“13ம் ஜோக்கராக இருந்தால் என்ன செய்ய முடியும்?”.. தவெக அரசை சாடிய உதயநிதி ஸ்டாலின்!
இந்த ஆட்சியில் நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர்களுக்குத் தங்களுக்கு என்ன இலாக்கா ஒதுக்கப்பட்டுள்ளது என்றே தெரியவில்லை. ஒரு அமைச்சர் செய்தியாளர்களைப் பார்த்து, 'நான் சுற்றுச்சூழல் அமைச்சரா அல்லது சுற்றுலாத்துறை அமைச்சரா?' என்று கேட்கிறார். ஒரு கோமாளி அரண்மனைக்குச் செல்வதால் அவன் அரசன் ஆகிவிட முடியாது, மாறாக அந்த அரண்மனை சர்க்கஸ் கூடாரமாக மாறிவிடும் என்ற பழமொழி தான் இன்று தமிழ்நாட்டில் நிஜமாகியுள்ளது
சென்னை, ஜுன் 05: தமிழ்நாட்டில் புதிய அரசு பொறுப்பேற்று 25 நாட்கள் நிறைவடைந்துள்ள நிலையில், மக்களின் பாதுகாப்புக்கோ அல்லது மாநில முன்னேற்றத்திற்கோ உருப்படியாக எந்தவொரு திட்டமும் கொண்டு வரப்படவில்லை என்று திருவல்லிக்கேணி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார். தற்போதைய ஆளுங்கட்சியின் செயல்பாடுகளை “மாயாஜால கவர்ச்சி அரசியல்” மற்றும் “சோபா மாடல் ஆட்சி” என்று அவர் சாடியுள்ளார். இதுகுறித்து சென்னை சேப்பாக்கத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அவர் பேசியதன் விவரங்கள் குறித்து இக்கட்டுரையில் விரிவாக காணலாம்.
இதையும் படிக்க : “தவெக அரசு மீது மக்கள் கோபத்தில் உள்ளனர்!”.. பிரேமலதா விஜயகாந்த் விமர்சனம்!!
திமுக அரசின் சாதனைகளுடன் ஒப்பீடு:
கடந்த 2021-ஆம் ஆண்டு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற முதல் நாள் அன்றே, மிக மோசமான நிதி நெருக்கடி மற்றும் கொரோனா பேரிடர் காலத்திலும் மகளிருக்கான விடியல் பயணத் திட்டம், ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.4000 கொரோனா நிவாரண நிதி, ஆவின் பால் விலை குறைப்பு, மற்றும் பெட்ரோல் விலை குறைப்பு போன்ற வரலாற்றுச் சிறப்புமிக்க மக்கள் நலத்திட்டங்களில் கையெழுத்திட்டார் என்பதை உதயநிதி ஸ்டாலின் நினைவு கூர்ந்தார். ஆனால், தற்போதைய புதிய அரசோ, ஒரு கூடுதல் செலவில்லாத திட்டத்தைக் கூட முறையாகத் தொடங்கத் துப்பில்லாமல் இருப்பதாகக் குற்றம் சாட்டினார். காவல் துறையினரின் வாகனங்களுக்கு வெறும் ஸ்டிக்கர்களை மட்டும் மாற்றி “சிங்கப்பெண் திட்டம்” என்று விளம்பரம் செய்வதைத் தவிர இந்த ஆட்சியில் வேறொன்றும் நடக்கவில்லை என்றார். ம
முதல்வருக்கும் தெரியாத சட்டமன்ற உறுப்பினர்கள்
