அரசு ஊழியர் நீண்ட நாள் பணியிடை நீக்க வழக்கு.. சென்னை உயர்நீதிமன்றம் அளித்த முக்கிய தீர்ப்பு!
Madras High Court Order Suspension Case: அரசு ஊழியர்கள் நீண்ட காலம் பணியிடை நீக்கத்தில் வைத்திருக்க முடியாது எனவும், அதே வேளையில் பணியிடை நீக்கம் மாதக்கணக்கில் தொடர்வதையும் ஏற்றுக் கொள்ள முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்து உள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வந்தவர் ராமச்சந்திரன். இவர், பட்டா வழங்க லஞ்சம் பெற்றதாக இருந்த புகாரின் அடிப்படையில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். இதைத் தொடர்ந்து, கிராம நிர்வாக அலுவலர் ராமச்சந்திரன் கடந்த 2025- ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இவர் மீதான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், தன்னை பணியிட நீக்கம் செய்ததை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் கிராம நிர்வாக அலுவலர் ராமச்சந்திரன் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் தன்னை பணியிட நீக்கம் செய்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். இந்த மனு மீதான உயர் நீதிமன்ற நீதிபதி பி. டி. ஆஷா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
பணியிடை நீக்கம் மீது வழக்கு விவாதம்
அப்போது, மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா ஆஜராகி மனுதாரர் மீதான லஞ்ச ஒழிப்பு போலீசாரின் விசாரணை முடிவடைந்து 7 மாதங்கள் ஆகிவிட்டது. இருந்தாலும், தற்போது வரை குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படவில்லை. மேலும், துறை ரீதியான விசாரணைக்கு ஆஜராக கோரி கிராம நிர்வாக அலுவலர் ராமச்சந்திரனுக்கு எந்த விதமான குறிப்பாணையையும் வழங்கப்படவில்லை. இதன் காரணமாக, மனுதாரர் ராமச்சந்திரன் மீதான பணியிடை நீக்க உத்தரவு கடந்த 8 மாதங்களாக தொடர்ந்து நீடித்து வருகிறது.
மேலும் படிக்க: ரூ.5 ஆயிரம் லஞ்சம்.. லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் சிக்கிய சிறப்பு எஸ்ஐ.. திருப்பத்தூரில் சம்பவம்!




நிலுவையில் இருக்கும் லஞ்ச வழக்கு
ஒரு அரசு ஊழியரை இவ்வாறு தொடர்ந்து சட்டபூர்வமாக பணியிடை நீக்கத்தில் வைத்திருக்க முடியாது என்று வழக்கறிஞர் வாதிட்டார். இதற்கு, அரசு தரப்பு வழக்கறிஞர் எதிர்ப்பு தெரிவித்தார். மேலும், மனுதாரர் ராமச்சந்திரனுக்கு எதிரான லஞ்சம் முறைகேடு தொடர்பான விசாரணை நிலுவையில் இருந்து வருகிறது. அவரும் பணியிடை நீக்கத்தில் வைக்கப்பட்டுள்ளார் என்று குறிப்பிட்டார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஆஷா, ஊழல் தடுப்பு போலீசார் விசாரணை மற்றும் துறை ரீதியான விசாரணை ஆகிய இரண்டையும் ஒன்றாக பொருத்திப் பார்க்க முடியாது.
அரசு ஊழியரை நீண்ட காலம் சஸ்பெண்டில் வைத்திருக்க முடியாது
உச்சநீதிமன்ற தீர்ப்புகளின் அடிப்படையில், ஒரு அரசு ஊழியரை நீண்ட காலமாக பணியிடை நீக்கத்தில் வைத்திருக்க முடியாது. அதே வேளையில் பணியிடை நீக்கத்தை மாத கணக்கில் தொடர்வதையும் ஏற்றுக் கொள்ள முடியாது என்று உத்தரவிட்ட நீதிபதி, விஏஓ ராமச்சந்திரன் மீதான பணியிடை நீக்கத்தை ரத்து செய்து, அவரை முக்கியத்துவம் இல்லாத பணியிடத்தில் மீண்டும் பணியமர்த்த வேண்டும் என்று உத்தரவிட்டார்.
மேலும் படிக்க: காரைக்குடி மாநகராட்சியில் பரபரப்பு.. லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் கையும் களவுமாக சிக்கிய பில் கலெக்டர்!