கோவையில் பட்டப்பகலில் ரூ.1.6 கோடி வழிப்பறி.. தப்பியோடிய கொள்ளை கும்பல்.. உளுந்தூர்பேட்டையில் ஸ்கெட்ச் போட்டு தூக்கிய தனிப்படை!
Kovai Rs 1.6 Crore Robbery : கோயம்புத்தூர் மாவட்டத்தில் தங்க நகை கடைக்காரரிடம் நகை வாங்க வந்தவரிடம் ரூ. 1 கோடியை 6 லட்சம் ரொக்கத்தை காரில் வந்த மர்ம கும்பல் கொள்ளையடித்து சென்றது. இந்த கும்பல் உளுந்தூர்பேட்டையில் கைது செய்யப்பட்டது.
ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர் ரங்கசாமி. இவரது உறவினர் ஆந்திராவில் சொந்தமாக நகை கடை வைத்து நடத்தி வருகிறார். இவர்கள் இருவரும் ஆண்டுக்கு ஒரு முறை கோயம்புத்தூருக்கு வருகை தந்து இங்குள்ள தங்க நகை தயாரிப்பாளர்களிடம் இருந்து புதிய தங்க நகைகளை வாங்கி செல்வது வழக்கம் ஆகும். அதன்படி, ரங்கசாமி ரூ. 1 கோடிக்கு அதிகமான பணத்துடன் இன்று சனிக்கிழமை ( செப்டம்பர் 5- ஆம் தேதி) கோயம்புத்தூருக்கு வருகை தந்தார். பேருந்தில் வந்த இவர் அவிநாசி சாலையில் உள்ள லட்சுமி ஆலை பேருந்து நிறுத்தம் அருகே இறங்கி, கோவையில் உள்ள நகை தயாரிப்பாளரை செல்போன் மூலமாக தொடர்பு கொண்டு தாங்கள் வந்து விட்டதாக தகவல் தெரிவித்துள்ளார்.
ரூ.1.6 கோடியை கொள்ளையடித்த மர்ம கும்பல்
அவர், செல்போனில் பேசிக் கொண்டிருந்த சமயத்தில் சொகுசு காரில் வந்த 4 பேர் கொண்ட மர்ம கும்பல் ரங்கசாமியை சுற்றி வளைத்து கண் இமைக்கும் நேரத்தில் அவர் வைத்திருந்த பணப்பையை பறித்துக் கொண்டு காரின் அதிவேகமாக அவிநாசி சாலை வழியாக தப்பி சென்றது. அந்த பையில் நகை வாங்குவதற்காக ரங்கசாமி ரூ. 1 கோடியை 6 லட்சம் ரொக்கம் வைத்திருந்ததாக கூறப்படுகிறது. பட்டப் பகலில் ஆள் நடமாட்டம் உள்ள அவிநாசி சாலை பகுதியில் இந்த துணிச்சலான கொள்ளை சம்பவம் நிகழ்ந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மேலும் படிக்க: டபராவில் பெண் உடல் வேகவைக்கப்பட்ட சம்பவம்.. ஆக்ரா போலீசுக்கு சென்னை போலீஸ் அவசர கடிதம்.. என்ன காரணம்!




கண்காணிப்பு கேமரா மூலமாக மர்ம கும்பலை பின் தொடர்
தொடர்ந்து, இந்த சம்பவம் தொடர்பாக ரங்கசாமி பந்தைய சாலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து மாநகர காவல் ஆணையர் உத்தரவின் அடிப்படையில், உடனடியாக தனிப் படைகள் அமைக்கப்பட்டு, கொள்ளை கும்பல் சென்ற காரின் விவரங்களை கண்காணிப்பு கேமரா காட்சிகள் மூலமாக பின் தொடர்ந்தது. இதில், சுங்கச்சாவடி கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்வதில் கொள்ளை கும்பல் கார் அந்த வழியாக சென்றது பதிவாகி இருந்தது.
உளுந்தூர்பேட்டையில் ரூ.1.6 கோடியுடன் சிக்கிய கும்பல்
அதன் அடிப்படையில், திருப்பூர், சேலம், ஈரோடு காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அதன்படி, கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே உள்ள சுங்கச்சாவடி பகுதியில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக வந்த காரை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். இதில், காரில் பயணித்த 4 பேரையும், அவர்களிடம் இருந்த ரூ. 1.6 கோடியையும் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, அந்த கும்பலிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் படிக்க: பழங்குடிகளிடம் ரூ.1 கோடி லஞ்சம்.. சிக்கிய 6 வனத்துறை ஊழியர்களுக்கு செக்.. திருவண்ணாமலையில் அதிரடி நடவடிக்கை..!