ரூ.5 ஆயிரம் லஞ்சம்.. லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் சிக்கிய சிறப்பு எஸ்ஐ.. திருப்பத்தூரில் சம்பவம்!
Tirupattur Anti Corruption Police Arrested SSI: திருப்பத்தூர் மாவட்டத்தில் விபத்தில் சிக்கிய வாகனத்தை விடுவிப்பதற்காக ரூ.5 ஆயிரம் லஞ்ச வாங்கியதாக ஆலாங்காயம் சிறப்பு உதவி காவல் ஆய்வாளரை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அருகே உள்ள ஆலாங்காயம் பகுதியில் காவல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த காவல் நிலையத்தில், ஆய்வாளர், உதவி ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்கள் என சுமார் 20 பேர் பணிபுரிந்து வருகின்றனர். இங்கு, ராமகிருஷ்ணன் என்பவர் சிறப்பு உதவி காவல் ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார். சிறப்பு உதவி ஆய்வாளர் ராமகிருஷ்ணன் காவல் நிலையத்துக்கு புகார் அளிக்க வரும் பொது மக்களிடம் லஞ்சம் வாங்கி வந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு காவல் நிலையத்துக்கு புகார் சென்றதாக தெரிகிறது. இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆலாங்காயம் காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட பகுதியில் வாகன விபத்து நிகழ்ந்ததாக தெரிகிறது. விபத்தில் சிக்கிய அந்த வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்து ஆலாங்காயம் காவல் நிலையத்தில் வைத்திருந்தனர்.
விபத்தில் சிக்கிய வாகனத்தை விடுவிக்க லஞ்சம்
அந்த வாகனத்தின் உரிமையாளர் கடந்த சில நாட்களுக்கு முன்பு காவல் நிலையம் சென்று தனது வாகனத்தை விடுவிக்குமாறு கூறியதாக தெரிகிறது. அப்போது, அவரிடம் சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் ராமகிருஷ்ணன் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. இதற்கு, லஞ்சம் கொடுக்க விரும்பாத அந்த நபர் திருப்பத்தூர் மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்ததாக கூறப்படுகிறது. அதன் அடிப்படையில், போலீசார் சம்பந்தப்பட்ட ஆலாங்காயம் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வரும் சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் ராமகிருஷ்ணனை கண்காணித்து வந்துள்ளனர்.
மேலும் படிக்க: சென்னையில் பயங்கரம்.. கத்திகளுடன் மோதிக்கொண்ட கல்லூரி மாணவர்கள்.. 2 பேருக்குப் பலத்த வெட்டுக்காயம்




ரூ. 5 ஆயிரம் லஞ்சம் பெற்ற எஸ்எஸ்ஐ கைது
அதன்படி, சிறப்பு உதவி ஆய்வாளர் ராமகிருஷ்ணன் காவல் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த வாகனத்தை விடுவிப்பதற்காக அதன் உரிமையாளரிடம் ரூ.5 ஆயிரம் லஞ்சம் பெற்றதாக கூறப்படுகிறது. இதனை, அங்கு மறைந்து இருந்து கண்காணித்து வந்த ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசார் அவரை சுற்றி வளைத்து கையும் களவுமாக அதிரடியாக கைது செய்தனர்.
ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு
இதை தொடர்ந்து, அவரிடம் இருந்து ரூ.5 ஆயிரம் லஞ்ச பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், அவரை காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து, சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் ராமகிருஷ்ணன் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்து அடுத்தக்கட்ட நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் படிக்க: CMDA விதிகளில் அதிரடி மாற்றம்.. ஒரே மாதத்தில் 17 உயரமான கட்டடங்களுக்கு அனுமதி!!