டாஸ்மாக் பார் தகராறில் இளைஞர் அடித்துக் கொலை.. தப்பியோடிய நண்பர்களுக்கு வலைவீச்சு.. நெல்லையில் பயங்கரம்!
இந்த கைகலப்பின் போது ஆத்திரமடைந்த ஆகாஷின் நண்பர்கள், அருகிலிருந்த பெரிய கல்லை எடுத்து ஆகாஷின் கழுத்து, தலை, கை, கால்கள் உள்ளிட்ட பல்வேறு உடல் பாகங்களில் கொடூரமாகத் தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த ஆகாஷ், சம்பவ இடத்திலேயே இரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.
திருநெல்வேலி, ஜுன் 05: நெல்லை மாவட்டம் கிருஷ்ணாபுரம் பகுதியில் டாஸ்மாக் கடையில் ஏற்பட்ட திடீர் தகராறில் இளைஞர் ஒருவர் அவரது நண்பர்களாலேயே அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை கிருஷ்ணாபுரம் ஆதிபராசக்தி நகர் பகுதியில் அரசு டாஸ்மாக் மதுபானக் கடை ஒன்று இயங்கி வருகிறது. இந்த டாஸ்மாக் கடைக்கு உட்பட்ட பாருக்கு, நெல்லை மேல புத்தேரி பகுதியைச் சேர்ந்த ஆகாஷ் என்ற இளைஞர் தனது நண்பர்கள் சிலருடன் மது அருந்துவதற்காக வந்துள்ளார். அப்போது, நண்பர்களிடையே ஏற்பட்ட வாக்குவாதம் கொலையில் முடிந்துள்ளது. இந்த கொடூர சம்பவம் பற்றி இக்கட்டுரையில் விரிவாக காணலாம்.
இதையும் படிக்க : அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த பசு.. காப்பாற்ற முயன்ற பள்ளி மாணவன் பரிதாப பலி..
டாஸ்மாக் பாரில் கைகலப்பு:
நேற்று இரவு சுமார் 7 மணி அளவில் மது அருந்தத் தொடங்கிய அவர்கள், நீண்ட நேரமாக அங்கு அமர்ந்து பல்வேறு விஷயங்களைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது, மது போதையில் இருந்த ஆகாஷுக்கும் அவருடன் வந்த நண்பர்களுக்கும் இடையே திடீரென ஒரு விஷயத்தில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதம் விபரீதமாக மாறி, இரு தரப்பினருக்கும் இடையே கடுமையான கைகலப்பாக உருவெடுத்தது.
கல்லால் தாக்கிப் படுகொலை:
இந்த கைகலப்பின் போது ஆத்திரமடைந்த ஆகாஷின் நண்பர்கள், அருகிலிருந்த பெரிய கல்லை எடுத்து ஆகாஷின் கழுத்து, தலை, கை, கால்கள் உள்ளிட்ட பல்வேறு உடல் பாகங்களில் கொடூரமாகத் தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த ஆகாஷ், சம்பவ இடத்திலேயே இரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். ஆகாஷ் உயிரிழந்ததை அறிந்ததும், கொலையை அரங்கேற்றிய நபர்கள் மற்றும் அந்த பாரில் மது அருந்திக் கொண்டிருந்த மற்ற நபர்கள் அனைவரும் அங்கிருந்து அலறியடித்துக் கொண்டு தப்பியோடிவிட்டனர்.
காவல்துறை விசாரணை:
இச்சம்பவம் குறித்து உடனடியாக சிவந்திப்பட்டி காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், ஆகாஷின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், சம்பவ இடத்தில் தடயங்களைச் சேகரிப்பதற்காக மோப்ப நாய் பிரிவினரும் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. டாஸ்மாக் பாரில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி (CCTV) கேமரா காட்சிகள் மற்றும் அங்கு கிடைத்த ஆவணங்களைக் கைப்பற்றி, கொலையாளிகள் யார், கொலைக்கான பின்னணியில் ஏதேனும் முன்விரோதம் காரணமா என்ற கோணத்தில் சிவந்திப்பட்டி போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிக்க: ‘கெட்டுப்போன சிக்கனில் பிரியாணி’.. 100க்கு மேற்பட்டோருக்கு பாதிப்பு.. இருவர் கவலைக்கிடம்!!
தொடரும் கொலைச் சம்பவங்கள்:
நெல்லை மாநகர் பகுதியில் நேற்று அதிகாலை நேரத்தில்தான், குடும்பத் தகராறில் மகன் ஒருவன் தனது தந்தையை அடித்துக் கொலை செய்த அதிர்ச்சிச் சமப்வம் அரங்கேறியிருந்தது. அதனைத் தொடர்ந்து, தற்போது கிருஷ்ணாபுரம் பகுதியில் டாஸ்மாக் பாரில் இளைஞர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் நெல்லை மாவட்ட மக்களிடையே பெரும் அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.