மனைவி மீது சந்தேக தீ.. நள்ளிரவில் கடப்பாறையால் அடித்து கொன்ற கணவன்.. ஈரோட்டில் பரபரப்பு!
Erode Women Murder : ஈரோடு மாவட்டத்தில் சந்தேகத்தின் காரணமாக நள்ளிரவில் மனைவியை, கணவன் கடப்பாறையால் அடித்து கொடூரமான முறையில் கொலை செய்தார். இந்தச் சம்பவம் தொடர்பாக மொடக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிந்து அந்தப் பெண்ணின் கணவரை கைது செய்து சிறையில அடைத்தனர்.
ஈரோடு மாவட்டம், லக்காபுரம் ஊராட்சி பகுதிக்குள்பட்ட சோலார் செல்ல கிருஷ்ணா நகரை சேர்ந்தவர் சேட்டு தனபால் ( 60 வயது). இவரது மனைவி புஷ்பா ( 58 வயது). இருவர்களுக்கு 2 மகள்கள் மற்றும் ஒரு மகன் ஆகியோர் உள்ளனர். சேட்டு தனபால் மற்றும் புஷ்பா ஆகியோர் அதே பகுதியில் தள்ளுவண்டியில் பழக்கடை வைத்து வியாபாரம் நடத்தி வந்தனர். இந்த நிலையில், சேட்டு தனபாலின் தந்தை ஆறுமுகத்துக்கும், அவரது மனைவி புஷ்பாவுக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால், சந்தேகம் அடைந்த சேட்டு தனபால், தனது மனைவியுடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்தார். அதன்படி, கடந்த ஜூலை 14- ஆம் தேதி இது தொடர்பாக கணவன் மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. அன்று நள்ளிரவு சுமார் ஒரு மணி அளவில் புஷ்பா வீட்டின் கழிவறைக்கு சென்று வந்துள்ளார்.
நள்ளிரவில் கடப்பாரையால் மனைவி மீது தாக்குதல்
அப்போது, தூக்கத்தில் இருந்து எழுந்த சேட்டு தனபால், புஷ்பா மீது சந்தேகம் அடைந்து நீ உயிரோடு இருந்தால் தானே இப்படி செய்கிறாய், என்று கூறி வீட்டில் இருந்த கடப்பாரையால் புஷ்பாவை பலமாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதில், பலத்த காயமடைந்த புஷ்பா ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார். இவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து புஷ்பாவை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு, அவருக்கு மருத்துவர்கள் முதலுதவி அளித்துவிட்டு, தீவிர சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் படிக்க: சென்னையில் கொடூரம்.. செல்போன் திருடியதாகக் கூறி வாலிபரை அடித்துக் கொன்ற சொந்த மைத்துனர்.. 4 பேர் போலீசில் சரண்!!




சிகிச்சை பலனின்றி பெண் உயிரிழப்பு
அங்கு, அவருக்கு மருத்துவர் சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில், புஷ்பா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதை தொடர்ந்து, அவரது சடலம் உடல் கூறாய்வு மேற்கொள்வதற்காக கொண்டு செல்லப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக, மொடக்குறிச்சி போலீசார் தாக்குதல் உள்ளிட்ட பிரிவின் கீழ் முதலில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். தற்போது, அவர் உயிரிழந்ததை அடுத்து, கொலை வழக்காக மாற்றி புஷ்பாவின் கணவர் சேட்டு தனபாலை கைது செய்தனர்.
நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைப்பு
அவரை, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். ஈரோடு மாவட்டத்தில், மனைவி மீது ஏற்பட்ட சந்தேகத்தின் காரணமாக, அவரை கடப்பாரையால் தாக்கி கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
மேலும் படிக்க: கரூரில் நள்ளிரவில் நுழைந்த தனிப்படை.. செந்தில் பாலாஜி நிழல் உலகப் புள்ளியின் பைனான்ஸ் நிறுவனத்திற்கு சீல் வைத்த போலீஸ்!!