அரசு அலுவலகங்களில் இடைத்தரகர்கள், லஞ்சத்தை ஒழிக்க புதிய ‘ஒற்றைச் சாளர முறை’.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா சொன்ன குட் நியூஸ்!!
திட்டப்பணியைத் தொடங்குவதற்குப் பல்வேறு அரசுத் துறைகளிடம் பெற வேண்டிய அனுமதிகள் மற்றும் தடையில்லாச் சான்றிதழ்களை, 'ஒற்றைச் சாளர முறை' மூலமாக நெடுஞ்சாலைத் துறையே நேரடியாகப் பெற்றுத் தரும். "டெண்டர் எடுத்த பிறகு வேலை நடப்பதற்கான அனுமதிகளைப் பெற ஒப்பந்ததாரர்கள் அரசு அலுவலகங்களில் மணிக்கணக்காகக் காத்துக்கிடக்க வேண்டியதில்லை.
சென்னை, ஜுன் 05: நெடுஞ்சாலைத் துறை திட்டங்களைச் செயல்படுத்துவதில் நிலவும் காலதாமதம், இடைத்தரகர்களின் தலையீடு மற்றும் லஞ்ச ஊழல்களை ஒழிக்கும் வகையில் புதிய சீர்திருத்தங்கள் கொண்டு வரப்பட உள்ளதாக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார். இனி ஒப்பந்ததாரர்கள் அரசு அலுவலகங்களில் அனுமதி பெற மணிக்கணக்காகக் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை என்றும் அவர் திட்டவட்டமாகக் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், நெடுஞ்சாலைத் துறை திட்டங்களுக்குத் தேவையான சவுடு மண் உள்ளிட்ட மூலப்பொருட்களை வாங்குவதில் இதற்கு முன்பு பல நடைமுறைச் சிக்கல்களும், ஒப்பந்ததாரர்களிடையே பல்வேறு பிரச்சினைகளும் இருந்து வந்தன. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், நெடுஞ்சாலைத் துறையிலேயே பிரத்தியேகமாக ‘மார்க்கெட்டிங்’ என்ற ஒரு புதிய தனிப் பிரிவு உருவாக்கப்பட உள்ளது என்றார்.
இதையும் படிக்க: “13ம் ஜோக்கராக இருந்தால் என்ன செய்ய முடியும்?”.. தவெக அரசை சாடிய உதயநிதி ஸ்டாலின்!
இடைத்தரகர்கள் இல்லாத முறை:
இந்தத் துறையின் மூலம், ஒரு குறிப்பிட்ட திட்டப்பணிக்குத் தேவையான மூலப்பொருட்களின் அளவை ஒப்பந்ததாரர்கள் முன்கூட்டியே ஆர்டர் செய்துவிட்டால், நெடுஞ்சாலைத் துறையே நேரடியாகச் சுரங்கத்துறை மூலம் அதனைப் பெற்றுத் தரும். இதன் மூலம் ஒப்பந்ததாரர்கள் இடைத்தரகர்களையோ அல்லது அரசியல்வாதிகளையோ நாட வேண்டிய அவசியம் இருக்காது. மூலப்பொருட்களுக்கான தொகையை நேரடியாக அரசுக்கே செலுத்தலாம் இதன் மூலம் நடுவில் நடக்கும் லஞ்ச ஊழல்கள் முற்றிலுமாகத் தவிர்க்கப்படும்.
ஒற்றைச் சாளர முறை:
ஒப்பந்ததாரர்களுக்குத் திட்டப்பணிக்கான டெண்டர் ஒப்புதல் அளிக்கப்பட்டவுடன், அதற்கான தரச் சோதனைகளை மேற்கொள்வதுடன் மட்டும் அதிகாரிகளின் வேலை முடிந்துவிடாது. திட்டப்பணியைத் தொடங்குவதற்குப் பல்வேறு அரசுத் துறைகளிடம் பெற வேண்டிய அனுமதிகள் மற்றும் தடையில்லாச் சான்றிதழ்களை, ‘ஒற்றைச் சாளர முறை’ மூலமாக நெடுஞ்சாலைத் துறையே நேரடியாகப் பெற்றுத் தரும். “டெண்டர் எடுத்த பிறகு வேலை நடப்பதற்கான அனுமதிகளைப் பெற ஒப்பந்ததாரர்கள் அரசு அலுவலகங்களில் மணிக்கணக்காகக் காத்துக்கிடக்க வேண்டியதில்லை. அந்த வேலைகளை இனி நெடுஞ்சாலைத் துறையே பார்த்துக் கொள்ளும். இதனால் தேவையில்லாத லஞ்சப் பணம் செலவாவது தடுக்கப்படும்” என்று அமைச்சர் உறுதியளித்தார்.
தொழிற்பேட்டை சாலைகளுக்குத் தனித் திட்டம்:
சாலைகளின் தரம் குறித்துப் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, பூந்தமல்லி, ஒரகடம் போன்ற சிப்காட் மற்றும் தொழிற்பேட்டைகள் நிறைந்த பகுதிகளில் கனரக வாகனங்களின் போக்குவரத்து அதிகமாக உள்ளதாகக் குறிப்பிட்டார். இதனால், சாதாரண பயணிகள் பயன்படுத்தும் ஈசிஆர் சாலைகளைப் போலத் தொழிற்பேட்டை சாலைகளை அமைக்க முடியாது. கனரக வாகனங்களின் எடையைத் தாங்கும் வகையில், தொழிற்பேட்டை சாலைகளுக்கு என்று தனியாக பட்ஜெட் ஒதுக்கப்பட்டு, அதிகத் தரத்துடன் கூடிய பிரத்தியேக டெண்டர்கள் உருவாக்கப்படும்.
இதையும் படிக்க : “தவெக அரசு மீது மக்கள் கோபத்தில் உள்ளனர்!”.. பிரேமலதா விஜயகாந்த் விமர்சனம்!!
சாலை அமைத்த ஓராண்டிற்குள் மீண்டும் பழுதுபார்ப்புப் பணிகளுக்காக நிதி ஒதுக்குவதைத் தவிர்த்து, விபத்துகள் அதிகம் நடக்கும் பகுதிகள் மற்றும் தொழிற்பேட்டைப் பகுதிகளை முன்கூட்டியே சரியாகத் திட்டமிட்டு, தரத்தில் எந்தவொரு சமரசமும் இல்லாமல் சாலைகளை அமைக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கும் ஒப்பந்ததாரர்களுக்கும் அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.