கொய்யாப்பழத்துக்கு ஆசைப்பட்ட பெண் உயிரிழப்பு.. கன்னியாகுமரியில் சோகமான நிகழ்வு!
Kanyakumari Woman Died : கன்னியாகுமரி மாவட்டத்தில் வீட்டின் மொட்டை மாடியில் இருந்து கொய்யா பழம் பறித்துக் கொண்டிருந்த பெண் எதிர்பாராதவிதமாக தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். இந்தச் சம்பவம் தொடர்பாக களியக்காவிளை போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் வீட்டின் மொட்டை மாடியில் நின்று கொண்டு கொய்யா பழங்களை பறித்து கொண்டிருந்த பெண் தவறி விழுந்ததில் பரிதாபமாக உயிரிழந்தார். கன்னியாகுமரி மாவட்டம், குழித்துறை அருகே உள்ள ஈத்தவிளை பகுதியை சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி அமுதா ( 55 வயது). இவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது வீட்டின் அருகே நின்று கொண்டிருந்த கொய்யா மரத்தில் இருந்து பழங்களை பறிப்பதற்காக தனது வீட்டின் மொட்டை மாடிக்கு சென்றார். அங்கு, அமுதா கொய்யா பழங்களை பறித்துக் கொண்டிருந்தபோது, மொட்டை மாடியில் அமைக்கப்பட்டிருந்த ஆஸ்பெட்டாஸ் சீட்டின் விளிம்பில் மிதித்துள்ளார். அப்போது, அவரது பாரம் தாங்காமல் ஆஸ்பெட்டாஸ் சீட் உடைந்து அமுதா கீழே விழுந்தார். இதில், அவருக்கு தலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது.
பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் தீவி சிகிச்சை
ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு, சிகிச்சை பெற்று வந்த அமுதாவின் உடல் நலம் மேலும் பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக, அவர் தீவிர சிகிச்சைக்காக கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் செயல்பட்டு வரும் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு, தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அமுதா, நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.



களியக்காவிளை போலீசார் விசாரணை
இதை தொடர்ந்து, அவரது சடலம் பிரேத பரிசோதனை மேற்கொள்வதற்காக கொண்டு செல்லப்பட்டது. அங்கு, பிரேத பரிசோதனை நடத்தப்பட்டு அவரது சடலம் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த உயிரிழப்பு சம்பவம் தொடர்பாக அமுதாவின் கணவர் முருகன் களியக்காவிளை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அந்த புகாரின் அடிப்படையில், போலீசார் வழக்கு பதிவு செய்து சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.
பெண் உயிரிழந்த சம்பவத்தால் பெரும் சோகம்
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கன்னியாகுமரியில் கொய்யாப்பழம் பறிப்பதற்காக வீட்டின் மொட்டை மாடியில் இருந்து எதிர்பாராதமாக பெண் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தினர் மட்டுமின்றி அந்த பகுதி முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் படிக்க: கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்..தவெக அரசு வழங்கிய அரசு பணி ரத்து.. மதுரை உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!