AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

“திமுகவை இயக்கியது ரத்தீஷ் எனும் பவர் புரோக்கர்!”.. அமைச்சர் நிர்மல்குமார் முன்வைக்கும் பரபரப்பு குற்றச்சாட்டுகள்!

CTR Nirmal Kumar Press Meet: உதயநிதி ஸ்டாலினுடன் நெருக்கமாக இருந்த நபர்கள் மற்றும் பவர் புரோக்கர்கள் மூலம் அரசுத் துறைகள் இயக்கப்பட்டதாகக் கூறி, திமுக ஆட்சிக் கால நிர்வாகச் சீர்கேடுகள் மற்றும் கடந்த கால வரலாற்றுத் தவறுகளை அமைச்சர் நிர்மல் குமார் தனது செய்தியாளர் சந்திப்பில் கடுமையாகச் சாடியுள்ளார்.

“திமுகவை இயக்கியது ரத்தீஷ் எனும் பவர் புரோக்கர்!”.. அமைச்சர் நிர்மல்குமார் முன்வைக்கும் பரபரப்பு குற்றச்சாட்டுகள்!
அமைச்சர் நிர்மல்குமார்
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Published: 09 Sep 2026 11:36 AM IST

சென்னை, செப்டம்பர் 09: தமிழ்நாடு அரசியலில் ஆளும்கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு இடையே கொள்கை ரீதியாகவும் நிர்வாக ரீதியாகவும் பல்வேறு விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. அரசுகளின் கடந்த கால தவறுகள், வரலாற்று முடிவுகள் மற்றும் தற்போதைய நிர்வாக முறைகேடுகள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியது புதிய அரசியல் களத்தின் முக்கியக் கடமையாகும். அந்த வகையில், திமுக ஆட்சியில் நடைபெற்ற நிர்வாகச் சீர்கேடுகள் மற்றும் கடந்த கால வரலாற்றுத் தவறுகள் குறித்து அமைச்சர் நிர்மல்குமார் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் கடுமையான விமர்சனங்களையும் அதிர்ச்சி குற்றச்சாட்டுகளையும் முன்வைத்துள்ளார்.

இதையும் படிக்க: விநாயகர் சதுர்த்தி: 10 அடிக்கு மேல் சிலை வைக்கத் தடை.. சிசிடிவி கட்டாயம்.. சென்னையில் சிலை அமைக்க காவல்துறை கடும் கட்டுப்பாடுகள்..

நிதி நெருக்கடிக்கு காரணம் ‘ரத்தீஷ்’ தான்:

திமுக ஆட்சிக் காலத்தில் அரசு எவ்வாறு இயங்கியது என்பது குறித்துப் பேசிய நிர்மல்குமார், ஒரு மாநில அரசு என்பது முதலமைச்சர், அமைச்சர்கள், அதிகாரிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளால் முறைப்படி நடத்தப்பட வேண்டும் எனச் சுட்டிக்காட்டினார். ஆனால், கடந்த ஆட்சியில் ‘ரத்தீஷ்’ என்பவரைப் போன்ற பவர் புரோக்கர்களும், சில செல்வாக்குமிக்க நபர்களும் பின்னணியில் இருந்து கொண்டு அரசுத் துறைகளைக் கட்டுப்படுத்தியதாகக் குற்றம் சாட்டினார். குறிப்பாக, உதயநிதி ஸ்டாலினுடன் ‘குறிஞ்சி’ இல்லத்தில் 24 மணி நேரமும் உடனிருந்த ரத்தீஷ் என்பவர், பல்வேறு அரசுத் துறைகளைப் பிரித்துக் கொண்டு வசூலில் ஈடுபட்டதாகவும், அரசியல் அனுபவமோ அல்லது மக்கள் போராட்டப் பின்னணியோ இல்லாத சுமார் 10 பேர் கொண்ட குழு அரசு நிர்வாகத்தில் தலையிட்டதே தற்போதைய நிதி நெருக்கடி மற்றும் நிர்வாகச் சீர்குலைவுக்குக் காரணம் என்றும் அவர் சாடினார்.

