கோயம்பேட்டில் கார் ஏற்றி மாணவி கொலை செய்யப்பட்ட வழக்கு.. மேலும் ஒருவர் உயிரிழப்பு.. நடந்தது என்ன?
Chennai Crime: படுகாயங்களுடன் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பவுசி தீபிகா (17), இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதன் மூலம், கோயம்பேட்டில் கார் ஏற்றி நடத்தப்பட்ட இந்த கொலைச் சம்பவத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை இரண்டாக உயர்ந்துள்ளது.
சென்னை, ஜூன் 3, 2026: கோயம்பேட்டில் உள்ள தனியார் மதுபான பாரில் ஏற்பட்ட தகராறைத் தொடர்ந்து, 12ஆம் வகுப்பு மாணவி கார் ஏற்றி கொலை செய்யப்பட்ட வழக்கில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் ஒரு சிறுமியும் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் அனிச்சங்குப்பம் இலங்கை அகதிகள் முகாமில் வசித்து வருபவர் மேரி ஸ்டெல்லா. இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இளைய மகள் யான்சி (18), 12ஆம் வகுப்பை முடித்துவிட்டு கல்லூரியில் சேர காத்திருந்தார்.
கோயம்பேடு தனியார் பாரில் ஏற்பட்ட பிரச்சனை:
யான்சிக்கு கடந்த சில மாதங்களாக இன்ஸ்டாகிராம் மூலம் சென்னையைச் சேர்ந்த பவுசி தீபிகா என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், கடந்த 19ஆம் தேதி பவுசி தீபிகாவை சந்திக்க சென்னை வந்த யான்சி, அவரது வீட்டிலேயே தங்கி இருந்ததாக கூறப்படுகிறது.
கடந்த 28ஆம் தேதி யான்சி மற்றும் பவுசி தீபிகா இருவரும் திரைப்படம் பார்த்துவிட்டு தாமதமாக வீட்டிற்கு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் பவுசி தீபிகாவை அவரது தாய் கண்டித்ததாகவும், அதனைத் தொடர்ந்து இருவரும் வீட்டை விட்டு வெளியேறியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதையடுத்து, கடந்த 30ஆம் தேதி இரவு பவுசி தீபிகா தனது நண்பர்கள் மற்றும் யான்சியுடன் கோயம்பேட்டில் உள்ள தனியார் ஹோட்டல் பாருக்கு சென்றுள்ளனர். அப்போது மது அருந்திவிட்டு நடனமாடிக் கொண்டிருந்த போது, அங்கிருந்த மற்றொரு தரப்பினருடன் தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனால், பாரில் இருந்த பவுன்சர்கள் உடனடியாக இரு தரப்பினரையும் வெளியே அனுப்பினர். வெளியே வந்த பின்னரும், இரு தரப்பினரும் நடுரோட்டில் மாறி மாறி தாக்கிக் கொண்டதாக கூறப்படுகிறது.
மாணவிகள் மீது கார் ஏற்றிய அதிர்ச்சி:
பின்னர், யான்சி, பவுசி தீபிகா மற்றும் அவர்களது ஆண் நண்பர்கள் உட்பட 4 பேர் இருசக்கர வாகனத்தில் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளனர். அப்போது எதிர் தரப்பினர் காரில் வேகமாக வந்து, அவர்கள் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது மோதியுள்ளனர்.
மேலும் படிக்க: லஞ்ச புகார்.. 3 போலீசார் சஸ்பெண்ட்… ஒரு காவலர் டிஸ்மிஸ்.. திண்டுக்கல் எஸ்.பி. மாஸ் ஆக்சன்!
இந்த சம்பவத்தில் யான்சி பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பவுசி தீபிகா படுகாயங்களுடன் உயிர்தப்பிய நிலையில், பொதுமக்கள் அவரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
தகவல் அறிந்த சி.எம்.பி.டி போலீசார் சம்பவ இடத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டனர். முதல் கட்ட விசாரணையில், திட்டமிட்டு இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதவிட்டு யான்சியை கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், கொலைக்கு பயன்படுத்தப்பட்ட காரில் திமுக கொடி பொருத்தப்பட்டிருந்தது தெரியவந்தது. பின்னர், இந்த சம்பவம் தொடர்பாக பாலகுரு என்பவரை கைது செய்து விசாரித்ததில், சுமன் சக்திவேல் என்பவர் காரை ஓட்டி யான்சியை மோதிக் கொலை செய்ததும், காரில் மொத்தம் 6 பேர் இருந்ததும் தெரியவந்தது.
சிகிச்சை பெற்று வந்த தீபிகா உயிரிழப்பு:
மேலும், யான்சி உயிரிழந்ததை அறிந்ததும், காரில் இருந்த திமுக கொடி மற்றும் நம்பர் பிளேட்டை அகற்றிவிட்டு குற்றவாளிகள் தப்பிச் சென்றதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, இந்த கொலை வழக்கில் சுமன் சக்திவேல், பாலகுரு உள்ளிட்ட 7 பேரை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
மேலும், சம்பவம் நடைபெற்ற மதுபான பாருக்கும் அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். இந்நிலையில், படுகாயங்களுடன் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பவுசி தீபிகா (17), இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதன் மூலம், கோயம்பேட்டில் கார் ஏற்றி நடத்தப்பட்ட இந்த கொலைச் சம்பவத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை இரண்டாக உயர்ந்துள்ளது.