பச்சை நிற ஆவின் பால் பாக்கெட்டுகள் நிறுத்தமா?.. ஆவின் நிர்வாகம் கொடுத்த விளக்கம்!
இந்தச் செய்திகள் அனைத்தும் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானவை என்று ஆவின் நிர்வாகம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ஆவின் நிறுவனம் வெளியிட்டுள்ள விளக்கத்தில் பின்வருவன கூறப்பட்டுள்ளன, ஆவின் நிறுவனத்தின் எந்தவொரு பால் வகையின் விநியோகமும் நிறுத்தப்படவும் இல்லை, அவற்றின் அளவு கணிசமாகக் குறைக்கப்படவும் இல்லை.
சென்னை, ஜுன் 13: ஆவின் நிறுவனத்தின் ‘பச்சை நிற’ (கிரீன் மேஜிக்) பால் பாக்கெட்டுகளின் விநியோகம் நிறுத்தப்பட்டதாக சமூக ஊடகங்கள் மற்றும் சில ஊடகங்களில் பரவி வந்த செய்திகளுக்கு, ஆவின் நிர்வாகம் தற்போது அதிகாரப்பூர்வமாக மறுப்பு தெரிவித்து விளக்கமளித்துள்ளது. தமிழகம் முழுவதும் பொதுமக்களின் தேவைக்காக ஆவின் நிறுவனம் சார்பில் நீலம் (சமன்படுத்திய பால்), பச்சை (நிறைவுற்ற பால்/கிரீன் மேஜிக்), ஆரஞ்சு (நிறை கொழுப்பு பால்) எனப் பல்வேறு வகைகளில் பால் பாக்கெட்டுகள் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன.
மேலும் படிக்க: பிஸ்கட் சாப்பிடுவதில் தம்பியுடன் தகராறு.. 15 வயது சிறுமியின் விபரீதமான முடிவு.. திண்டுக்கல்லில் சோகம்!
இந்நிலையில், நடுத்தர மக்களால் அதிகம் பயன்படுத்தப்படும் பச்சை நிற பால் பாக்கெட்டுகளின் விநியோகம் முற்றிலும் நிறுத்தப்பட்டு விட்டதாகவோ அல்லது அதன் சப்ளை கணிசமாகக் குறைக்கப்பட்டதாகவோ சில ஊடகங்களில் செய்திகள் வெளியாகி பொதுமக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியது.
தங்கு தடையின்றி விநியோகம் தொடரும்:
இந்தச் செய்திகள் அனைத்தும் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானவை என்று ஆவின் நிர்வாகம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ஆவின் நிறுவனம் வெளியிட்டுள்ள விளக்கத்தில் பின்வருவன கூறப்பட்டுள்ளன, ஆவின் நிறுவனத்தின் எந்தவொரு பால் வகையின் விநியோகமும் நிறுத்தப்படவும் இல்லை, அவற்றின் அளவு கணிசமாகக் குறைக்கப்படவும் இல்லை.
வந்திகளை நம்ப வேண்டாம்:
வழக்கம் போல பச்சை நிற ஆவின் பால் பாக்கெட்டுகள் அனைத்துப் பகுதிகளிலும் தங்கு தடையின்றித் தொடர்ந்து விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. பொதுமக்கள் இது போன்ற வதந்திகளையும், தவறான செய்திகளையும் நம்ப வேண்டாம். பொதுமக்களுக்கான பால் விநியோகச் சேவை எந்தவிதப் பாதிப்பும் இன்றித் தொடர்ந்து சீராக மேற்கொள்ளப்பட்டு வருவதால், நுகர்வோர்கள் மற்றும் பொதுமக்கள் யாரும் இது குறித்து அச்சப்படவோ அல்லது குழப்பமடையவோ தேவையில்லை என்றும் ஆவின் நிர்வாகம் தெளிவுபடுத்தியுள்ளது.
குற்றஞ்சாட்டிய அன்புமணி ராமதாஸ்:
முன்னதாக, தமிழ்நாடு முழுவதும் ஏழை, எளிய மக்களால் அதிகம் பயன்படுத்தப்பட்டு வரும் 4.5% கொழுப்புச் சத்து கொண்ட ‘ஆவின் பச்சைப்பால்’ விற்பனையை ஆவின் நிறுவனம் பெருமளவில் குறைத்துள்ளதாகப் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டியிருந்தார். நஷ்டம் மற்றும் பற்றாக்குறையைக் காரணம் காட்டி பொதுமக்களின் அத்தியாவசியத் தேவையைப் பாதிக்கும் வகையில் அரசு செயல்படக்கூடாது என அவர் வலியுறுத்தியிருந்தார்.
மேலும் படிக்க: ‘வீடு லீசுக்கு போறீங்களா?’ சென்னையில் அரங்கேறிய பல லட்ச ரூபாய் நூதன மோசடி.. உஷார் மக்களே!!
சென்னையில் மட்டும் ஆவின் நிறுவனம் நாளொன்றுக்கு சராசரியாக 14 லட்சம் லிட்டர் பால் விற்பனை செய்கிறது. இதில் 7.5 லட்சம் லிட்டர் பச்சைப்பால் மட்டுமே விற்பனையாகிறது. ஆனால், தற்போது இந்த விற்பனை 3.5 லட்சம் லிட்டராகப் பாதியாகக் குறைக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் தனியார் பால் நிறுவனங்களை நாட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. தனியார் பாலின் விலை ஆவினை விட லிட்டருக்கு ரூ.24 வரை அதிகமாக இருப்பதால், நடுத்தர மற்றும் ஏழை மக்கள் கடும் பொருளாதாரச் சுமைக்கு உள்ளாகின்றனர்” என்று கவலை தெரிவித்திருந்தார்.