அண்ணாமலை விலகலால் பாஜக பலவீனமாகுமா? நயினார் நாகேந்திரன் நச் பதில்!
Nainar Nagendran : பாரதிய ஜனதா கட்சியில் இருந்து அண்ணாமலை விலகியதால் கட்சிக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்று தமிழக பாஜகவின் மாநில செயலாளர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார். மேலும், கட்சி, அண்ணாமலை குறித்து பல்வேறு கருத்துகளை முன் வைத்தார் .
பாரதிய ஜனதா கட்சியில் இருந்து, அந்த கட்சியின் முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை விலகப் போவதாக தனது ராஜினாமா கடிதத்தை கட்சியின் தேசிய தலைவர் நிதின் நபீனிடம் வழங்கியிருந்தார். இது தொடர்பாக, பாஜக தலைமை பேச்சுவார்த்தை நடத்தியதின் அடிப்படையில், இன்று வெள்ளிக்கிழமை ( ஜூன் 5- ஆம் தேதி) அவரது ராஜினாமா கடிதம் ஏற்கப்பட்டதாக பாஜக தலைமை தெரிவித்தது. இந்த நிலையில், பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல் தொடர்பாக கட்சியின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் சென்னையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பாஜக மீது அண்ணாமலை பல மாதங்களாக அதிருப்தியில் இருந்ததாக கூறுவது குறித்து நான் எந்த கருத்தையும் தெரிவிக்க முடியாது. இது தொடர்பான கேள்விகளை அண்ணாமலையிடம் தான் கேட்க வேண்டும். பாரதிய ஜனதா கட்சி என்பது சித்தாந்த அடிப்படையிலான கட்சியாகும்.
தமிழர்கள் – தமிழ் மீது மோடிக்கு அக்கறை
இன்று, நேற்று ஆரம்பித்த கட்சி கிடையாது. இந்த கட்சியில் இருந்து அண்ணாமலை விலகி விட்டார் என்பதால் எந்த விதமான பாதிப்பும் கிடையாது. தேசியக் கட்சிகள் மாநில மொழிகளை பேசுவதில்லை என்ற அண்ணாமலையின் குற்றச்சாட்டுக்கு பிரதமர் மோடி எங்கு சென்றாலும் தமிழ் பற்றியும், தமிழர்கள் பற்றியும், தமிழின் பெருமை பற்றியும் பேசி வருகிறார். தமிழக மக்கள் மீது பாரதிய ஜனதா கட்சி எப்போதும் அக்கறையுடன் செயல்பட்டு வருகிறது.
மேலும் படிக்க: “தவறு செய்தால் கடும் நடவடிக்கை!”.. முதல் அமைச்சரவைக் கூட்டத்திலேயே அமைச்சர்களுக்கு முதல்வர் விஜய் எச்சரிக்கை!




ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம்
புதிய கட்சியை யார் வேண்டுமானாலும் தொடங்கலாம். புதிய கட்சியை தொடங்குவதற்கு ஜனநாயக நாட்டில் அனைவருக்கும் உரிமை உள்ளது. பிராந்திய பிரச்சனைகளுக்கு பாரதிய ஜனதா கட்சி உரிமை மற்றும் முக்கியத்துவம் தரவில்லை என்பது தவறான குற்றச்சாட்டு ஆகும் என்று தெரிவித்தார். தமிழக பாரதிய ஜனதா கட்சி மீது அதிருப்தி இருப்பதாகவும். அந்த கட்சியின் மூத்த தலைவர்கள் உள்ளிட்டோர் மீதும் அதிருப்தி இருப்பதாகவும் கட்சியின் தலைமையிடம் அண்ணாமலை தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகி இருந்தன.
பாஜகவில் இருந்து விலகுவது என தீர்க்கமான முடிவு
அத்துடன், கட்சியில் இருந்து விலகுவது என அண்ணாமலை தீர்க்கமான முடிவை எடுத்து விட்டதாகவும் தகவல் வெளியாகி வந்தது. இருந்தாலும், அண்ணாமலையை கட்சியில் தக்க வைத்துக் கொள்வதற்காக பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்கள் பல்வேறு கட்ட முயற்சிகளை முன்னெடுத்து வந்தனர். ஆனால், அண்ணாமலை அதற்கு எந்தவிதமான இசைவும் கொடுக்காமல் பாஜகவில் இருந்து வெளியேறுவது என முடிவு செய்து விட்டதாக தீர்க்கமாக தெரிவித்துள்ளார். அதன் அடிப்படையிலேயே அவரது ராஜினாமா கடிதம் தற்போது ஏற்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: ஜூன் 18 முதல் தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத்தொடர் கூடுகிறது.. ஆளுநர் உரையுடன் தொடக்கம்!!