717 டாஸ்மாக் கடைகள் உண்மையிலேயே மூடப்பட்டதா? RTI ஆதாரத்தை கேக்கும் நயினார் நாகேந்திரன்!
Nainar Nagendran Questioned TASMAC Shops Closed: தமிழகத்தில் உண்ணையிலேயே 717 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளனவா, அது குறித்த வெள்ளை அறிக்கையை தமிழக வெற்றிக் கழக அரசு வெளியிட வேண்டும் என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பினார்.
தமிழகத்தில் உண்மையிலேயே 717 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டனவா என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிக்கு வந்த பிறகு 717 டாஸ்மாக் கடைகளை மூடி விட்டதாக முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான தவெக அரசு தம்பட்டம் அடித்துக் கொள்கிறது. ஆனால், மூடப்பட்ட டாஸ்மாக் கடைகளின் முகவரிகள் உள்ளிட்ட விவரங்கள் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தற்போது வரை வெளியிடப்படவில்லை. தமிழகத்தில் மூடப்பட்டதாக கூறப்படும் டாஸ்மாக் கடைகள் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளதா என்ற கேள்விக்கும், தகவல் அறியும் உரிமை சட்டத்தில் பதில் இல்லை. ஜோசப் விஜய் முதல் அமைச்சராக பொறுப்பேற்ற பின்னர் புதிய டாஸ்மாக் கடைகள் ஏதேனும் திறக்கப்பட்டுள்ளதா என்பது தொடர்பான கேள்விக்கான பதிலையும் தமிழக வெற்றிக் கழக அரசு தற்போது வரை தெரிவிக்கவில்லை.
மூடப்பட்ட டாஸ்மாக் கடைகள் குறித்த விவரம்
தமிழகத்தில், மொத்தத்தில் மூடப்பட்டதாக கூறப்படும் 717 டாஸ்மாக் கடைகள் பற்றி எந்த தகவல் கேட்டாலும் அந்தந்த மாவட்ட மேலாளர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளுங்கள் என்ற ஒரே பதில் மட்டுமே தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் இருந்து வருகிறது. குறிப்பிட்ட மாவட்ட டாஸ்மாக் மேலாளர்களிடம் தரவுகள் இருக்கும் பட்சத்தில் அவற்றை ஒன்றாக சேர்த்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலமாக மக்களின் பார்வைக்கு வெளிப்படுத்துவதில் தமிழக அரசுக்கு என்ன சிக்கல் உள்ளது.
மேலும் படிக்க: சென்னையில் மெட்ரோ பயணம் இன்னும் ஈசி… விரிவாக்கம் செய்யப்படும் 2 வழித்தடங்கள்.. எவை தெரியுமா?




டாஸ்மாக் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடுக
தமிழக வெற்றிக் கழக ஆட்சியில் தற்போது வரை மூடப்பட்ட டாஸ்மாக் கடைகளின் முழு விவரங்கள் மற்றும் முகவரிகள், அங்கு பணிபுரிந்த ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட மாற்று பணிகள் குறித்த விவரங்களை அறிக்கையாக தமிழக அரசு வெளியிட வேண்டும். இந்த வெள்ளை அறிக்கை வெளியிடுவதற்கு தமிழக வெற்றிக் கழக அரசு எதற்காக தயங்குகிறது. உண்மையிலேயே தமிழகத்தில் 717 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளனவா அல்லது ஆட்சிக்கு வந்த புதிதில் எதையாவது செய்து மக்களிடம் நல்ல பெயரை வாங்க வேண்டும் என்று தமிழக வெற்றிக் கழக அரசு இந்த புரளியை கிளப்பியதா என்பன உள்ளிட்ட மக்களின் பல்வேறு கேள்விகளுக்கு முதல் அமைச்சர் ஜோசப் விஜய் உடனடியாக பதில் அளிக்க வேண்டும்.
வெட்டி வசனம்- வீண் விளம்பரம் கதைக்கு ஆகாது
வெட்டி வசனமும், வீண் விளம்பரமும் இனி கதைக்கு ஆகாது என்று அதில் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் முதல்வர் விஜய் தலைமையிலான புதிய அரசு ஆட்சி பொறுப்பேற்ற சிறிது நாட்களில் வழிபாட்டுத்தலங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் ஆகியவற்றின் அருகே உள்ள 717 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதாக அறிவிப்பு வெளியிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: தமிழகத்தில் இந்தாண்டும் உள்ளாட்சி தேர்தல் நடக்க சாத்தியமில்லை? ஏன் இந்த தாமதம்!