கரூர் அரசுப் பணி ரத்து உத்தரவு.. உச்சநீதிமன்றம் செல்லும் தமிழக அரசு.. நாளை மேல்முறையீடு செய்ய திட்டம்!
Karur Government Appointments Cancellation: கரூரில் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் 31 பேருக்கு வழங்கப்பட்ட அரசு பணி ரத்து உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய இருப்பதாக அமைச்சர் சி. டி. ஆர். நிர்மல் குமார் தெரிவித்தார்.
கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் ஜோசப் விஜய் மேற்கொண்ட தேர்தல் பரப்புரையின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இதில், 31 பேரின் குடும்பத்தினருக்கு முதல்வர் ஜோசப் விஜய் அரசுப் பணி வழங்கி இருந்தார். இந்த பணிகள் அனைத்தும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 நிலையில் உள்ள பணி இடங்கள் ஆகும். இந்த பணி நியமனங்களை ரத்து செய்ய உத்தரவிடக்கோரி நாம் தமிழர் கட்சி மற்றும் மனிதநேட ஜனநாயக கட்சியை சேர்ந்தவர்கள் மதுரை உயர்நீதிமன்ற அமர்வில் மனு தாக்கல் செய்திருந்தனர். அந்த மனு மீதான விசாரணை இன்று திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் 31 பேருக்கு வழங்கிய அனைத்து அரசுப் பணிக்கான நியமன ஆணைகளை ரத்து செய்து உத்தரவிட்டது. இந்த நிலையில், மதுரை உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் நாளை மேல் முறையீடு செய்ய இருப்பதாகவும், இது தொடர்பாக இன்று முதல் அமைச்சர் ஜோசப் விஜய்யுடன் கலந்து ஆலோசித்து முடிவெடுப்பதாகவும் சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார் குறிப்பிட்டுள்ளார்.
அரசு பணி வழங்கிய விவகாரத்தில் நீதிமன்றம் கருத்து
கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தை சேர்ந்த 31 பேருக்கு பணி நியமன ஆணைகளை முதல்வர் ஜோசப் விஜய் வழங்கியிருந்தார். இதற்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கில் மதுரை உயர்நீதிமன்றம் பணி நியமன ஆணைகளை ரத்து செய்து உத்தரவிட்டிருந்தது. இதில், சாதாரண பணி வழங்குவதாக கூறுவதை ஏற்க முடியாது. தமிழகத்தில் பல்வேறு விபத்துகளில் உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகின்றன. அப்படி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு பணி வழங்க முடியுமா. கரூரில் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களுக்கு அரசு பணி வழங்க வேண்டும் என்றால், அவர்களுக்கு திறன் பயிற்சி அளித்து உதவி செய்யலாம் என்பன உள்ளிட்ட பல்வேறு கருத்துக்களை நீதிமன்றம் தெரிவித்திருந்தது.
மேலும் படிக்க: கோயம்பேடு கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலையில் முதல்வர் திடீர் எண்ட்ரி.. அதிகாரிகள் ஷாக்!
ஜூலை 10 ஆம் தேதி பணி ஆணைகள் வழங்கல்
கரூரில் கூட்ட நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவிப்பதற்காக கடந்த ஜூலை 10- ஆம் தேதி முதல்வர் ஜோசப் விஜய் கரூர் சென்றிருந்தார். அங்கு, அரசு நிகழ்ச்சியாக நடைபெற்ற நிகழ்வில் 31 பேருக்கு அரசு பணிக்கான நியமன ஆணைகளை வழங்கி இருந்தார். ஒருவருக்கு மட்டும் அரசு பணி வழங்க முடியாத சில காரணங்களால் ரூ.10 லட்சத்தை உதவித் தொகையாக முதல்வர் வழங்கி இருந்தார்.
பல்வேறு தரப்பினர் கடும் எதிர்ப்பு
அப்போதே, அரசு பணி வழங்கியதற்கு எதிராக பல்வேறு தரப்பினர் மத்தியில் இருந்து கடும் கண்டனங்கள் மற்றும் எதிர்ப்புகள் எழுந்து வந்தன. இதை போல, அரசியல் தலைவர்களும் கடும் கண்டனங்களை பதிவிட்டு வந்தனர். தற்போது, அந்த பணி நியமன ஆணைகளை ரத்து செய்து மதுரை உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்ய திட்டமிட்டுள்ளது. உச்சநீதிமன்றம் இந்த மனுவை விசாரிக்கும் பட்சத்தில், இந்த வழக்கு தொடர்பான அடுத்த கட்ட நகர்வுகள் தெரியவரும்.
மேலும் படிக்க: கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்..தவெக அரசு வழங்கிய அரசு பணி ரத்து.. மதுரை உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!