“தவறு செய்தால் கடும் நடவடிக்கை!”.. முதல் அமைச்சரவைக் கூட்டத்திலேயே அமைச்சர்களுக்கு முதல்வர் விஜய் எச்சரிக்கை!
தேர்தல் சமயத்தில் நான் அளித்த வாக்குறுதிகள் வெறும் வாய்ச்சொல் அல்ல. அவை ஒவ்வொன்றும் மக்களுக்குப் பயன் தரும் வகையில் மிகச் சரியாகத் திட்டமிடப்பட்டவை. எனவே, அந்தத் திட்டங்களை வெறும் பேரளவில் இல்லாமல், யாருக்காக அவை உருவாக்கப்பட்டதோ, அந்தப் பொதுமக்களைச் சென்றடையும் வகையில் அமைச்சர்கள் துரிதமாகச் செயல்பட வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
சென்னை, ஜுன் 05: தமிழகத்தில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசின் முதல் அமைச்சரவைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில், மக்கள் நலன் சார்ந்த திட்டங்களைச் செயல்படுத்துவது குறித்தும், நிர்வாகத்தில் கடைப்பிடிக்க வேண்டிய நேர்மை குறித்தும் அமைச்சர்களுக்கு முதலமைச்சர் விஜய் கடுமையான நெறிமுறைகளையும் எச்சரிக்கையையும் விடுத்துள்ளார். குறிப்பாக இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவது குறித்தும் ஆலோசனை மேற்க்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது. இதுபற்றி இக்கட்டுரையில் விரிவாக காணலாம்.
இதையும் படிக்க: “ரஜினிகாந்த் அழைப்பை மறுத்து மன்னிப்பு கேட்டேன்”.. ரகசியம் உடைத்த அண்ணாமலை!!
பூஜ்ஜிய ஊழல் இலக்கு:
அமைச்சரவைக் கூட்டத்தில் முதலமைச்சர் விஜய் முக்கியமாக வலியுறுத்தியது நிர்வாகத் தூய்மை ஆகும். ஊழலற்ற நிர்வாகம். “நமது அரசாங்கத்தின் முக்கிய இலக்கு லஞ்ச ஊழலற்ற நிர்வாகம் (Zero Corruption) மற்றும் தூய்மையான அரசாங்கம் (Clean Government) என்பதுதான். அரசாங்கத்தை முற்றிலும் தூய்மையானதாக மாற்றுவதற்கான வழிகளில் அமைச்சர்கள் தீவிர கவனம் செலுத்த வேண்டும்.”
அமைச்சர்களுக்கு எச்சரிக்கை:
அமைச்சர்கள் எக்காரணத்தைக் கொண்டும் எந்தவொரு தவறுக்கும் இடமளிக்கக் கூடாது. தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது உடனுக்குடன் கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். அமைச்சர்கள் மட்டுமல்லாமல், அவர்களுக்குக் கீழ் பணியாற்றுபவர்கள், துறையைச் சார்ந்தவர்கள் மற்றும் உடன் இருப்பவர்கள் என யாராக இருந்தாலும் தவறு செய்யாத வண்ணம் அமைச்சர்கள் தங்களது கட்டுப்பாட்டில் வைத்துக் கண்காணிக்க வேண்டும்.”
தேர்தல் வாக்குறுதிகள் வெறும் பேச்சல்ல:
நடந்து முடிந்த தேர்தலில் தங்களின் கட்சி சார்பில் அளிக்கப்பட்ட ‘வெற்றி தமிழகம் தொலைநோக்குத் திட்டங்கள்’ உள்ளிட்ட சுமார் 436 தேர்தல் வாக்குறுதிகள் மற்றும் திட்டங்களைச் செயல்படுத்துவது குறித்த முதற்கட்ட விபரங்களை முதலமைச்சரே விரிவாக அமைச்சர்களுடன் ஆலோசித்தார். “தேர்தல் சமயத்தில் நான் அளித்த வாக்குறுதிகள் வெறும் வாய்ச்சொல் அல்ல. அவை ஒவ்வொன்றும் மக்களுக்குப் பயன் தரும் வகையில் மிகச் சரியாகத் திட்டமிடப்பட்டவை. எனவே, அந்தத் திட்டங்களை வெறும் பேரளவில் இல்லாமல், யாருக்காக அவை உருவாக்கப்பட்டதோ, அந்தப் பொதுமக்களைச் சென்றடையும் வகையில் அமைச்சர்கள் துரிதமாகச் செயல்பட வேண்டும். மக்கள் நலத்திட்டங்களைச் செயல்படுத்துவதில் எவ்வித தொய்வும் (Lag) இருக்கக் கூடாது” என முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.
இதையும் படிக்க: யார் இந்த அண்ணாமலை? காக்கிச் சீருடை முதல் அரசியல் அதிரடி வரை.. முழு அரசியல் பயணப் பார்வை!!
முதல்முறை அமைச்சர்களுக்கு அறிவுரை:
தற்போது அமைச்சரவையில் உள்ளவர்களில் கிட்டத்தட்ட 80 சதவீதத்திற்கும் அதிகமானோர் முதல்முறையாகச் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டு, முதல்முறை அமைச்சர்களாகப் பொறுப்பேற்றுள்ளனர். அவர்கள் மீது ஏற்கனவே சில விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருவதைச் சுட்டிக்காட்டிய முதலமைச்சர், துறை ரீதியாக மக்கள் நலத்திட்டங்களை விரைந்து முடிக்க முழு ஈடுபாட்டுடன் செயல்பட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். மேலும், திட்டங்கள் மற்றும் துறைகள் சார்ந்த பல்வேறு முக்கிய முடிவுகள் குறித்தும் இக்கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்பட்டதாகத் தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.