கே.என்.நேரு தொடர்புடைய இடங்களில் நடந்த சோதனை.. 241 ஆவணங்களை கைப்பற்றிய லஞ்ச ஒழிப்பு போலீஸ்..!
Anti Corruption Raids 241 Documents Seized : திமுக முன்னாள் அமைச்சர் கே. என். நேரு தொடர்புடைய இடங்களில் நடந்த ஊழல் தடுப்பு சோதனையில் சுமார் 241 ஆவணங்கள் மற்றும் மின்னனு சாட்சியங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக அந்த துறை தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் திமுக முன்னாள் அமைச்சர் கே. என். நேரு மற்றும் அவர்கள் சகோதரர் ரவிச்சந்திரன் தொடர்புடைய 30 இடங்களில் இன்று சனிக்கிழமை ( செப்டம்பர் 5- ஆம் தேதி) காலை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர். காலை 8 மணிக்கு தொடங்கிய இந்த சோதனையானது பிற்பகல் 3 மணி வரை நீடித்தது. இந்த அதிரடி சோதனையில் 241 ஆவணங்கள் மற்றும் மின்னணு சாட்சியங்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த திமுக ஆட்சியில் கட்சி நிதி பெறப்பட்டது தொடர்பாக எழுந்த புகாரின் அடிப்படையில் முன்னாள் அமைச்சர் கே. என். நேரு மற்றும் அவரது சகோதரர் தொடர்புடைய இடங்களான திருச்சி, சென்னை, திருப்பூர், ஈரோடு, கோயம்புத்தூர் உள்ளிட்ட 30 இடங்களில் உள்ள வீடுகள் மற்றும் அலுவலகங்கள் ஆகியவற்றில் இந்த சோதனை நடைபெற்றது.
லஞ்ச ஒழிப்பு சோதனையால் பெரும் பரபரப்பு
தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்த இந்த சோதனை நிறைவடைந்த நிலையில், 241 ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன லஞ்ச ஒழிப்பு துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று காலை நடைபெற்ற இந்த சோதனையால் சம்பந்தப்பட்ட பகுதிகளில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். இதனிடையே, கடந்த திமுக ஆட்சியில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் ரூ.1020 கோடி டெண்டர் ஊழல் நடைபெற்றதாகவும் புகார் எழுந்தது.
மேலும் படிக்க: பழங்குடிகளிடம் ரூ.1 கோடி லஞ்சம்.. சிக்கிய 6 வனத்துறை ஊழியர்களுக்கு செக்.. திருவண்ணாமலையில் அதிரடி நடவடிக்கை..!




10- க்கும் மேற்பட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு
இது தொடர்பாக அமலாக்கத்துறை அளித்த புகாரின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 10- க்கும் மேற்பட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதில், முன்னாள் அமைச்சர் கே. என். நேருவின் சகோதரர் ரவிச்சந்திரன், கே. என். மணிவண்ணன் உள்ளிட்ட 12 பேரின் பெயர்கள் முதல் தகவல் அறிக்கையில் சேர்க்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே, லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை குறித்து நேரு கருத்து தெரிவித்திருந்தார்.
சோதனை குறித்து கே. என். நேரு கருத்து
அதில், சட்டப்பேரவையில் அரசை பார்த்து கேள்வி எழுப்பியதன் காரணமாக இந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடைபெற்றதாகவும், இது அரசியல் பழி வாங்கும் நடவடிக்கை என்றும் விமர்சித்து இருந்தார். அத்துடன், வரவு செலவு கணக்கு தொடர்பான ஒரு சிறிய ஆவணத்தை மட்டும் போலீசார் எடுத்துச் சென்றதாக அவர் தெரிவித்து இருந்தார். ஆனால், லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் 241 ஆவணங்கள் மற்றும் மின்னணு சாட்சியங்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: பேரவையில் கேள்வி கேட்டது குற்றமா? லஞ்ச ஒழிப்பு ரெய்டு குறித்து முன்னாள் அமைச்சர் கே.என். நேரு ஆவேசம்!