும்பு எந்திரப் பாகம்:
நேற்று இரவு இருவரும் மதுரை – திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் நகரி பகுதி அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது திண்டுக்கல் மார்க்கமாகச் சென்று கொண்டிருந்த கனரக லாரி ஒன்றிலிருந்து, எதிர்பாராதவிதமாக மிகப்பெரிய இரும்பு எந்திரப் பாகம் ஒன்று கழன்று கீழே விழுந்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் கீழே விழுந்த அந்தப் பாரமான இரும்பு எந்திரப் பாகம், பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த கோபாலகிருஷ்ணன் மற்றும் ராகுலின் வாகனம் மீது பலமாக மோதியது. இதில் நிலைதடுமாறி சாலையில் தூக்கி வீசப்பட்ட இருவருக்கும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
தப்பிச் சென்ற லாரியை பிடிக்க தீவிரம்:
விபத்து நடந்தவுடனேயே, வாகனத்தை நிறுத்தாமல் தப்பிச் சென்ற லாரியைக் கண்டுபிடிக்கக் காவல்துறை தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சோழவந்தான் காவல்துறையினர், இருவரின் உடல்களையும் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து, அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளைக் கொண்டு விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற லாரியையும் அதன் ஓட்டுநரையும் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
இதையும் படிக்க: விநாயகர் சதுர்த்தி: 10 அடிக்கு மேல் சிலை வைக்கத் தடை.. சிசிடிவி கட்டாயம்.. சென்னையில் சிலை அமைக்க காவல்துறை கடும் கட்டுப்பாடுகள்..
பல்வேறு ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் களமிறங்கி ஊருக்கே பெருமை சேர்த்த இரு இளம் வீரர்கள் ஒரே நேரத்தில் விபத்தில் பலியான சம்பவம், சிட்டாளாங்குடி கிராமத்தையே கண்ணீரில் மூழ்கடித்துள்ளது.