தமிழகத்தில் ரெஸ்டோ பார்கள் திறக்கப்படுகிறதா? மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் பதில்!
Tamil Nadu Resto Bars : தமிழகத்தில் உணவு வழங்கும் வசதியுடன் ரெஸ்டோ பார்கள் திறப்பது குறித்து கடும் எதிர்ப்புகள் எழுந்த நிலையில், இது தொடர்பாக மது விலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் விக்னேஷ் புதிய விளக்கத்தை அளித்துள்ளார் .
தமிழகத்தில் உணவுடன் கூடிய மதுபான கூடம் அமைப்பதற்கு அரசு திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகி வருகிறது. இது தொடர்பாக டாஸ்மாக் நிர்வாகம் தரப்பில் எந்த விதமான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் தற்போது வரை வெளியிடப்படவில்லை. இந்த நிலையில், ரெஸ்டோ பார்கள் அமைப்பது குறித்து மது விலக்கு மற்றும் ஆயத் தீர்வைத் துறை அமைச்சர் விக்னேஷ் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் கடந்த கால ஆட்சிக் காலத்தில் டாஸ்மாக் நிர்வாகத்தை மிக மோசமான நிலையில் வைத்திருந்தனர். தற்போது கூட டாஸ்மாக் கடைகள் முன்பு சிலர் போதையில் படுத்து கிடப்பதும், பாட்டில்கள் மற்றும் கிளாஸ்களை வீசிவிட்டு செல்வதுமான செயல்கள் நிகழ்ந்து வருகிறது. இவை எல்லாம் மாற்றி சீரமைக்க வேண்டும். அதற்கு என்னென்ன நடவடிக்கைகளை எடுக்கலாம் என்பது குறித்து நாங்கள் ஆலோசனை மேற்கொண்டு வருகிறோம்.
டாஸ்மாக் நிர்வாகம் குறித்த ஆலோசனை
இதில், சிலர் ரெஸ்டோ பார்களை அமைக்கலாம் என்று பேசினார்கள். சிலர் டாஸ்மாக் நிர்வாகத்தை தனியாருக்கு விடலாம் என்று தெரிவித்தனர். சிலரோ அரசாங்கமே டாஸ்மாக் நிர்வாகத்தை மேம்படுத்தி தரத்தை உயர்த்தலாம் என்று ஆலோசனை வழங்கினர். இதில், ரெஸ்டோ பார் என்று சொன்னது மட்டும் எப்படியோ வெளியே கசிந்து உள்ளது. இதை வைத்து தவறான தகவல்கள் பரப்பப்பட்டு வருகின்றன. ஆனால், அரசு தற்போது வரை எந்த திட்டத்தையும் உறுதி செய்யவில்லை.
மேலும் படிக்க: தவெக எம்எல்ஏவிடம் பேர வழக்கு: அடுத்தடுத்து சிக்கிய புள்ளிகள்… ரூ. 2 கோடி பறிமுதல் செய்து அதிரடி!




மக்களின் நிலையை பிரதிபலிக்கும் தவெக அரசு
மக்களின் நிலை என்னவாக இருக்கிறதோ, அதை நான் தமிழக வெற்றிக் கழக அரசு பிரதிபலித்து வருகிறது. இதே போல, டாஸ்மாக் துறையை வைத்து அரசின் வருமானத்தை உயர்த்த நாங்கள் திட்டமிடுகிறோம் என்று யாரும் நினைக்க வேண்டாம். எதிர்க் கட்சிகள் அவ்வாறு நினைத்தால் நிச்சயம் ஏமாந்து போவார்கள். தமிழக வெற்றிக் கழக அரசுக்கு அப்படி ஒரு எண்ணம் கிடையாது என்று அமைச்சர் விக்னேஷ் தெரிவித்தார். தமிழகத்தில் உணவுடன் கூடிய ரெஸ்டோ பார்கள் திறக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகி வந்தன.
ரெஸ்டோ பார்கள் குறித்து அமைச்சர் விளக்கம்
இதற்கு பல்வேறு தரப்பினர் மத்தியில் கடும் எதிர்ப்பு நிலவி வந்தது. தமிழகத்தில் ஏற்கனவே மதுக் கடைகளின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வரும் நிலையில், ரெஸ்டோ பார்களை திறக்கும் அரசின் முடிவுக்கு பொதுமக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில், ரெஸ்டோ பார்கள் விவகாரம் தொடர்பாக அமைச்சர் புதிய விளக்கத்தை அளித்துள்ளார்.
மேலும் படிக்க: கல்வித்துறை அமைச்சரை பதவி நீக்கம் செய்ய வேண்டும்.. இந்திய கம்யூனிஸ்ட் வீரபாண்டியன் வலியுறுத்தல்!