விழுப்புரத்தில் கோர விபத்து.. பைக், பேருந்து, கார் அடுத்தடுத்து மோதி கொடூரம்.. 2 பேர் உடல் நசுங்கி பலி!
Villupuram Accident : விழுப்புரம் மாவட்டத்தில் பைக் மீது தனியார் சொகுசு பேருந்து, கார், சரக்கு வாகனம் என அடுத்தடுத்து மோதிய கொடூர சாலை விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த விபத்தில் பைக்கில் சென்ற இருவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர்.
விழுப்புரம் மாவட்டம், பிடாகம் கிராமத்தை சேர்ந்தவர் லாசர் ( 26 வயது). இவர், தனது இருசக்கர வாகனத்தில் இன்று செவ்வாய்க்கிழமை காலை சென்னை முத்தோப்பு நரசிங்கபுரத்தை சேர்ந்த பூபதி ( 45 வயது) என்பவரை அழைத்துக் கொண்டு திண்டிவனத்தில் இருந்து விழுப்புரம் நோக்கி சென்று கொண்டிருந்தார். இவர்களது இருசக்கர வாகனமானது விழுப்புரம் அருகே உள்ள அய்யூர் அகரம் ரயில்வே மேம்பாலத்தில் சென்று சென்று கொண்டிருந்தது. இவர்களுக்கு பின்னால் வாகனம் ஒன்று வந்து கொண்டிருந்தது. அப்போது, எதிர்பாராத விதமாக பின்னல் வந்த வாகனம் லாசர் ஓட்டிச் சென்ற இருசக்கர வாகனம் மீது எதிர்பாராத விதமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தை ஏற்படுத்தி விட்டு அந்த வாகனம் நிக்காமல் சென்று விட்டது. இந்த விபத்தில் சிக்கிய லாசர் மற்றும் பூபதி ஆகியோர் சாலையில் விழுந்து பலத்த காயமடைந்தனர்.
விபத்தில் சிக்கியவர்கள் மீது மோதிய தனியார் பேருந்து
அப்போது, அந்த வழியாக சென்னையில் இருந்து கோயம்புத்தூர் மாவட்டம், மேட்டுப்பாளையம் நோக்கி சொகுசு பேருந்து ஒன்று வந்தது. இந்த பேருந்தை ராணிப்பேட்டையில் சேர்ந்த ஓட்டுநர் சரவணன் இயக்கி வந்தார். அப்போது விபத்தில் சிக்கிய அந்த இளைஞர்கள் சாலையில் விழுந்து கிடந்த நிலையில், அவர்கள் மீது மோதாமல் இருப்பதற்காக ஓட்டுநர் பிரேக் பிடிக்க முயன்றார். ஆனால், அதற்குள்ளாகவே பேருந்து சாலையில் விழுந்து கிடந்தவர்கள் மீது ஏறி இறங்கியது.
மேலும் படிக்க: கொய்யாப்பழத்துக்கு ஆசைப்பட்ட பெண் உயிரிழப்பு.. கன்னியாகுமரியில் சோகமான நிகழ்வு!




அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளான வாகனங்கள்
அப்போது பின்னால் வந்த கார், அதன் பின்னால் வந்த சரக்கு வாகனம் அடுத்தடுத்து பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில், பூபதி சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். லாசர் பலத்த காயமடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். காரில் பயணித்த சென்னை, முடிச்சூரை சேர்ந்த ஜான் அன்பழகன் ( 50 வயது) என்பவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவருடன் காரில் வந்த சாலமன் மற்றும் ஓட்டுநர் பாலாஜி ஆகியோர் பலத்த காயமடைந்தனர்.
விழுப்பரம் தாலுகா போலீசார் விசாரணை
இவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு விழுப்புரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து தொடர்பாக தகவல் அறிந்த விழுப்புரம் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும், விபத்தில் சிக்கிய வாகனங்களை மீட்டு போக்குவரத்தை சரி செய்தனர். விழுப்புரம் பகுதியில் அடுத்தடுத்து வாகனங்கள் விபத்தில் சிக்கியதும், 2 பேர் உயிரிழந்ததும் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும் படிக்க: காரைக்குடி மாநகராட்சியில் பரபரப்பு.. லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் கையும் களவுமாக சிக்கிய பில் கலெக்டர்!