AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

சமணர் படுகை மலையேறி படுத்துப் பார்த்த அமைச்சர் ராஜ்மோகன்.. மதுரையில் நடந்த திடீர் ஆய்வு!!

Minister Rajmohan Madurai visit: மதுரை மீனாட்சிபுரம் சமணர் படுகை மற்றும் தமிழ் பிராமி எழுத்துக்கள் அமைந்துள்ள மலைப்பகுதியில் பள்ளிக் கல்வி மற்றும் தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் ராஜ்மோகன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்; மேலும் அரசுப் பள்ளி மாணவர்களின் சீருடை மாற்றம் குறித்த அறிக்கை முதலமைச்சரின் பார்வைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

சமணர் படுகை மலையேறி படுத்துப் பார்த்த அமைச்சர் ராஜ்மோகன்.. மதுரையில் நடந்த திடீர் ஆய்வு!!
அமைச்சர் ராஜ்மோகன்
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Published: 19 Jul 2026 14:14 PM IST

மதுரை, ஜூலை 19: மதுரை மாவட்டம் ஒத்தக்கடை அருகே உள்ள உலகப் புகழ்பெற்ற மீனாட்சிபுரம் கிராமத்தின் சமணர் படுகைகள் மற்றும் தமிழ் பிராமி எழுத்துக்கள் அமைந்துள்ள வரலாற்றுப் பகுதிகளை, தமிழ்நாடு பள்ளிக் கல்வி மற்றும் தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் ராஜ்மோகன் இன்று திடீரென நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மலையின் மீது நடந்தே சென்று தொல்லியல் சின்னங்களைப் பார்வையிட்ட அமைச்சர், அங்குள்ள வரலாற்றுத் தரவுகள் மற்றும் பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து அதிகாரிகளுடன் விரிவாகக் கலந்தாலோசித்தார்.

இதையும் படிக்க: கோவையில் ரோந்துப் பணியில் அத்துமீறிய காவலர்.. இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை.. அதிரடி கைது!

சமணர் படுகையில் நடந்தே சென்று ஆய்வு

மதுரை மீனாட்சிபுரம் மலைப்பகுதியில் அமைந்துள்ள பழங்காலச் சமணர் படுகைகள் மற்றும் தமிழ் பிராமி கல்வெட்டுகளைப் பார்வையிட அமைச்சர் ராஜ்மோகன் இன்று காலை வருகை தந்தார். மலையின் உச்சிக்கு அதிகாரிகளுடன் நடந்தே சென்ற அமைச்சர், அங்கிருந்த சமணர் படுகைகளை மிகவும் கூர்ந்து கவனித்தார். ஆய்வின் போது, அங்கிருந்த ஒரு சமணர் படுகையில் சிறிது நேரம் படுத்துப் பார்த்தும், அமர்ந்தும் அதன் பழங்கால வடிவமைப்பு மற்றும் சிறப்புகளை அமைச்சர் நேரில் உணர்ந்தார்.

செம்மொழிப் பூங்கா இணைப்பு:

சென்னை செம்மொழிப் பூங்காவில் நிறுவப்பட உள்ள தமிழ்ப் பிராமி எழுத்து வடிவங்களுக்கான வரலாற்றுத் தரவுகள் மற்றும் மாதிரிகள் இந்த மீனாட்சிபுரம் பகுதியில் இருந்துதான் எடுக்கப்பட்டன என்ற வரலாற்றுத் தகவலை, தமிழ் வளர்ச்சித்துறைச் செயலாளர் ஜெயசீலன் ஐ.ஏ.எஸ் அமைச்சரிடம் ஆய்வின் போது விளக்கிக் கூறினார்.

“கீழடி உலகத் தமிழர்களின் தாய்மடி”

ஆய்வுக்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ராஜ்மோகன் பல்வேறு முக்கியத் தகவல்களைப் பகிர்ந்து கொண்டார். “தமிழ்நாட்டில் உள்ள தொல்லியல் துறை சார்ந்த முக்கிய வரலாற்று இடங்களைத் தொடர்ந்து நேரில் சென்று ஆய்வு செய்து வருகிறோம். அதன் ஒரு பகுதியாகவே இன்று மதுரையில் உள்ள சமணர் படுகைகள் மற்றும் தமிழ் பிராமி எழுத்துக்களைப் பார்வையிட்டோம். இந்த அரிய வரலாற்றுச் சின்னங்களைப் பாதுகாப்பதற்கான அனைத்து சட்டப்பூர்வ மற்றும் கள நடவடிக்கைகளும் தொல்லியல் துறை மூலம் தீவிரமாக மேற்கொள்ளப்படும்.”

மேலும், “கீழடி என்பது உலகத் தமிழர்களின் தாய்மடி” என்று குறிப்பிட்ட அமைச்சர், தமிழகத்தின் தொன்மை வரலாற்றை உலகிற்கு நிரூபிக்கும் வகையில், ஒன்றிய (மத்திய) அரசுடன் இணைந்து மேலும் பல்வேறு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் அகழ்வாராய்ச்சி ஆய்வுகளை மேற்கொண்டு, தகுந்த சான்றுகளைத் திரட்ட அரசு திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

அரசுப் பள்ளி மாணவர்களின் சீருடை மாற்றம்:

அரசுப் பள்ளி மாணவர்களுக்கான புதிய சீருடை மாற்றம் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் பதிலளிக்கையில், “அரசுப் பள்ளி மாணவர்களின் சீருடை மாற்றம் தொடர்பான விரிவான ஆய்வு அறிக்கை மற்றும் பரிந்துரைகள் தயார் செய்யப்பட்டு, மாண்புமிகு தமிழக முதலமைச்சரின் பார்வைக்கு ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. முதலமைச்சரின் ஒப்புதலைப் பெற்று, இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் நடவடிகைகளும் மிக விரைவில் வெளியிடப்படும்” என்று உறுதியளித்தார்.

இதையும் படிக்க: சென்னையில் ரவுடிகள் வேட்டை.. காவலர்களை வெட்டிவிட்டு தப்ப முயன்ற ‘சரித்திரப் பதிவேடு’ ரவுடி சுட்டுப்பிடிப்பு!

இந்த திடீர் ஆய்வின் போது பள்ளிக் கல்வி மற்றும் தமிழ் வளர்ச்சித்துறைச் செயலாளர் ஜெயசீலன் ஐ.ஏ.எஸ், மதுரை மாவட்ட ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா மற்றும் தொல்லியல் துறை சார்ந்த உயர் அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.

Follow Us