தமிழகத்தில் ஜூலை முதல் மின் கட்டணம் உயர்கிறதா?.. முதல்வர் விஜய் எடுக்கப்போகும் முடிவு என்ன?..
மின்கட்டண திருத்தம் தொடர்பான பொதுமக்களின் கருத்துகள், ஆலோசனைகள் மற்றும் ஆட்சேபனைகளைக் கோரி மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. பொதுமக்கள் தங்களுடைய கருத்துகளை அடுத்த 15 நாட்களுக்குள் இணையதளம் வாயிலாகத் தெரிவிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்பின், ஒழுங்குமுறை ஆணையம் தனது இறுதிப் பரிந்துரையை மின்சார வாரியத்திற்குச் சமர்ப்பிக்கும்.
சென்னை, ஜுன் 05: தமிழகத்தில் ஆண்டுதோறும் ஜூலை மாதம் முதல் மின்சாரக் கட்டணம் திருத்தி அமைக்கப்படுவது வழக்கமாக உள்ள நிலையில், வரும் ஜூலை மாதம் முதல் மின் கட்டணம் மீண்டும் உயர்த்தப்பட வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்துப் பொதுமக்கள் தங்களின் கருத்துகளையும் ஆலோசனைகளையும் தெரிவிக்கத் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் (TNERC) 15 நாட்கள் அவகாசம் வழங்கியுள்ளது. தமிழகத்தில் கடந்த 2022-ஆம் ஆண்டுக்கு முன்பு வரை சுமார் 8 ஆண்டுகள் மின் கட்டணம் உயர்த்தப்படாமல் இருந்தது. அதன் பிறகு, புதிய விதிகளின்படி ஆண்டுதோறும் ஜூலை மாதத்தில் மின் கட்டண விகிதங்கள் திருத்தி அமைக்கப்பட்டு வருகின்றன.
இதையும் படிக்க: அரசு அலுவலகங்களில் இடைத்தரகர்கள், லஞ்சத்தை ஒழிக்க புதிய ‘ஒற்றைச் சாளர முறை’.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா சொன்ன குட் நியூஸ்!!
மின் கட்டண உயர்வுக்கான பின்னணி:
மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் விதிகளின்படி, மின் கட்டண உயர்வு என்பது இரண்டு முக்கிய காரணிகளின் அடிப்படையில் நிர்ணயம் செய்யப்படுகிறது. நுகர்வோர் குறியீட்டு எண் உயர்வு. அதிகபட்சமாக 6 சதவீதத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். இந்த இரண்டு காரணிகளில் எது குறைவாக இருக்கிறதோ, அதன் அடிப்படையில் தான் மின் கட்டண உயர்வு பரிந்துரைக்கப்பட வேண்டும் என்பது விதியாகும். அந்த வகையில், நடப்பு ஆண்டின் ஏப்ரல் மாதத்திற்கான நுகர்வோர் குறியீட்டு எண், கடந்த ஆண்டின் 3.16%-லிருந்து தற்போது 3.48% ஆக உயர்ந்திருப்பதாகத் தகவல்கள் கிடைத்துள்ளன. எனவே, இந்த விகிதத்தின் அடிப்படையில் மின்கட்டணம் உயர்த்தப்படலாம் என்ற சூழல் உருவாகியுள்ளது.
பொதுமக்கள் கருத்து தெரிவிக்க வாய்ப்பு:
மின்கட்டண திருத்தம் தொடர்பான பொதுமக்களின் கருத்துகள், ஆலோசனைகள் மற்றும் ஆட்சேபனைகளைக் கோரி மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. பொதுமக்கள் தங்களுடைய கருத்துகளை அடுத்த 15 நாட்களுக்குள் இணையதளம் வாயிலாகத் தெரிவிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்பின், ஒழுங்குமுறை ஆணையம் தனது இறுதிப் பரிந்துரையை மின்சார வாரியத்திற்குச் சமர்ப்பிக்கும்.
முதல்வர் எடுக்கப்போகும் முடிவு என்ன?
கடந்த காலங்களில் (2022, 2023, 2024, 2025 ஆகிய ஆண்டுகள்) தொடர்ந்து மின் கட்டணம் உயர்த்தப்பட்டது. கடந்த ஆண்டு 3.16% கட்டணம் உயர்த்தப்பட்ட போதிலும், தேர்தல் நேரமாக இருந்ததால் பொதுமக்கள் மீது சுமை விழக்கூடாது என்பதற்காக, வீட்டு நுகர்வோருக்கான கட்டண உயர்வை அரசே மானியமாக ஏற்றுக்கொண்டது. இதனால் பொதுமக்களுக்குப் பாதிப்பு இல்லாத போதும், சிறு மற்றும் குறுந்தொழில் நிறுவனங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்தன. தற்போது தமிழ்நாட்டில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள முதலமைச்சர் விஜய் தலைமையிலான புதிய அரசு இந்த விவகாரத்தில் என்ன முடிவு எடுக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இதையும் படிக்க: “13ம் ஜோக்கராக இருந்தால் என்ன செய்ய முடியும்?”.. தவெக அரசை சாடிய உதயநிதி ஸ்டாலின்!
அமைச்சரவை கூட்டத்திலும் ஆலோசனை:
மின்சார ஒழுங்குமுறை ஆணையம் கட்டண உயர்வைப் பரிந்துரைத்தால், கடந்த ஆண்டைப் போலவே வீட்டு நுகர்வோருக்கான சுமையை இந்த ஆண்டும் அரசே ஏற்குமா?அல்லது பொதுமக்கள் மீதே இந்த மின்கட்டண உயர்வு சுமை விழுமா?என்பது போன்ற சாத்தியக்கூறுகள் குறித்துத் தமிழக அரசு மற்றும் மின்சார வாரிய அதிகாரிகள் தீவிரமாக விவாதித்து வருகின்றனர். இன்று முதலமைச்சர் விஜய் தலைமையில் நடைபெறவிருக்கும் புதிய அமைச்சரவைக் கூட்டத்திலும் இது தொடர்பாக முக்கிய ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு, அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.