மரணக்குழியான மேம்பாலப் பணி? கோவை தண்ணீர் பந்தலில் பெரும் பள்ளத்தில் விழுந்த நபர்!
Coimbatore Crime: கோயம்புத்தூர் மாவட்டத்தில் தண்ணீர் பந்தல் பகுதியில் ரயில்வே மேம்பாலம் அமைப்பதற்காக தோண்டப்பட்டிருந்த பெரிய அளவிலான குழியில் சைக்கிளில் சென்ற நபர் எதிர்பாராதவிதமாக தவறி விழுந்தார். இந்த விபத்து தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் தண்ணீர் பந்தல் பிரதான சாலையில் ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த பணிகளுக்காக சாலையின் நடுவே ஆழமான குழிகள் தோண்டப்பட்டு அதில் காண்கிரீட் தூண்கள் அமைப்பதற்காக இரும்பு கம்பிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், அந்த வழியாக ஒரு நபர் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது, எதிர்பாராத விதமாக அவர் அந்த ஆபத்தான குழியில் சைக்கிளோடு விழுந்தார். அந்த பள்ளத்துக்குள் இரும்பு கம்பிகள் மற்றும் காண்கிரீட் அமைப்பதற்கான கட்டைகள் இருந்த காரணத்தால் அந்த நபர் பலத்த காயம் அடைந்து சத்தம் போட்டார். இந்த சத்தம் கேட்டு அந்த வழியாக சென்ற பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் உடனடியாக விரைந்து வந்து குழிக்குள் தவறி விழுந்த நபரை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். சிறிது நேரம் போராட்டத்திற்கு பிறகு அவர் பத்திரமாக மீட்கப்பட்டார்.
பலத்த காயத்துடன் மருத்துவமனையில் சிகிக்சை
தொடர்ந்து, அவசர ஆம்புலன்ஸ் மூலம் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார். ரயில்வே மேம்பாலாக கட்டுமான பணிகள் நடைபெற்று வரும் பகுதியில் எவ்வித தடுப்புகளோ அல்லது எச்சரிக்கை பலகைகளோ இல்லாமல் இருந்த காரணத்தால் இந்த சம்பவம் நிகழ்ந்ததாக பொதுமக்கள் தரப்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. இந்த விபத்து தொடர்பாக அந்த பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவின.
மேலும் படிக்க: “தவறு செய்தால் கடும் நடவடிக்கை!”.. முதல் அமைச்சரவைக் கூட்டத்திலேயே அமைச்சர்களுக்கு முதல்வர் விஜய் எச்சரிக்கை!




கோவையில் பல்வேறு இடங்களில் தொடரும் விபத்து
அத்துடன், இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த மேம்பால பணிகளை மேற்கொண்டு வரும் தனியார் நிறுவனத்தின் ஊழியர்கள் அவசர அவசரமாக வந்து அந்த பகுதியில் எச்சரிக்கை பலகைகளை அமைத்தனர். மேலும், கோவையில் பல்வேறு இடங்களில் தொடர்ந்து நடைபெற்று வரும் மேம்பால பணிகளில் இது போன்ற விபத்துக்கள் நடைபெற்று வருவதாகவும், இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் தலையிட்டு சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோவை மாவட்ட மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
ரயில்வே மேம்பால பணிகளை விரைந்து முடிக்க கோரிக்கை
தண்ணீர் பந்தல் பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் ரயில்வே மேம்பால பணிகள் ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகளை விரைந்து முடிக்கவ வேண்டும் எனவும், பாலம் அமைக்கும் பணிகள் தாமதமாக நடைபெற்று வருவதன் காரணமாக எதிர்பாராரத விதமாக இதுபோன்ற விபத்துகள் நிகழ்வதாக அந்தப் பகுதியை சேர்ந்த பொது மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
மேலும் படிக்க: குற்றாலம்: அருவியில் குளிக்க வந்தவர்களுக்கு ஷாக்… தொடரும் தடை!