விரிவான விசாரணை நடத்த வேண்டும்:

மேலும், டாஸ்மாக் துறையில் தொழிலாளர்களின் நிலைமையைப் பற்றிக் கவலைப்படாமல் வசூல் வேட்டையில் மட்டுமே கவனம் செலுத்தப்பட்டதாகக் குறிப்பிட்ட அவர், இதுபோன்ற இடைத்தரகர்கள் மூலம் இயக்கப்பட்ட அமைப்புகளை மாற்றியமைத்து, புதிய வெளிப்படையான நிர்வாக முறையைக் கொண்டுவர வேண்டிய கட்டாயம் எழுந்துள்ளதாகத் தெரிவித்தார். தற்போது அந்த நபர் தலைமறைவாக இருப்பது ஏன் என்றும், அவர் மீதான குற்றச்சாட்டுகளுக்குப் பின்னணியில் உள்ள தொடர்புகள் குறித்தும் விரிவாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

தவறுகளைச் சரிசெய்யப் பல தசாப்தங்கள்:

கடந்த கால வரலாற்றுச் சம்பவங்களை நினைவு கூர்ந்த நிர்மல்குமார், திமுக வரலாற்றில் செய்த தவறுகளைத் தற்போதைய தலைமுறைக்கு எடுத்துரைப்பது அவசியம் என்று கூறினார். சர்க்காரியா கமிஷன் விசாரணைகள் மற்றும் சிபிஐ வழக்கு அச்சுறுத்தல்களுக்குப் பயந்தே கச்சத்தீவு தாரைவார்க்கப்பட்டதாகக் குற்றம் சாட்டிய அவர், அதன் விளைவாகவே கடந்த 50 ஆண்டுகளாகத் தமிழக மீனவர்கள் கடலில் பெரும் துயரங்களையும் பாதுகாப்பற்ற சூழலையும் சந்தித்து வருவதாகக் குறிப்பிட்டார். காவிரி நதிநீர் விவகாரம் முதல் பல்வேறு மாநில உரிமைகள் வரை திமுக ஆட்சிக் காலத்தில் விட்டுக் கொடுக்கப்பட்ட தவறுகளைச் சரிசெய்யப் பல தசாப்தங்கள் ஆகின்றன என்றும் அவர் தெரிவித்தார்.

இதையும் படிக்க: புலி பட வருவாயை மறைத்த உத்தமர் ஜோசப் விஜய்… மிசாவை பற்றி பேச என்ன அருகதை உள்ளது… தயாநிதி மாறன் காட்டமான கேள்வி!

தமிழகத்தை மீட்டெடுப்பதே நோக்கம்:

மாநிலத்தின் கடன் சுமை, மோசமடைந்துள்ள நிதி நிலைமை மற்றும் துறை சார்ந்த சீர்கேடுகளில் இருந்து தமிழ்நாட்டையும் மக்களையும் மீட்டெடுப்பதே தற்போதைய முதன்மை நோக்கம் என்று அவர் கூறினார். திமுக தலைமுறைகளாக அரசியல் செய்து வருவதாகக் கூறிக்கொண்டாலும், தமிழ்நாட்டின் நிதி நிலைமை மோசமடைந்ததற்கும், அரசுத் துறைகள் சீர்குலைந்ததற்கும் அவர்களின் தவறான கொள்கைகளே காரணம் எனச் சாடிய நிர்மல்குமார், தற்போதைய இளம் தலைமுறைக்கு உண்மை நிலவரத்தை எடுத்துரைத்து, இந்தச் சீர்கேடான அமைப்பிலிருந்து தமிழ்நாட்டை மீட்டெடுப்பதே தங்களின் முதன்மை நோக்கம் எனக் குறிப்பிட்டார்.

Follow Us