சென்னையில் கணவருடன் சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை.. காவல் ஆய்வாளர் அதிரடி கைது!
Traffic Police Inspector Arrested: சென்னை அடையாறில் கணவருடன் சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக போக்குவரத்து காவல் ஆய்வாளர் மணிமாறனை போலீசார் கைது செய்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். போலீசார் தரப்பில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டம், அடையாறு பகுதியில் வசித்து வருபவர் மணிமாறன். இவர், ராணிப்பேட்டை மாவட்ட போக்குவரத்து காவல்துறையில் ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில், ராணிப்பேட்டையில் இருந்து போக்குவரத்து ஆய்வாளர் மணிமாறன் கடந்த ஞாயிற்றுக்கிழமை ( ஜூலை 26- ஆம் தேதி) அடையாறில் தனது வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது, அவர் தனது உறவினர்களுடன் சேர்ந்து மது அருந்தியதாக தெரிகிறது. பின்னர், அன்று இரவு ஆய்வாளர் மணிமாறன் மற்றும் அவரது உறவினர் ஆகியோர் இருசக்கர வாகனத்தில் வெளியே சென்று கொண்டிருந்தனர். அப்போது, வேளச்சேரி பகுதியில் கணவருடன் ஒரு பெண் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, மது போதையின் உச்சத்தில் இருந்த போக்குவரத்து காவல் ஆய்வாளர் மணிமாறன் திடீரென அந்த பெண்ணின் பின்பகுதியில் கட்டியதாக கூறப்படுகிறது. இதனால் கடும் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் சத்தம் போட்டார்.
சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் விசாரணை
அவரது சத்தத்தை கேட்ட காவல் ஆய்வாளர் மற்றும் அவரது உறவினர் ஆகியோர் இருசக்கர வாகனத்தில் விரைந்து சென்று விட்டனர். அவர்களை அந்த பெண்ணின் கணவர் மற்றும் அந்த பகுதியில் இருந்த பொதுமக்கள் விரட்டி பிடிக்க முயன்றனர். ஆனால் அவர்களை பிடிக்க முடியவில்லை. இதை தொடர்ந்து, பாலியல் தொல்லைக்கு உள்ளான அந்த பெண் வேளச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, போலீசார் தீவிர விசாரணையில் இறங்கினர். மேலும், அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றிய ஆய்வு செய்தனர்.
மேலும் படிக்க: அரசு ஊழியர் நீண்ட நாள் பணியிடை நீக்க வழக்கு.. சென்னை உயர்நீதிமன்றம் அளித்த முக்கிய தீர்ப்பு!




போக்குவரத்து காவல் ஆய்வாளர் அதிரடி கைது
இதில், போக்குவரத்து காவல் ஆய்வாளர் மணிமாறன் சென்ற இருசக்கர வாகனத்தின் பதிவு எண் பதிவாகி இருந்தது. அந்த எண்ணின் அடிப்படையில், போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதில், அந்த இருசக்கர வாகனத்தின் எண்ணின் முகவரியை கண்டுபிடித்த போலீசார், அந்த முகவரிக்கு சென்று மணிமாறனை அதிரடியாக கைது செய்தனர். அவரை, அடையாறு காவல் நிலையத்துக்கு போலீசார் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். இதில், அவர் ராணிப்பேட்டை மாவட்ட போக்குவரத்து காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணிபுரிந்து வந்தது போலீசாருக்கு தெரிய வந்தது.
போலீசார் வட்டாரத்தில் கடும் அதிர்ச்சி
இதை கேட்டு அடையாறு போலீசார் சற்று அதிர்ச்சி அடைந்தனர். தமிழகத்தில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுப்பதற்காக சிங்கப் பெண்கள் சிறப்பு அதிரடிப்படை நியமிக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில், காவல்துறையை சேர்ந்த ஆய்வாளர் ஒருவரே பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் படிக்க: அரசுப் பேருந்துகளில் புதிய ரூல்ஸ்.. பயணிகளே உடனே தெரிஞ்சுக்கோங்க.. போக்குவரத்து துறை உத்தரவு!