‘கெட்டுப்போன சிக்கனில் பிரியாணி’.. 100க்கு மேற்பட்டோருக்கு பாதிப்பு.. இருவர் கவலைக்கிடம்!!
தற்போது அந்த கேட்டரிங் நிறுவனத்தில் இருந்த உணவு மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, அவை சோதனைக்காக ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன. "பொதுமக்கள் மற்றும் ஊழியர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரத்தில் சமரசம் செய்பவர்கள் மீது எவ்விதத் தடையுமின்றி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" என உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
ஸ்ரீபெரும்புதூர், ஜுன் 4: காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே தொழிற்சாலையில் வழங்கப்பட்ட பிரியாணியைச் சாப்பிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட பெண் ஊழியர்கள் அடுத்தடுத்து வாந்தி, மயக்கமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து, அத்தொழிற்சாலைக்கு உணவு விநியோகம் செய்த தனியார் கேட்டரிங் நிறுவனத்திற்கு உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் அதிரடியாக சீல் வைத்துள்ளனர். ஸ்ரீபெரும்புதூர் அடுத்த பிள்ளைப்பாக்கம் பகுதியில் கார்களுக்குத் தேவையான கேபிள்களைத் தயாரிக்கும் ‘டிஎஸ்’ (TS) என்ற தனியார் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இத்தொழிற்சாலையில் நேற்று மதிய உணவாக அங்கு பணிபுரியும் பெண் ஊழியர்களுக்குச் ‘சிக்கன் பிரியாணி’ வழங்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க : கோயம்பேட்டில் கார் ஏற்றி மாணவி கொலை செய்யப்பட்ட வழக்கு.. மேலும் ஒருவர் உயிரிழப்பு.. நடந்தது என்ன?
அடுத்தடுத்து மயங்கி விழுந்த 100 பேர்:
மதிய உணவைச் சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே, அடுத்தடுத்து 100-க்கும் மேற்பட்ட பெண் ஊழியர்களுக்குக் கடுமையான வயிற்று வலி, வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த நிறுவன நிர்வாகத்தினர், பாதிக்கப்பட்ட ஊழியர்களை உடனடியாக மீட்டு ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதித்தனர். தற்போது ஊழியர்கள் அனைவரும் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வருவதாகவும், தற்போதைய நிலையில் நலமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேட்டரிங் நிறுவனத்திற்கு அதிரடி சீல்:
இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த காஞ்சிபுரம் மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து தீவிர விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில், அந்தத் தொழிற்சாலைக்கு ‘தன்ஸ்ரீ’ என்ற கேட்டரிங் சர்வீஸ் நிறுவனம் உணவு விநியோகம் செய்தது கண்டறியப்பட்டது.
அந்நிறுவனத்தில் மிகவும் சுகாதாரமற்ற முறையில் உணவு தயாரிக்கப்பட்டதே ஊழியர்களின் இந்த பாதிப்பிற்குக் காரணம் என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். இதனைத் தொடர்ந்து, அதிகாரிகள் அந்த கேட்டரிங் நிறுவனத்திற்கு அதிரடியாகச் சீல் வைத்துத் தங்களது நடவடிக்கையை தொடங்கியுள்ளனர்.
தீவிர விசாரணை:
தற்போது அந்த கேட்டரிங் நிறுவனத்தில் இருந்த உணவு மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, அவை சோதனைக்காக ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன. “பொதுமக்கள் மற்றும் ஊழியர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரத்தில் சமரசம் செய்பவர்கள் மீது எவ்விதத் தடையுமின்றி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
கெட்டுப்போன சிக்கனால் நேர்ந்த விபரீதம்:
இதனிடையே, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடத்திய முதற்கட்ட விசாரணையில், ‘கெட்டுப்போன சிக்கனை’ கொண்டு பிரியாணி சமைத்துக் கொடுத்துள்ளது தெரியவந்துள்ளது. மருத்துவமனையில் மொத்தம் 97 பேர் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு நேற்று இரவு தீவிர சிகிச்சையில் இருந்து வந்தனர்.
இதையும் படிக்க : எஸ்.ஜே. சூர்யாவின் கில்லர் படப்பிடிப்பில் சோகம்… கேஸ் சிலிண்டர் வெடித்ததில் ஒரு பலி… 3 பேர் பலத்த காயம்
ஐசியூவில் 2 பெண்கள்:
அவர்களில் முறையான சிகிச்சைக்குப் பின் உடல்நிலை தேறிய 84 பேர் தற்போது டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பியுள்ளனர். எஞ்சியவர்களில் 13 பேருக்குத் தொடர்ந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் மிகவும் ஆபத்தான நிலையில் இருந்தவர்களில், தற்போது இரண்டு பெண்கள் தீவிர சிகிச்சை பிரிவில் (ICU) மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த விபரீத விவகாரம் தொடர்பாக ஸ்ரீபெரும்புதூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.