மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ரூ. 60 கோடி அறக்கட்டளை சொத்து முறைகேடு.. 19 பேர் மீது வழக்கு பதிவு!
Meenakshi Amman Temple Trust Properties Case : மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அறக்கட்டளை சொத்து ரூ. 60 கோடி முறைகேடு செய்யப்பட்டதாக எழுந்த புகாரின் அடிப்படையில் வட்டாட்சியர் உள்ளிட்ட 19 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
மதுரையில் உலக புகழ்பெற்ற மீனாட்சி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் அறக்கட்டளைக்கு சொந்தமான ரூ.60 கோடி மதிப்பிலான 1.79 ஏக்கர் நிலத்தை போலியாக பத்திரப்பதிவு செய்து முறைகேடு நிகழ்ந்ததாக புகார் எழுந்துள்ளது. இதில், முன்னாள் கிராம நிர்வாக அலுவலர் அரசன் மற்றும் முன்னாள் வட்டாட்சியர் அன்பழகன், ராஜேந்திரன், புஷ்பராஜ், ஜோதி, கீதா, இளையராஜா, அனீஸ், அந்தராமன், கவிதா, பிரகாஷ், காளிகுமார், பிரசாந்த், ராமாயி, செந்தமிழ்செல்வன், பிரேமா, ராஜ்குமார், முத்துராணி, உள்ளிட்ட 19 பேர் மீது மதுரை மாநகர குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மீனாட்சியம்மன் கோயில் மற்றும் அழகர் கோவிலுக்கு சேவை செய்வதற்காக அமைக்கப்பட்ட அறக்கட்டளைக்கு சொந்தமான சொத்துக்கள் சட்டவிரோதமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக மீனாட்சியம்மன் கோயில் செயல் அலுவலர் செல்லதுரை அளித்த புகாரின் அடிப்படையில் சுமார் 19 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். கடந்த 2021- ஆம் ஆண்டு கோயிலுக்கு சொந்தமான 1.79 ஏக்கர் பரப்பளவு உள்ள சொத்துகள் மோசடியாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
9 நபர்களுக்கு பட்டா அளிப்பு
அவற்றின் தற்போதைய மதிப்பு ரூ. 60 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளதாகவும் இதற்கு சட்டபூர்வ வழிகள் மூலம் நடவடிக்கை மேற்கொண்டு சொத்துக்களை மீட்போம் என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் தெரிவித்துள்ளார். இது குறித்த புகாரின் அடிப்படையில் வார்டு 10- இல் உள்ள ஹக்கீம் அஜமல் கான் சாலையில் அமைந்துள்ள மீனாட்சி அம்மன் கோயில் அறக்கட்டளைக்கு சொந்தமான சொத்தின் உரிமை மதுரை வடக்கு வட்டாட்சியரால் தன்னிச்சையாக முடிவெடுக்கப்பட்டு 9 நபர்களுக்கு மாற்றப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: காரைக்குடி மாநகராட்சியில் பரபரப்பு.. லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் கையும் களவுமாக சிக்கிய பில் கலெக்டர்!





மீனாட்சி அம்மன் கோயில் சொத்து முறைகேடு
விஏஓ சஸ்பெண்ட்- வட்டாட்சியரிடம் துறை ரீதியான விசாரணை
கடந்த 2016 ஜூன் 24- ஆம் தேதி சம்பந்தப்பட்ட நபர்களுக்கு அவர்களது பெயரில் பட்டா வழங்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தை தொடர்ந்து கிராம நிர்வாக அலுவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். வட்டாட்சியர் மீது துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இது தொடர்பாக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விவகாரம் தொடர்பாக மக்கள் அறப்போர் இயக்கம் சார்பில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அமைச்சர் தெரிவித்தார்.
கோயில் சொத்து உயிலில் கூறியிருப்பது என்ன
கடந்த 1930- ஆம் ஆண்டு அமைச்சரால் புதுக்கோட்டை ராஜ்குமார் தட்சிணாமூர்த்தி துரைராஜ துரை ராணி என்ற பெயரில் அறக்கட்டளை நிறுவப்பட்டது. மதுரையில் அழகர் கோவில் சாலையில் உள்ள இந்த சொத்தில் அசோக விலாஸ் என்ற பெயருடைய ஒரு பங்களாவும், அதன் அருகில் ஒரு தோட்டமும் உள்ளன. இந்த சொத்துக்கான உயிலில் அந்த சொத்தையும், தோட்டத்தையும் வாடகைக்கு விடலாம். ஆனால், அதனை யாரும் அடமானம் வைக்கவோ அல்லது விற்கவோ எந்த விதியும் இல்லை என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: சிங்கப்பூரில் இருந்து ஸ்கெட்ச்.. சென்னையில் தூக்கிய சுங்கத்துறை.. ரூ.5.80 கோடி தங்கம் பறிமுதல் செய்து அதிரடி!