தற்போதைய ஆளுங்கட்சி 108 இடங்களில் வெற்றி பெற்றிருந்தாலும், அதில் கிட்டத்தட்ட 106 தொகுதிகளில் தங்களுக்கு ஓட்டு போட்ட மக்களுக்குத் தங்கள் தொகுதி எம்.எல்.ஏ யார் என்றே தெரியவில்லை என்று சவால் விட்டார். இதற்கு உதாரணமாக, திருவள்ளூர் மாவட்டத்தில் அண்மையில் ஏற்பட்ட மின்வெட்டின் போது போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள், “எங்கள் தொகுதி எம்.எல்.ஏ யார் என்றே தெரியாது, தெரிந்தால் தானே அவர் வீட்டிற்குச் சென்று கேட்க முடியும்” என்று நிருபர்களிடம் ஆதங்கப்பட்ட நிகழ்வைச் சுட்டிக்காட்டினார். அதுமட்டுமன்றி, நேற்று ஒரு அமைச்சர் பக்கத்துத் தொகுதிக்குச் சென்று தவறாக நன்றி அறிவித்த கூத்தும் நடந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இலாக்காக்கள் தெரியாத அமைச்சர்கள்:
ஆளுங்கட்சியின் அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்களின் பின்னணி குறித்துப் பேசிய அவர், போதைப்பொருள் விற்றவர்கள், கஞ்சா வியாபாரிகள், குடும்ப வன்முறையாளர்கள், ஜோசியத்தின் மூலம் கேன்சரை குணப்படுத்தலாம் என்று ஏமாற்றிய போலி மருத்துவர்கள் மற்றும் வாச்சாத்தி கொடுமைக்குக் காரணமானவர்கள் தான் இன்று சட்டமன்றத்தில் அமர்ந்திருக்கிறார்கள் என்று அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். அமைச்சரவையின் நிர்வாக லட்சணத்தைக் கிண்டல் செய்த உதயநிதி ஸ்டாலின், “இந்த ஆட்சியில் நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர்களுக்குத் தங்களுக்கு என்ன இலாக்கா ஒதுக்கப்பட்டுள்ளது என்றே தெரியவில்லை. ஒரு அமைச்சர் செய்தியாளர்களைப் பார்த்து, ‘நான் சுற்றுச்சூழல் அமைச்சரா அல்லது சுற்றுலாத்துறை அமைச்சரா?’ என்று கேட்கிறார். ஒரு கோமாளி அரண்மனைக்குச் செல்வதால் அவன் அரசன் ஆகிவிட முடியாது, மாறாக அந்த அரண்மனை சர்க்கஸ் கூடாரமாக மாறிவிடும் என்ற பழமொழி தான் இன்று தமிழ்நாட்டில் நிஜமாகியுள்ளது. ரம்மி விளையாட்டில் 13 கார்டுகளும் ஜோக்கராக வந்தால் என்ன செய்ய முடியும்? அப்படித்தான் இந்த சோபா மாடல் அரசு ஓடிக் கொண்டிருக்கிறது” என்று காரசாரமாகப் பேசினார்.
இதையும் படிக்க : அண்ணாமலை புதிய கட்சி தொடங்குவது குறித்து அவரிடம் தான் கேட்கவேண்டும் – நயினார் நாகேந்திரன்..
திமுகவின் பவளவிழா பாரம்பரியம்:
முதலமைச்சர் திருச்சிக்கு நன்றி தெரிவிக்கச் சென்ற போது புதிய திட்டங்கள் எதையும் அறிவிக்காமல், எதற்கெடுத்தாலும் திமுக மீது பழி போடுவதையே வாடிக்கையாகக் கொண்டுள்ளார் என்று அவர் கூறினார். திமுக 75 ஆண்டுகளைக் கடந்து பவளவிழா கண்டுள்ள இயக்கம் என்றும், எமர்ஜென்சி காலம் உட்பட பல்வேறு அரசியல் ஏற்றத்தாழ்வுகளையும், தோல்விகளையும் கண்டு மீண்டு வந்த பாரம்பரியம் கொண்டது என்றும் பெருமிதம் தெரிவித்தார். அதோடு, முதலமைச்சருக்குத் தன்னை யாரோ விமர்சித்துக் கொண்டே இருக்கிறார்கள் என்ற “ஃபோபியா” பயம் இருப்பதாகக் கூறிய அவர், கருப்பு கோட்டு சூட் அணிவதற்குப் பெரியாரின் கொள்கை என்று முதலமைச்சர் கொடுக்கும் விளக்கம் ஒரு மோசமான உருட்டு என்றும், ஆளுங்கட்சி எல்லாவற்றிலும் கோட்டை விட்டுக் கொண்டிருப்பதை திமுக தொடர்ந்து மக்களுக்காகத் தட்டியெழுப்பும் என்றும் கூறினார்.