15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை.. கோவில்பட்டியில் இளைஞர் கைது.. மகளிர் போலீசார் நடவடிக்கை!
Kovilpatti Young Man Arrested : கோவில்பட்டியில் 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக புகார் எழுந்த நிலையில், அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து இளைஞர் ஒருவரை கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி வள்ளுவர் நகரை சேர்ந்தவர் ராஜபாண்டி மகன் கருப்பசாமி ( 20 வயது). இவர், அந்த பகுதியில் கூலி வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில், அந்த பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமி பக்கத்து வீட்டுக்காரர் என்ற முறையில் கருப்பசாமியுடன் பேசி வந்ததாக தெரிகிறது. இதில், ஒரு கட்டத்தில் அந்த மாணவியிடம் கருப்பசாமி தவறான முறையில் நடந்ததாக கூறப்படுகிறது. இதனால், அது சிறுமி அவரிடம் பேசுவதை தவிர்த்து வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில், சம்பவத்தன்று சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த அந்த சிறுமியை கருப்பசாமி அழைத்துள்ளார். அப்போது, அந்த சிறுமி கருப்பசாமி அழைத்ததின் பேரில், அவரிடம் சென்றுள்ளார். அப்போது, அந்த சிறுமிக்கு கருப்பசாமி பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படுகிறது. இதனால், அந்த சிறுமி கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகினார்.
அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார்
இதை தொடர்ந்து, அந்த சிறுமி இது தொடர்பாக தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் இது தொடர்பாக கோவில்பட்டி அனைத்தும் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இது குறித்து தகவல் அறிந்த கருப்பசாமி அங்கிருந்து தலைமறைவாகினார். அவரை போலீசார் தொடர்ந்து தேடி வந்தனர். இதில், அவர் அந்த பகுதியில் உள்ள ஒரு இடத்தில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
மேலும் படிக்க: பெண்களின் பாதுகாப்பில் அதிரடி காட்டும் தமிழக அரசு.. 9,500-க்கும் மேற்பட்ட இடங்களில் சுழன்றடித்த சிங்கப்பெண் சிறப்புப் படை!




போக்சோ சட்டத்தின் கீழ் இளைஞர் கைது
அதன் பேரில், சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அங்கு பதுங்கி இருந்த இளைஞர் கருப்பசாமியை சுற்றி வளைத்து கைது செய்தனர். இதைத் தொடர்ந்து, அவரை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று போலீசார் அதிரடியாக விசாரணை மேற்கொண்டனர். இதில், அந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததை இளைஞர் கருப்பசாமி ஒத்துக்கொண்டார். இதை தொடர்ந்து, அவர் மீது போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ், போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைப்பு
இதைத் தொடர்ந்து, அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கோவில்பட்டியில் வீட்டின் அருகே வசித்து வந்த 15 வயது சிறுமிக்கு அதே பகுதியை சேர்ந்த இளைஞர் பாலியல் தொல்லை அளித்த சம்பவமும், அவரை போலீசார் கைது செய்த சம்பவமும் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் படிக்க: கோவையில் ரோந்துப் பணியில் அத்துமீறிய காவலர்.. இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை.. அதிரடி கைது!